அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீசாயாதேவி சமேத சக்கர சூரிய தேவர்

அட்டைப்பட விளக்கம் :
ஸ்ரீசூரியபகவான்தான் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவன்கட்கும் உரித்தான ஜீவசக்தியைத் தினந்தோறும் அளித்து வருகிறார். ஒரு நாள் சூரியன் உதிக்காவிடில் ..... சற்றே சிந்தித்துப் பாருங்கள்... பூலோக வாழ்க்கை எவ்வாறு இயங்கும்? இன்றைக்கும், உலகில் எப்போதும் இருண்டுள்ள பகுதிகள் உண்டு. நார்வே போன்ற பகுதிகளில் தொடர்ந்து பகல் பொழுதும் அல்லது இரவுப் பொழுதும் அமைந்து சமுதாய வாழ்க்கையே வித்தியாசமானதாக அமைகின்றது... புழு, பூச்சிகள் , தாவரங்கள், விலங்குகள், தேவர்கள், மனிதர்கள் வரை அனைவருக்கும் உரித்தான தெய்வீக ஜீவசக்தியை அளிப்பது ஸ்ரீசூரியபகவானே! ஆனால் நாம் முறையாக அவரை வழிபடுவதும் கிடையாது!
சூரிய நமஸ்காரம் என்று நம் பெரியோர்கள் வகுத்துத் தந்த சூரிய வழிபாடானது சூரிய உதய நேரத்தில் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். சூரியனை நாம் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானப் பூர்வமாகப் பல அறிவுரைகள் நமக்குத் தரப்படுகின்றன. நம் மூதாதையரோ “வருணபாசம் (பாசாங்குலி) முத்திரை” எனும் ஓர் அரிய அற்புதமான விரல்களின் முத்திரைப் பாங்கினைத் தந்து இம்முறையில் ஸ்ரீசூரியபகவானை காலைப் பொழுதில் தரிசித்தால் நேத்ர சக்தி பெருகுவதாக உணர்த்தியுள்ளார்கள். ஆனால் இதனையாவது நாம் முறையாகக் கடைபிடிக்கின்றோமா? காலை, மதியம், மாலை சந்தியாவந்தன வழிபாடுகளில் வருணபாச (பாசாங்குலி) முத்திரை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த வருண பாசம் முத்திரையை அமைக்கும் போது இதனுள் ஏற்படுகின்ற பல அபூர்வமான கோணங்களினால் கூடுதல் அக்னிப் பிரவாகத்தினின்று நம் கண்ணைத் தற்காத்துக் கொள்ளலாம்.
பல தலங்களில் சிவசூரியன் எனும் நாமத்தில் அருள்பாலிக்கின்றார். ஸ்ரீசூரிய பகவானை மணந்த போது அவரது அக்னிப் பிரவாகத்தைத் தாங்க இயலாது ஸ்ரீசாயா தேவியானவள் அவரைப் பிரிந்து அருணாசல திருத்தலமடைந்து சூரியபகவானின் அக்னி சக்தியைத் தாங்கும் அளவிற்குத் தனக்குப் புனிதமும், தெய்வீகத் தன்மையும் அருளுமாறு பிரார்த்தித்து பல கோடி யுகங்கள் தவமிருந்து கிரிவலம் வந்து சர்வேஸ்வரனை வேண்டினள். இதற்காகத் தவ முடிவில் ஸ்ரீசாயா தேவிக்கு ஸ்ரீசர்வேஸ்வரன் சில அக்னி மந்திரங்களை உபதேசித்த போது இறையருளால் ஸ்ரீசூரியபகவானும் அருகில் இருந்து அவற்றின் மகிமையை நன்கு உணர்ந்து ஆனந்தமடைந்தார். அவற்றில் சிலவே முக்கியமாக பல மஹரிஷிகள் மூலம் சாட்சுஷோபநிஷ் மந்திரங்களாக நமக்கு அபூர்வமாகக் கிட்டியுள்ளன.. தீர்க்கமான கண்ஒளியை பெறுவதற்காகவும், கண் நோய்கள் தீரவும் இம்மந்திரங்களை ஓதி வந்தால் நன்முறையில் நேத்திரங்கள் பாதுகாக்கப்படுவதோடு பிள்ளைகள் துதித்திடில் ஆயுள் முழுதும் கண்ணாடி அணிய வேண்டியதின்றித் தீர்க்கமான பார்வை கிட்டும்.
ஆனால் இதில் உள்ள இறை நியதி யாதெனில் இம்மந்திரங்களை ஓதி வருவோர் நல்ல நிகழ்ச்சிகளையும், நல்ல காட்சிகளையும் மட்டுமே காணும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்., எக்காரணங் கொண்டும், காமாந்தக சினிமா, பத்திரிகைகள் போன்ற தீய செயல்களைக் காண்கின்ற வழக்கத்தைக் கொள்ள கூடாது.. பொதுவாக இந்த சாட்சுஷோபநிஷத் மந்திரங்களை நாள்தோறும் ஓதி வருவோர்க்கு நல்ல தரிசனங்கள், சகுனங்கள், நற்காட்சிகள் கிட்டுவதுடன் இறை சோதனையாகப் பலவித தீய காட்சிகள், டி.வி கம்ப்யூட்டர் மூலமாகக் காணும் நிர்பந்தம் ஏற்பட்டாற் கூட அவற்றை வெறுத்து ஒதுக்கி, “எதுவும் இறை சாசுவதமல்ல, அக்னி ரூபமாக விளங்கும் சர்வேஸ்வரனையே நம் கண்கள் காண வேண்டும்,” என்ற சாட்சுஷோபநிஷத் மந்திரத்தின் தாத்பர்யத்தை உணரும் தெய்வீக சக்தி கிட்டும்..
ஸ்ரீசாயா தேவி சமேத சூரியன் தேவரே இந்த மந்திரங்களை நமக்கு நான்மறையாக போதிக்கக் காத்திருக்கிறார். எண்ணிறந்த மந்திர பீஜாட்சரங்களை உடைய இந்த சாட்சுஷோபநிஷத் மந்திரமானது நமக்கு கலியுக ரீதியாகக் குறைக்கப்பட்டு நமக்கு மிகவும் சிறியதாகக் கிட்டியுள்ளது எளிய பூஜைதானே! செய்திடுங்களேன் !
ரதசப்தமியானது (24.1.1999) ஸ்ரீசாயாதேவி சமேத ஸ்ரீசக்கர சூரிய நாராயண சுவாமிக்கு மிகவும் உரித்தானதாக விளங்குகிறது.. எனவே, இந்நாளில் கண்ணொளி தருவதற்காகவும், கண் நோய்கள் நிவாரணம் பெறுவதற்காகவுமான ஸ்ரீசாயா சமேத ஸ்ரீசக்கர சூரிய நாராயண சுவாமியின் மந்திர சக்தியாக விளங்குகின்ற இந்த சாட்சுஷோபநிஷத் மந்திரத்தை நன்முறையில் ஓதி அனைவரும் நல்ல இறைவாழ்வும், கண்ணொளியும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஸ்ரீசாயாதேவி சமேத ஸ்ரீசக்கர சூரிய பகவானைப் பிரார்த்திப்போமாக!
சாக்ஷுஷோபநிஷத்
கண்ணொளி தரும் மாமந்திரம். தினமும் சூரிய உதய நேரம், பகல் உச்சிப் பொழுது (அபிஜித் முகூர்த்த நேரம்), மாலை சூரிய அஸ்தமன நேரத்தில் ஓதிவர நேத்திர சக்தி விருத்தியடையும்.
ஓம் சக்ஷுச்’சக்ஷு: |
சக்ஷுஸ்தேஜ3 :
ஸ்தி2ரோ ப4வ மாம் பாஹி |
த்வரிதம் சக்ஷூரோகாந் ச’மய ச’மய:
மம ஜாத ரூபம் தேஜோ3 த3ர்ச’ய த3ர்ச’ய |
யதா(அ)ஹமந்தோ ந ஸ்யாம் ததா க்ருபயா கல்யாணம் குரு குரு: |
மம யாநி யாநி பூர்வஜ3ந்மோபார்ஜி3தாநி சக்ஷு:
ப்ரதிரோத4க து3ஷ்க்ருதாநி ரோகாணி ஸர்வாணி நிர்மூலய நிர்மூலய ||

ஓம் நமச்’சக்ஷுஸ் தே3ஜோ தாத்ரே தி3வ்ய பாஸ்கராய |
ஓம் நம: கருணாகராய – அம்ருதாய |
ஓம் நமோ ப4க3வதே ஸூர்யாய அக்ஷிதேஜ3ஸே நம: |
ஓம் கே2சராய நம: |     ஓம் மஹதே நம: |        ஓம் ரஜ3ஸே நம: |
ஓம் தமஸே நம: |         ஓம் ஸத்வாய நம: |
அஸதோ மா ஸ்த்க3மய |
தமஸோ மா ஜ3ஜோதிர்க3மய ||
ம்ருத்யோர் மா அம்ருதம் க3மய ||
உஷ்ணோ ப4க3வாந் சு’சிரூப: |
ஹம்ஸோ ப4க3வாந் சு’சிர: ப்ரதிரூப: |
ய இமாம் சாக்ஷுஷ்மதீம் வித்3யாம் ப3ராஹ்மணோ நித்யமதீ4தே |
ந தஸ்யாக்ஷி ரோகோ பவதி |
ந தஸ்யகுலே அந்தோ ப4வதி ||
அஷ்டௌ ப3ராஹ்மணாந் க3ராஹயித்வா வித்3யா ஸித்3தி4ர் ப4வதி ||
ஓம் விச்’வரூபம் க4ருணீந் ஜா4த வேத4ஸம் ஹிரண்மயம் ஜ3யோதீ ரூபம் தபந்தம் |
ஸஹஸ்ரரச்’மி:
ச’ததா வர்த்3தமாந:
புருஷ: ப்ரஜாநா-முத3யத்யேஷ ஸூர்ய: ||
ஓம் நமோ ப4க3வதே ஆதி3த்யாய அக்ஷிதேஜ3ஸே அஹோ வாஹிநி வாஹிநி ஸ்வாஹா ||
ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பால பருவ குருகுல வாச அனுபூதிகள் தொடர்.
.... அப்பப்பா எத்தனை எத்தனை சோதனைகள் தாம் குருகுல வாசத்திலே!
“ஏதோ சற்குரு பக்கத்திலிருக்கிறார், எல்லாமே சந்தோஷமாக நடக்கும், நாம் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை...” என்று எண்ணிய சிறுவனுக்குத்தான் எப்படிப்பட்ட தெய்வீகப் பாடங்களை எல்லாம் புகட்டி எப்படி எப்படியெல்லாம் சிறுவனைத் தெய்வீகப் பாதையில் ஒளிபெறச் செய்தார் தெரியுமா? அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், மூலஸ்தான பிரதிஷ்டை, ஜோதிடம், நியூமராலஜி, மூலிகை ரகசியங்கள், சக்கரப் பிரதிஷ்டைகள், எந்திர மற்றும் நவரத்தின சூட்சும ரகசியங்கள், குருவித்தை பாஷாண கட்டுமுறை, விதவிதமான தெய்வ மூர்த்திகளுக்கான விசேஷமான ஹோம குண்டங்கள்  என எத்தனையோ விதமான தெய்வீகக் கலைகளைப் பெரியவரிடமிருந்து சிறுவன் கற்றுக் கொண்டான்... இல்லை, இல்லை, சற்குருவின் கடாட்சமாக அவையெல்லாம் சிறுவனுக்குத் தாமாகவே புரியலாயின!
“ஏன் வாத்யாரே! இதெல்லாம் எனக்கு எதுக்கு வாத்யாரே! உன்னோடதானே நான் சுத்திக்கிட்டு இருக்கப் போறேனே! இதலெல்லாம் தெரிஞ்சுகிட்டு நான் என்ன செய்யப் போறேன்!” சிறுவனல்லவா, ஒன்றும் புரியாமற் கேட்டு விட்டான்?
பெரியவர் சிரித்தார்! ....
“ ஏண்டா நீ என்ன பச்சக் குழந்தையா, இடுப்புல தூக்கிட்டு சுத்திகிட்டு இருக்கிறதுக்கு... ஆச்சு...இது வரைக்கும் நூத்துக் கணக்கா ஏன் பழைய ஜன்மக் கணக்கு எடுத்தா, ஆயிரமாயிரம் வாட்டி அண்ணாமலையை நீயும் கிரிவலம் வந்தாச்சு... ஆயிரக் கணக்குல உனக்கு அண்ணாமலை தரிசனங் காட்டியாச்சு! நீ இதத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு என்ன செய்யப் போறேன்னு கேக்கறியே! ஏண்டா இதெல்லாம் உனக்கா சொல்லிக் கொடுத்தேன்! நீ எம் மேல நம்பிக்கைய கடைசி வரைக்கும் வச்சாலே போதுமே, அந்த நம்பிக்கை ஒண்ணே கடைசி வரைக்கும் உன்னக் கரையேத்திடுமேடா!”
 “ஆனா.... ஆனா.. ” பெரியவர் சற்றே நிறுத்தினார்..!  அவர் கண்கள் பனித்தன! குரல் தழுதழுத்திட..... கூரிய கண்களுடன் பெரியவர் சிறுவனை நோக்கிட...... அப்பப்பா..! அக்கண்களுத்தான் என்ன பிரகாசம்! என்னே தெய்வீக ஒளி!
“உன்னைக் கரையேத்தறது எங்க டூட்டிடா..! ஏன்னா இந்த கிழவனை நம்பி வந்து சேர்ந்துட்டே..... ஆனா குருன்னா யாரு... என்னன்னு தெரியாம எவ்வளவு பேரு ஏங்கறாங்க.. குரு இல்லாம தட்டுத் தடுமாறி வாழ்க்கை நடத்தறாங்க.... அவங்களுக்கெல்லாம் யார் எடுத்துச் சொல்றது.. நீதாண்டா பெரியவனாயி எடுத்துச் சொல்லணும்.... சின்ன வயசுலேயே இதெல்லாம் கத்துக்கிட்டு பெரியவனா ஆஸ்ரமமெல்லாம் கட்டி பிரச்சாரஞ் செஞ்சு பத்திரிக்கை வெச்சு, பிள்ளைங்க, இளைஞர்கள், பெரியவங்களெல்லாம் வெச்சு தான, தர்மம் பண்ணி இந்த கலியுகத்துல, இருக்கிற தீய சக்திகளோட போராடி தெய்வீகமாக ஜயகோஷம் பாடணும்டா..? செய்வீயாடா.. ராஜா? ”
சிறுவன் உஷாரானான்... ஏற்கனவே அவர் இவ்வாறு கேட்டு இவன் எதையோ சொல்லிப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டான்.. அவருடைய கண்களை ஊடுருவிப் பார்த்தான்... ஏதோ கோடானு கோடி சூரியன்களை ஒன்றாகச் சேர்ந்து பார்த்தாற் போல்.... கண்கள் மிகவும் கூசியவனாய்ச் சிறுவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்! தேகத்தினுள் ஏதோ ஒரு POWERFUL சக்தி ஊடுருவதை அவனால் நன்கு உணர முடிந்தது.
இவ்வாறாகப் பெரியவர் நேருக்கு நேராக, சிறுவனுக்குப் பலமுறை பார்த்து நேத்ர தீட்சை தந்ததுண்டு! அதன் மஹிமையைப் பற்றிப் பெரியவரே அவ்வப்போது விளக்கி இருக்கிறார்.!
“ஒரு சற்குரு உன்னை ஆத்மார்த்தமா உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கறார்னா அதுக்கு ஆயிரமாயிரம் அர்த்தமுண்டு! ஏன்னா, ஒரு சற்குருன்னா அவருக்கு ஆயிரமாயிரம் தெய்வீக தரிசனங்கள் கெடச்சிருக்கும். எத்தனையோ கோடி யுகமா, மஹரிஷியாக, யோகியோ, ஞானியா இருந்தவங்கதான் சற்குருவா வராங்க! அப்படீன்னா எவ்வளவு கோடி புண்ய தீர்த்தம், சுவாமி தரிசனம், தீப தரிசனம், கிரிவல சக்தி இன்னும் எத்தனையோ கோடி தரிசன பூஜை பலன் எல்லாம் ஒண்ணு திரண்டு அவர்கிட்ட குடியிருக்குமில்லையா! அதனால் தாண்டா மஹான்கள் ஒருமுறை பார்த்தாலே ரொம்ப விசேஷம்னு சொல்வதுண்டு!”
பெரியவர் சிறுவனைக் கூட்டிக் கொண்டு எத்தனையோ முறை கொல்லிமலை சென்று எத்தனையோ தரிசனங்களைப் பெற்றுக் கொடுத்தது மட்டுமின்றிப் பலவிதமான மூலிகைகளின் தெய்வீக ரகசியங்களையும் புலப்படுத்தினார்! எதற்கு? ஸ்ரீஅகஸ்தியர் பாரம்பரியத்தில் வந்தோர்க்கு குறித்த பல மூலிகைகளின் தரிசனங்களைக் குறித்த திதிகளில் குறித்த சில தலங்களில் பெற்றாக வேண்டும் என்ற குருகுல நியதிகளும், விதிகளும் உண்டு. எழுதாக் கிளவியாக, வாக் தத்துவமாக குருபாரம்பர்ய அட்சரங்களாக இவை உணர்த்தப் பெறுகின்றன..
இதைத்தான் சிறுவன் கொல்லி மலையில் பெற்றான். இங்கு தான் ஸ்ரீகோரக்க சித்தரின் குகை அருகே பல ஆண்டுகளுக்கு முன் பெரியவர் சிறுவனுக்கு கானொபஸ் (CANOPUS) எனப்படும் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியின் நட்சத்திர தரிசனத்தைச் செய்து வைத்து பல குருமந்திரங்களை உபதேசித்தார்... அம்மந்திரங்கள் தாம் கடந்த தீபப் பெருவிழாவின் போது (2.12.1998) நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரம நுழைவாயிலருகே சுவற்றில் குருவாக்யங்களாகப் பதிக்கப் பெற்றுள்ளன.. ஏன் இத்துணை ஆண்டுகள் கழித்து குரு வாக்கியங்கள் வெளிவருதல் வேண்டும்?
ஜப மந்திர விதிகளில் வருகின்ற புரஸ்சரண விதிமுறைகளைப் போல எவ்வாறு சத்குரு தியாகராஜ சுவாமிகள் 96 கோடி முறை ஸ்ரீராமநாம மந்திரம் ஓதிய பிறகே ஸ்ரீசீதாதேவி சமேத ஸ்ரீராமரை தரிசனம் பெற்றது போல, பெரியவராம் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளால் ஸ்ரீஅகஸ்திய நட்சத்திர நேத்திர தரிசனத்திற்குப் பிறகு சித்த குருவேத சூக்த மந்திரங்களாக ஓதுவிக்கப்பட்ட குருமந்திரங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் எத்தனையோ கோடி முறை ஜபித்து, தியானித்து, பெரும் புண்ய நதிகளில் ஜலபூர்வமாக காசி, திரிவேணி சங்கமம், கங்கோத்ரி போன்ற இடங்களிலும், ஐந்து வகையான பிரயாக் நதி தீரங்கள், பத்ரிநாத், கௌரி குண்டம், ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற கங்கா நதி தீரங்களில் வசுந்தர ஜல யோகமாகவும், காவிரி தீரங்களில் தலைக்காவிரி, மெர்க்காரா, திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை, ஸ்ரீரங்கம், மோகனூர், கொடுமுடி, கபிஸ்தலம், ஐயாறு மற்றும் பல தீர்த்தவாரி ஜல யோகமாகவும்... திருஅண்ணாமலை, கொல்லிமலை, பச்சைமலை, பர்வதமலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி, தங்கால், சேதி குறிச்சான் மலை, அய்யர்மலை போன்ற சித்தர்கள் என்றென்றும் (கற்பாறைகளில், மூலிகை மேடுகளில் சிலாதர ஜபயோகம்) நடமாடும் இடங்களிலும், இம்மந்திரங்களை, குருவாய் மொழிகளை மந்திரசித்தி செய்து தற்போது தம் சற்குருநாதராம் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் சற்குரு அனுகிரகமாக ஆஸ்ரம வாயிலில் குருமந்திர மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன..
Every Syllable is brimming with Satguru’s preternatural benevolence absolutely. உபதேச மொழியெனில் அதற்கு சர்வ வலிமையும் உண்டே! அதிலும் கோடானு கோடி முறை ஜபித்த, தியானித்த, யோகித்த, சித்தி செய்தவைகளெனில், அதிலும் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்தர் போன்ற ஏகாந்த ஜோதி சித்தராய் என்றும் வாழ்கின்ற சித்தப் பெருமானால் உபதேசிக்கப்பட்டதெனில் என்னே அதன் மஹிமை! ஓதிப் பாருங்களேன்! உத்தம குரு அரவணைத்திடுவாரே! இச்சிறுவனே சற்குருவின் ஆசியால் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தை நிர்மாணித்து வருவதுடன் மாதாந்திரப் பௌர்ணமி தோறும் அருளாளராம் திருஅண்ணாமலையாரின் அருட்கருணையால் கிரிவல அடியார்கட்கு அன்னப் பிரசாதம்  படைக்கும் குருமங்கள கந்தர்வாவாக ஸ்ரீவெங்கடராமனாகப் பரிமளிக்கின்றார்... நம்மால் தான் எந்த மந்திரத்தையும் இந்த இயந்திர கதியான கலியுக வாழ்க்கையில் ஒரு ஆயிரம் முறை கூட துதித்திட முடியவில்லை.. கோடானு கோடி முறை ஜபித்து தியானிக்கப்பட்டு சற்குருவால் அளிக்கப்படுகின்றதென்றால் அந்த மந்திரங்களின் தெய்வீக சக்தியை நாம் அவற்றை முறையாக தினந்தோறும் துதித்து வந்தால் எளிதில் தரவல்லதன்றோ குருமகானின் கருணை.!

உததீ மகா சித்த புருஷர்

சென்னை அருகே சென்னை – அரக்கோணம் இருப்புப் பாதையில் தக்கோலம் என்னும் சிவத்தலத்தில் பிரஹார மதில் சுவரின் மேல் சுதை ரூபத்தில் தரிசனம் தருகின்ற ஸ்ரீஉததீ மஹா சித்புருஷரின் உருவத்தையும், கோயிலின் உட்புறம் ஒரு இரகசிய சந்நிதி அறை போல் அமைந்துள்ள ஸ்ரீஉததீ மாமுனியின் ஜீவ சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்தியையும், சென்ற இதழில் (ஜனவரி 1999 பின்புற அட்டைப்படத்தில்) அளித்திருந்தோமல்லவா? அவற்றின் விளக்கங்களை இங்கு தருகின்றோம். உதீத மஹரிஷி என்று அழைப்பாரும் உண்டு. பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்ற தக்கோலத் திருத்தலத்தில் தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்து அருள்புரிந்து அன்றும் இன்றும் என்றும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் ஸ்ரீஉததீ சித்புருஷர் நமக்கு அருள்புரிகின்றார்.
சித்தர்கள் எல்லாம் கோடிக்கணக்கான ஆண்டுகள் தவம் புரிந்து சிவதரிசனம் பெற்று என்றும் திருக்கயிலாயத்தில் உறைகின்ற பாக்கியத்தைப் பெற்றவர்கள். சிவபதவி பெற்றவர்க்கு மீண்டும் பிறவி ஏனோ? சித்புருஷர்கள் சிவ ஆக்ஞைப்படி மீண்டும் பூலோகத்திற்கு வந்து ஏதேனும் பிறப்பெடுத்து அல்லது மனித உருக்கொண்டு எத்தனையோ ஜீவன்களைக் கடைத்தேற்றுவதற்கும் இறையாணையால் பூலோகத்திற்கு வருகின்றனரே தவிர அவர்கள் மேலும் அடைய வேண்டிய உயர்ந்த உத்தம இறைநிலை எதுவும் கிடையாது. அவர்கள் சிவத்தில் ஐக்யம் ஆனவர்கள் ஆதலின் அவர்கள் எடுக்கின்ற பிறப்பு, இறப்பு அனைத்துமே இறை ஆணைக்குக் கட்டுப்பட்டதாகும். மற்ற ஜீவன்கள் அனைத்தும் அவரவர் கர்ம வினைகட்கேற்பப் பிறவிகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கையில் சித்புருஷர்கள், மஹரிஷிகள், யோகியர் போன்றோர் யாவரும் இறைநியதிக்கு உட்பட்டவர்களாக சிவத்திலிருந்து சிவாம்சமாகப் பிரிந்து மீண்டும் சிவத்துடன் ஐக்கியமடைகின்றார்கள்.. இந்த சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபர்களாக விளங்குகின்ற சித்புருஷர்கள்தான், துன்பங்களில் புரண்டும், மாயவினைகளில் தத்தளிக்கும், கர்மவினைகளின் சூழலுக்கு ஆட்பட்டிருக்கும் ஜீவன்களைக் கடைத்தேற்றுவதற்காக நல்அருளைத் தந்து, நல்வழி காட்டி வருகின்றார்கள். எனவே, இதில் நம்முடைய கடமை என்னவெனில் நம்முடைய சற்குருவாக அவர்களைச் சரணடைந்து அருள் வழி காண்பதேயாகும்..
இவ்வகையில் தக்கோலம் சிவாலயத்தில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக விளங்குகின்ற உததீ சித்புருஷர் கலியுக மக்களுக்கு எத்துணையோ முறைகளில் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். அவருடைய ஜீவாலய சமாதி லிங்கப் பிரதிஷ்டையில் இன்றைக்கும் அவர் சூட்சுமமாக உறைந்து தம்மை வலம் வருவோர்க்கெல்லாம் அருள்புரிந்து வருகின்றார். உயர்ந்த கோயிலின் மதில் மேல் யோக நிலையில் அமர்ந்து நமக்கு சுதை ரூபத்தில் தரிசனம் தரும் உததீ சித்புருஷரின் திருஉருவை அண்ணாந்து பார்த்தோமேயானால் எத்துணையோ அற்புத வரங்கள் நமக்குக் கிட்டுகின்றன. ஏதோ கோயில் கும்பாபிஷேகத்தின்போது அவரது திருவுரு அவ்வாறு அமைக்கப்பட்டது போல், நமக்கு மிகவும் சாதாரணமாகத்தான் தோன்றும். சிற்பியாய் இருந்தாலும், கொத்தனாராய் இருந்தாலும், கட்டிடத் தொழிலாளியாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருடைய கோயில் இறைப் பணிகளின் போது, அவரவர் மூதாதையரும், பித்ருக்களும் எத்துணையோ மஹான்களும், யோகியரும், அவரவர் தேகத்தில் சூட்சுமமாகக் குடிபுகுந்து பலவித அற்புத உருவங்களை வடித்துச் செல்கின்றனர். எனவே, இது ஒரு சிற்பியின் வேலை என்றோ, ஒரு ஓவியரின் ஓவியம் என்றோ எவரது இறைப் பணியையும் வெறுமனே கருதாதீர்கள்! அனைத்தும் அவன் செயலே!
இதற்காகத்தான் ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரத் திருப்பணியை மிகச் சிறந்த இறைப்பணியாக நமக்குத் தந்துள்ளார்கள். ஏனென்றால் சாதாரணமாக கோயிலுக்குச் செல்லும் போது நாம் பத்து நிமிடங்கட்கு மேல் அங்கு தங்குவது கிடையாது. ஏதோ வேகமாகச் சென்று ஒரு முறை பிரதட்சிணம் செய்து விட்டு உடனேயே திரும்பி விடுகின்றோம். இதுதானா கோயில் தரிசன முறை? 24 மணி நேரங்களில், பஸ் ஸ்டாண்டிலும், அலுவலகத்திலும், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்களிலும், எத்துணை ஆயிரம் மணித் துளிகளை நாம் வீணடிக்கின்றோம் என எண்ணிப் பார்த்தால் இறை தரிசனத்திற்காக நம்மை ஒவ்வொரு வினாடியிலும் வாழ வைக்கின்ற இறைவனுக்காக ஐந்து அல்லது பத்து நிமிடம் கூட ஒதுக்குவது கிடையாது அல்லவா.
ஏன் இந்த இழிநிலை? வேட்டி, துண்டு அணிந்து, சுவாச கலைகள் சற்றும் மாறாது சூரிய, சந்திர கலையிலோ அல்லது சுழுமுனையிலோ சுவாசித்து மிகவும் அமைதியாக, சாந்தமுடன் நாம் பெற வேண்டிய ஆலய தரிசனத்தை பேண்ட், சர்ட்டுடன், ஷுவுடன் ஏதோ ஆபீஸ் முடிந்து வரும் போது சென்று பார்ப்போம் என்னும் எண்ணத்துடன் நாம் இதனை ஒதுக்கி வைத்து விட்டோம். இப்படி நாம் இறைவனையே மறந்து வாழ்ந்தால் இறைவனுக்காக ஒரு சில மணித் துளி கூடச் செலவிட மனமின்றி மிகவும் சுயநலமாக, லௌகீகமாக வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படி இறையருளைப் பெற இயலும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! எனவே தான் இதற்கு மாறாக ஒரு சற்குருவின் அருளாணையின் கீழ் சத்சங்கமாக உழவாரத் திருப்பணிகளை நாம் மேற்கொள்வோமாயின் இதில் எத்துணையோ கர்மவினைகள் மிக எளிதில் கழிகின்றன. பாவ தோஷங்கள் அழிகின்றன. மஹான்களும் வலம் வந்து உலாக் கொண்டுள்ள கோயில்களில் நாம் உழவாரத் திருப்பணிகளில் சில மணி நேரங்களாவது கோயில்களில் இருப்பதை விட உத்தமமாக நன்முறையில் நம் நேரத்தை செல்வழிக்கும் பாக்கியம் வேறு எவ்விதம் கிட்டும்?
தக்கோலம் சிவாலயத்தில் உள்ள ஜீவசமாதி ஆலயத்தில் உறைந்திருக்கும் ஸ்ரீஉததீ சித்புருஷரானவர் நமக்குப் பலவிதமான அருள்வழி முறைகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். நாம் முன்பே கூறியது போல கோயிலில் நுழைந்தவுடனேயே உயர்ந்த மதில் சுவரில் யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீஉததீ மாமுனிவரை கழுத்தை உயர்த்தி வான் நோக்கி மேலே நாம் தரிசனம் செய்வதே வசுபூரண தரிசனமாகும்.. இதுவரையில் சமநிலையில் கண்களை நோக்கியவாறோ அல்லது பாதாளத்தில் இருக்கின்ற தெய்வ மூர்த்தியையோ (திருச்சி மலைக்கோட்டை பாதாள அய்யனார், திருஅண்ணாமலை ஸ்ரீரமண மஹரிஷி வழிபட்ட பாதாளலிங்கம், விருத்தாலசத்திலுள்ள ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்) ஆஜானுபாகுவாக 10, 20 அடி உயரமுள்ள தெய்வ மூர்த்திகளை நாம் தரிசிக்கின்றோமே தவிர, என்றேனும் அண்ணாந்து பார்த்து கோபுர தரிசனம் போல ஏதாவது சித்புருஷ தரிசனம் நாம் செய்துள்ளோமா? இதுதான் உததீ மாமுனியின் உத்தமப் பேறாகும். உததீ மாமுனிவர் பலரையும் அரிய திருப்பணிகளைச் செய்ய வைத்து தம்மை அண்டி வந்தோரை அவரவரின் கர்மவினைப் ப(ல)யன்களை எளிய முறையில் சீரமைத்துத் தந்து அவர்கட்கு நல்லருள் புரிந்தவராவார்.
அவர்தம் முக்கியத் திருப்பணி என்னவெனில் ஆலய கோபுரங்களில் ஊடு பயிராக விளங்குகின்ற மரங்களையும், செடிகளையும் நீக்கி ஆலய கோபுரங்களைப் பாதுகாப்பதாகும். ஆலய கோபுரத்தில் செடிகள் வேர்விட்டு முளைத்து விடுமாயின் அது ஆலய கோபுரத்தையே பதம் பார்த்து விடுமல்லவா? இது மட்டுமின்றி நட்சத்திர தியான முறையிலே நட்சத்திர யோகதரிசனம் எனும் அபூர்வ யோகாசனத்தில் அமர்ந்து இரவு பூஜையிலே சிறந்து விளங்கியவரே ஸ்ரீஉததீ மாமுனியாவார். பகலெல்லாம் பல ஆலயங்கட்கும் சென்று ஆலய கோபுர மற்றும் விமானத் திருப்பணிகளை ஆற்றி, இரவில் சற்றும் உறங்காது வானத்தில் உள்ள நட்சத்ராதி, கிரஹ தேவதை மூர்த்திகளைப் பலவிதமான துதிகளால் வணங்கி கண் துஞ்சாது, சிவ மந்திரங்களை ஓதியவாறு மிகச் சிறந்த தபோபலன்களைப் பெற்று, அவற்றை ஜீவன்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.
உங்களுடைய நட்சத்திரத்தை நீங்கள் அறிவீர்கள். உங்கள் பிறந்த தேதியோ, நட்சத்திரமோ தெரியாவிடில் அதை அறியும் நாடிகளும் உண்டு. எனவே, அவரவர் நட்சத்திரமும், அவரவரர் தம் கோத்ராதிபதியையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி, மத, இன குல பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கோத்திராதிபதி உண்டு. அதாவது நாம் அனைவரும் ஏதேனும் ஒரு மஹரிஷியின் பாரம்பரியத்தில் வந்தவர்களே. இதில் எவ்வித வேறுபாடும், பாகுபாடும் கிடையாது.. ஆனால் காலப்போக்கில் துரதிருஷ்டவசமாக இறைபக்தி மங்கியமையால் தான் நம்முடைய மூலாதர மஹரிஷி யார் கோத்ராதி பதி யார் எனத் தெரியாமற் போய்விட்டது..
64க்கும் மேற்பட்ட கோத்திராதிபதிகளுக்கும், பிரவர மஹரிஷிகளும் உண்டு.. இவர்கள் எல்லோரும் வானத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தைத் தம் உறைவிடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு குறித்த காலம் தவம்புரிந்து பின்னர் இறை ஆணையாகப் பல லோகங்கட்கும் சென்று வருகின்றனர்.. உதாரணமாக நீங்கள் பாரத்வாஜ கோத்திரம் எனில் (கோத்திரம் என்றால் மரபு, வம்சாவழி) நீங்கள் ஸ்ரீபாரத்வாஜ மஹரிஷி வழிவந்தவர்கள் என்று பொருள். உங்கள் நட்சத்திரம் பரணி என்றால் நீங்கள் ஸ்ரீபாரத்வாஜர் வழிவந்தவராய், அவர் பலவித நட்சத்திர மண்டலங்களில் தவம் புரியும் போது அவர்தம் ஆசியால் அவர் பரணி நட்சத்திர மண்டல பூஜையின் போது அவரவரின் பூர்வ ஜென்ம கர்மவினைகளுக்கேற்ப நீங்கள் பிறப்பெடுத்துள்ளீர்கள் என்பது பொருள்.
எனவே ஒவ்வொருவரும் தினந்தோறும் இயன்றவரை அனைத்து நட்சத்திரங்களையும், முத்திரைகளால் தரிசித்தாக வேண்டும். இதற்கு நட்சத்திர பீட நமஸ்காரம் என்று பெயர். நட்சத்திரங்கள் எல்லாம் வெறும் ஒளிக் கோளங்களோ அல்லது ஜடப்பொருட்களோ அல்ல. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு தேவதா மூர்த்தியாகும். உயர்ந்த உத்தம இறைநிலை கொண்டோர்க்குதான் இவ்வாறு நட்சத்திரமாகப் பிரகாசிக்கும் தெய்வத் திருவருள் கிட்டும். எனவே ஒவ்வொரு இரவிலும் எந்த அளவிற்கு நட்சத்திரங்களைத் தரிசிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நட்சத்திர நேத்திர சக்தி பெருகுகின்றது... இவ்வாறாக நட்சத்திர தியானத்திற்கு மிகச் சிறந்த தலம் தக்கோலம் ஆகும்.
இங்கு விடியற்காலையிலும், மாலையும் இருளும் சேரும் நேரத்திலும், இங்கு அமர்ந்து நட்சத்திர தரிசனம் பெறுவது மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இங்கு தான் இரவு நேர தியான முறையில் தாமும் தியானித்துப் பிறருக்கும் உபதேசித்து நல்வழி காட்டியவரே ஸ்ரீஉததீ முனிவர்! கலியுக மனிதனானவன் பகல் நேரத்திலே, தொழில், கல்வி, குடும்பம் போன்றவற்றிற்காகச் செலவழிக்கிறானே தவிர இறைத் திருப்பணிக்காகவோ, வழிபாட்டிற்கோ அவன் ஒதுக்கும் நேரம் சில நிமிடத் துளிகளேயாகும். இரவு நேரமோ, உறக்கத்திற்கும், பலவித தீயவழிகட்கும் ஆட்பட்டதாய் அமைந்து விடுகின்றது. பின் எவ்வாறு தான் ஒரு மனிதனானவன் தன்னுடைய தெய்வீக நிலையில் முன்னேறுவதற்காக, தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுளை நன்கு பயன்படுத்த இயலும்? இதற்கு இரவு நேர தியானங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.
சில குறிப்பிட்ட திதிகளிலும், நட்சத்திரங்களிலும், நாட்களிலும் சில குறிப்பிட்ட இரவு நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜைகள், தியானங்கட்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. ஆதலின் இப்பூஜைகளின் இந்த அபரிமிதப் பலன்களால் செய்யாமல் விடுபட்ட பூஜைகட்கும் நந்நேரத்தை வீணே கழித்தமைக்கும் பிராயச்சித்தமாக அமைகிறது... உததீ சித்புருஷர் கலியுக மக்களின் நேரப் பற்றாக்குறை, நேரத்தை வீணாக்கும் தன்மையையுணர்ந்து, தீர்க்க தரிசனத்துடன் தான் தன் ஜீவசமாதியில் உததீ சக்திகளைத் தன் தபோ பலன்களின் திரட்சியாகப் பதித்துள்ளார். எனவே, தக்கோலத்தில், குருவாரமாக விளங்குகின்ற வியாழனன்று குருஹோரை நேரத்தில் (காலை 6 முதல் , மாலை 1 முதல் 2, இரவு 8 முதல் 9) போன்ற குரு ஹோரை நேரங்களில் 21 முழு எலுமிச்சம் பழங்களாலான மாலைகளை வைத்து குரு மந்திரங்களை ஓதி (தட்சிணாமூர்த்தி நாமாவளி, ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், கல் ஆலின் புடையமர்ந்து .. பாடல் .., திருமூலர், அப்பர், சம்பந்தர், மணிவாசகர் போன்றோரின் குரு துதிகளை)  நன்கு ஓதி குறைந்தது அரைமணி நேரமேனும் தியானித்து குரு பகவானுக்குரித்தான மஞ்சள் நிற எலுமிச்சம் பழம் அன்னம் போன்ற உணவுப் பண்டங்களை ஜீவசமாதிக்குப் படைத்து தானமாக அளித்திட வேண்டும். சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட எலுமிச்சை மாலையை இல்லத்தில் வைத்து பூஜையில் வைத்து மறுநாள் அதனை அன்னமுடன் கலந்து எலுமிச்சை சாதமாக தானமளிக்க வேண்டும்..
ஒவ்வொரு மனிதனும், இரவில் தான் பல தீய வினைகளையும், தீவினை சக்திகளையும் சேர்த்துக் கொள்கிறான்... முறையற்ற காமச் செயல்களால் விந்துக் குற்றங்களும், கொலை, கொள்ளை, போன்ற தீய செயல்களும் இரவில் தான் நிகழ்கின்றன. மனிதப் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் இவ்வாறாக இரவில் கூடுகின்ற தீவினை சக்திகளைக் களைய இரவு நேரப் பூஜைகளை மேற்கொண்டு அதன் பலன்களாக சமுதாயத்தைப் புனிதப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.
ஆனால் இன்றைய கலியுகத்தில் எவர்தான் இரவு நேர பூஜையை மேற்கொண்டு இவ்வித சமுதாயப் பூஜையைச் செய்து வருகிறார்கள்? இதற்காகத்தான் அக்காலத்தில் ‘அர்த்தஜாமப் பூஜை’ ஒன்றை நிகழ்த்தி அதில் எல்லோரும் பங்கு கொண்டு இரவு நேரம் நன்கு கழியப் பிரார்த்தனை செய்வார்கள். இது மிகச் சிறந்த சமுதாய பூஜை! ஆனால் இன்றோ எட்டு மணிக்கு மேல் ஆலயங்களில் எவரையும் காண்பது அரிதாயுள்ளது. கோயில் பள்ளியறைப் பால் பிரசாதம் என்பது மிகவும் விசேஷமானதாகும். அர்த்த ஜாமப் பூஜைக்குப் பின் நிகழ்கின்ற பள்ளியறைப் பால் வைபவத்தில் பங்கு கொண்டு இறைவனுக்கு வைக்கப்படுகின்ற பாலை அருந்துவோர்க்கு சந்நதி பாக்கியம் நிச்சயமாகக் கிட்டும்.
லட்சமாய்ப் பணத்தை மருத்துவத்தில் கொட்டுவதை விடத் தொடர்ந்து இரவு நேர அர்த்த ஜாமப் பூஜையில் பங்கு பெற்று பள்ளியறைப் பாலை அமிர்தப் பிரசாதமாக உண்டு வந்தால் இறைவனே நல்முறையில் அருள் கூட்டுவான்... உததீ மஹரிஷியின் ஜீவாலய சமாதிக்கு வியாழன், திங்கட்கிழமைகளில் குரு ஹோரை நேரத்தில் மூலிகைக் காப்பிடுதல் மிகவும் விசேஷமானதாகும். மூலிகைகட்குரித்தானவர்கள் தானே சித்புருஷர்கள். அதிலும் உததீ மஹரிஷியானவர் மூலிகைத் தாவரங்களின் தெய்வீக சக்தியுணர்ந்து அவற்றின் சாற்றினை மூலிகா பந்தன முறைப்படி மாத சிவராத்திரி தோறும் அருகிலுள்ள ஆற்றில் கலந்து அதன் பலன்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் மகத்தான தெய்வீகப் பணியாற்றினார்.
குறிப்பாக மாத சிவராத்திரி தோறும் தக்கோலத்தில் பள்ளியறைப் பால் நைவேதனம், மூலிகைத் தைலக் காப்பு, எலுமிச்சை அன்னதானம், நட்சத்திர பூஜைகளை நடத்தி வருதல் மிகவும் விசேஷமானதாகும்... மது, முறையற்ற காமம், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்கட்கு அடிமையானோர் வியாழன் தோறும், குருஹோரையில் உததீ சித்புருஷ லிங்க பிரதிஷ்டா மூர்த்தியை வணங்கி அவருடைய ஜீவ சமாதிக்கு அபிஷேக ஆராதனைகளையும் அவர் மிகவும் போற்றிய கீரைகள், மூலிகைகள் கலந்த உணவு பண்டங்களையும் படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்து வருதலால் எத்தகைய தீயவழக்கங்கட்கும் உததீ மாமுனியின் குருவருளால் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு அவை அறவே நீங்குவதற்கான நல்வழியும் கிட்டும்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்

பிரதோஷம், அபிஜித் முகூர்த்த நேரம் (பகல் 12.00 மணி). பிரம்ம முகூர்த்த நேரம், மகர சங்கரந்தி புண்ணிய காலம் (தை மாதப் பிறப்பு) போன்று விஷ்ணுபதி புண்ணிய காலமும் மிகவும் புனிதமான, தெய்வீக நேரமாக விளங்குகின்றது. பல கோடி யுகங்களாக மகரிஷிகளாலும், சித்த புருஷர்களாலும், யோகியர்களாலும், உத்தம பக்தி நிறைந்தவர்களாலும் சமுதாயத்தில் நன்கு கொண்டாடப்பட்டு வந்த ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமானது கலியுகத்தில் தற்போது பெரிதும் மறைந்துள்ளதைக் குறித்து வேதனை அடைகின்றோம்.
ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகிமையை மீண்டும் மக்களுக்கு எடுத்துரைத்து அதனுடைய புனிதத் தன்மையை நன்கு விளக்கி, எவ்வாறு, பிரதோஷ உற்சவமானது இன்றைக்கு இலட்சக்கணக்கான ஆலயங்களில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றதோ அதே போல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக வருடத்திற்கு நான்கு முறை வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய விசேஷ நாட்களும் நன்கு மீண்டும் மக்களிடையே பிரசித்தி அடையும் பொருட்டு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் குருவருள் கடாட்சத்துடன் அற்புதப் பணி புரிந்து வருகின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகிமையைப் பற்றிச் சித்புருஷர்களின் கிரந்தங்களிலிருந்து சிறப்பான விளக்கங்களுடன் நன்கு எடுத்துரைத்து வருகின்றோம் நம் குருமங்கள கந்தர்வாவின் பெருங்கருணையினால்.!
விஷ்ணுபதி புண்ணிய காலமானது பொதுவாக சூரியோதயத்திற்கு முன்னர் அதாவது இரவு 2.00 மணி முதல் பகல் 10.30 மணி வரை அமைந்து விளங்குகின்றது. இப்புனிதமான காலத்தில் தான் எத்தனையோ தெய்வீக அவதார வைபவங்களும், அவதாரத் தோற்றங்களும், புராண லீலைகளும் நிகழ்ந்துள்ளன. ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமானது தேவாதி தேவமூர்த்திகளாலேயே மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற தான தர்மங்கள், தர்ப்பண பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், வஸ்திர தானம், அன்னதானம், பொன் மாங்கல்ய தானம் போன்ற பலவிதமான தான, பூஜைகளுக்கு அபரிமிதமான பலன்கள் கிட்டுகின்றன. ஏனென்றால் தேவ மூர்த்திகளின் பூஜா அனுகிரஹங்களோடு இவை நடத்தப் பெறுகின்றன அல்லவா!
தற்போதைய சமுதாயத்தில் ஒவ்வொரு வீட்டிலுமே தினசரி பூஜைகள் முறையாக நடைபெறுகின்றனவா என்று யோசித்துப் பாருங்கள். ஏதோ காலையிலும், மாலையிலும், விளக்கேற்றுவதோடு சரி! இவ்வளவு தானா நம்முடைய பூஜை முறைகள்? இறைவன் நமக்குத் தந்துள்ள இந்த புனித உடலை ஊண், உறக்கம் கொண்டு வெறுமனே சம்பாதித்து உடலைப் பேணுவது மட்டும் தானா இந்த வாழ்க்கை? மனைவி, மக்கள் குடும்பத்துடன் வசதியாக வாழ்வதற்காக மட்டுமா இந்த மனிதப் பிறவியை எடுத்தோம்? எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, நடுத்தர, மக்களாக இருந்தாலும் சரி, வறுமையில் வாழ்கின்ற ஏழையாக இருந்தாலும் சரி எவருக்குத்தான் துன்பங்கள், இடர்கள், நோய்கள் இல்லை? எனவே எப்போது கலியுக மனிதனாவன் தன்னுடைய நித்திய இறைவழிபாடுகளைத் தள்ளி வைத்து விட்டானோ அப்போதே சராசரி கலியுக மனிதனின் வாழ்க்கை முழுதுமே இதனால் சமுதாயமே இன்னல்களும், துன்பங்களும், வறுமையும், பிணியும் நிறைந்த வாழ்க்கை மயமானதாகவே விளங்குகின்றது. இதற்கு நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்.
இத்தகைய அளவற்ற துன்பங்களுக்கு ஒரு பரிகாரமாகவும், பிராயச்சித்தமாகவும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலம் அமைகின்றது. இந்த புண்ணிய காலத்தில் நீங்கள் செய்கின்ற அனைத்து நற்காரியங்களின் பலாபலன்கள் பன்மடங்காவதால் நீங்கள் முறையாகச் செய்யாத தினசரி பூஜைகளுக்காகவும் நீங்கள் இழந்து வருகின்ற புண்ணிய சக்திக்காகவும், நிவர்த்தியைத் தருவதாக அமைந்திருப்பதே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும். நம் மூதாதையர்களாலும் நன்கு கொண்டாடப்பட்டு வந்து இதுவரையில் பஞ்சாங்கத்தில் மட்டுமே பதிந்து கிடக்கின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால மகிமையினை ஸ்ரீஅகஸ்திய விஜய இதழ் மூலம் நமக்கு எடுத்துரைத்து வரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
பகுதான்ய ஆண்டின் சிசிர ருது காலத்திற்கு உரியதாகவும் இவ்வாண்டின் கடை புண்ணிய காலமாகவும் அமைகின்ற இந்த விஷ்ணுபதி காலமானது மிகவும் சிறப்புடையதாகும். ஏனென்றால் இந்த சிசிர ருதுக் காலத்தில் தான் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது எத்தனையோ விசேஷமான பொருட்கள் வெளிவந்தன...பாற்கடலில் வெளிவந்த கௌஸ்துப மணி, ஸ்ரீசந்திர மூர்த்தி, ஸ்ரீமகாலட்சுமி, மூத்த சகோதரியான ஸ்ரீஜேஷ்டா தேவி பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். நாம் ஸ்ரீஜேஷ்டா தேவியின் மஹிமையைப் பற்றி மட்டும் இங்கு தொடர்கின்றோம். ஏனென்றால் இதுதான் தற்போதைய சிசிர ருது விஷ்ணுபதி புண்ணிய காலத்திற்கு உரியதாக அமைந்திருக்கின்றது. ஸ்ரீலட்சுமி தேவியின் மூத்த சகோதரியாக விளங்குகின்ற ஸ்ரீஜேஷ்டா தேவியும் நாம் தினமும் வழிபடுவதற்கு உரித்தான தெய்வ மூர்த்தியே ஆவாள்.. இன்றைக்கும் பல திருத்தலங்களிலும் ஸ்ரீஜேஷ்டா தேவியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.. ஆனால் ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு உரித்தான வழிபாட்டு முறைகளைப் பலரும் அறியாததனால் ஸ்ரீகால பைரவரைப் போல, ஸ்ரீசண்டிகேஸ்வரரைப் போல பல ஆலயங்களிலும் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து அருளாட்சி செலுத்துகின்றாள் ஸ்ரீஜேஷ்டா தேவி! என்னே நம் அறியாமை!
நாம் அனைவரும் ஸ்ரீஜேஷ்டா தேவியைக் கண்டிப்பாக வழிபட வேண்டும். தரித்திரத்தைத் தருபவளே ஸ்ரீஜேஷ்டா தேவி என்று தவறாகக் கருதப்படுகின்றது. உண்மையில் மடமை, தரித்திரம்தனை முழுவதுமாக நீக்கி தரித்திரமற்ற நிலையைத் தந்தருள்பவளே ஸ்ரீஜேஷ்டா தேவி ஆவாள். எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, சில விஷயங்களிலாவது அவன் தரித்திரம் பிடித்தவனாக இருக்கிறான் என்பது கண்கூடு. உதாரணமாக, கோடீஸ்வரனாக இருக்கின்ற ஒருவர் சர்க்கரை வியாதி, நரம்பு வியாதி போன்றவற்றால் அவதியுறும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கூட உண்ண இயலாத அளவிற்குத் தரித்திர நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அவரால் மூட்டை, மூட்டையாக சர்க்கரையைப் பங்களாவில் குவிக்க முடியும் என்றாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கூட தைரியமாக உண்ண முடியவில்லை என்றால் அதுவும் தரித்திரம் தானே! எனவே, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலு பரிபூணத்துவம் நிறைவதற்காகவும், தரித்திரம் எங்குமே நிலவா வண்ணம் ஐஸ்வர்யம் வந்து தங்குவதற்கான நல்ல சூழ்நிலையைத் தருபவளே ஸ்ரீஜேஷ்டா தேவியாவாள். அதனால் தான் இன்றைக்கும் பல ஆலயங்களில் ஸ்ரீஜேஷ்டா தேவியின் விக்ரஹங்கள் காணப்படுகின்றன.. வழிபடுவதற்கு உரித்தான மூர்த்தி என்பதால் தானே ஸ்ரீஜேஷ்டா தேவி எத்தனையோ ஆலயங்களில் எழுந்தருளியிருக்கின்றாள்!
பாற்கடலில் இருந்து ஸ்ரீமகாலட்சுமிக்கு மூத்தவளாக முன்னதாக எழுந்தருளிய ஸ்ரீஜேஷ்டா தேவி கரிய நிறம் கொண்டவளாய், அருவருக்கத் தக்க கோர ரூபம் கொண்டவளாகவும் இருந்தாள்.. இதற்குக் காரணம் என்ன? சர்வ லட்சணங்களும் பொருந்தியவர்களாகவே தெய்வ மூர்த்திகள் விளங்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா! ஸ்ரீகணபதியானவர் தும்பிக்கையுடன் அவதாரம் கொள்வதற்கு முன்னர் ஆதிமூல விநாயகராக தும்பிக்கை இன்றிக் காட்சியளித்தார். (உதாரணம் : திருச்சி நன்றுடையார் கோயில், திலதைப்பதி), அதன் பிறகு யானை உருவத்தைக் கொண்ட பொழுது முதலில் அதனை இலட்சணமான திருவுருவமாக எவரும் கருதவில்லை. காலப்போக்கில் தான் பிள்ளையார் என்றால் அழகான தும்பிக்கையானாக அருள்மழை பொழிகின்ற உருவ விளக்கத் தோற்றமே என்ற எண்ணம் மனித சமுதாயத்தில் ஏற்பட்டது. இதேபோல அகிலாண்டேஸ்வரியான ஸ்ரீபார்வதி தேவி ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியாக அவதாரம் கொண்ட பொழுது கோரப் பற்களையும், தொங்குகின்ற நீண்ட நாக்கையும் கொண்டு மஹாகாளி உருவத்தில் பயங்கரமான தோற்றத்துடன் காட்சியளித்தாள். இதற்காக பிரத்தியங்கிரா தேவி தரிசனமானது பயங்கர வடிவுடையது என்றா சொல்ல முடியும்?
பயம், பொறாமை, குரோதம், விரோதம், முறையற்ற காமம் மற்றும் எண்ணற்ற தீவினை சக்திகளையெல்லாம் அழிக்கவல்ல ஸ்ரீபிரத்யங்கிரா தேவியின் பயங்கர வடிவுதான் எத்தனையோ மகரிஷிகளுக்கும், யோகியர்களுக்கும் மோட்ச நிலையையும், முக்தி நிலையையும் தந்திருக்கின்றது என்பதை நாம் உணர்ந்திடல் வேண்டும். இதே போன்று தான் ஸ்ரீஜேஷ்டா தேவியானவள் பாற்கடலில் கரிய நிறத்துடன், பலவிதமான அரூபலட்சணங்களுடன் தோன்றினாள். அவலட்சணங்கள் என்று கூறுவதே மாபெரும் தவறு. ஏனென்றால் ஜீவன்களுடைய, அசுரர்களுடைய, தேவர்களுடைய தீய எண்ணங்கள் தாம் அவ்வாறாயின! பாற்கடலைக் கடைந்த பொழுது ஒருமித்த ஏகாந்த சிந்தனையோடு தான் தேவாதி தேவர்கள், அசுரர்கள் கடைந்தார்களா? இல்லையே! ஒவ்வொரு தேவருக்கும், அசுரருக்கும் எத்தனையோ பேராசை எண்ணங்களும், அசுர எண்ணங்களும், ஆசைகளும், பேராசைகளும் நிறைந்து பலவிதமான எண்ணங்களுடன் தானே பாற்கடலைக் கடைந்தனர்.!
பாற்கடலோ மிகவும் புனிதமானது. பாற்கடல் என்பது பிரபஞ்சத்தில் மிகவும் சுத்தமான பாலைத் தன்னுடைய தீர்த்தமாகக் கொண்டுள்ளது ஆகும். இதில் பிறக்கின்ற அன்னப் பறவை தான், எந்த உலகத்திலும் சரி பாலையும், தண்ணீரையும் தனித்துப் பிரிக்கின்ற சக்தியைத் தன்னுள் கொண்டிருக்கின்றது. எனவே, பாற்கடல் கடையப்பட்ட பொழுது அதில் தேவர்களும், அசுரர்களும் கலந்த எத்தனையோ விதமான எண்ணத்தை தன்னுடைய தேகத்தில் சுமந்துதான் ஸ்ரீஜேஷ்டா லட்சுமி இந்த அரூப லட்சண உருவத்தைப் பெற்றாள்..
உண்மையில் சௌந்தரிய சுந்தரியே அவள்! மகாலட்சுமியைப் போன்று மிகுந்த தேஜஸையும், தெய்வீகப் பேரொளியையும் கொண்டவள். ஆனால் மிகப் பெரிய தியாக சீலத்துடன் மகாலட்சுமிக்கு முந்தையவளாக, மூத்தவளாகப் பாற்கடலில் தோன்றியமையால் பாற்கடலின் புனிதத்துவத்தை மாசுபடுத்திய அனைத்துவிதமான எண்ணங்களையும் தம் உடலில் தாங்கியமையால் தான் அந்த  எண்ணங்களின் நிறத்துடன் கருமையாக வெளிவந்தாள்.
பூமாறு புனிதமுடைத்து!
கையில் துடைப்பத்தைத் தாங்கி இருக்கின்ற ஸ்ரீஜேஷ்டா லட்சுமியை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஏன் இந்தத் துடைப்பம்? துடைப்பம் என்பது நமக்கு ஒரு அருவருக்கத்தக்கப் பொருளாகத்தானே வீட்டில் கிடக்கின்றது. ஆனால் இதே விளக்குமாறு எனப்படுகின்ற துடைப்பம் தான் மிகச் சிறந்த சகுனமாக விளங்குகின்றது என்பதை நாம் மறந்து விடலாகாது. ஏனென்றால் நீங்கள் வெளிச் செல்லும் பொழுது எவரேனும் தெருவைக் கூட்டுகின்ற காட்சியைக் காண்பீர்களேயானால் அது மிகச் சிறந்த சகுனமாக இன்றைக்கும் கருதப்படுகின்றது. சகுன சாத்திரத்தில் இது உண்மையே! தரித்திரம் துடைக்கப்படுகின்ற காட்சி தகைமையான காட்சிதானே! எனவே கையில் துடைப்பத்துடன் வீட்டையோ, தரையையோ சுத்தப்படுத்துகின்ற காட்சியைக் கண்டால் அது மிகச் சிறந்த சுபசகுனமாக அமைந்து நீங்கள் எடுத்த காரியத்திற்கு, செல்கின்ற வேலைக்குக் காரிய சித்தியைப் பெற்றுத் தருகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஏனென்றால் இன்றைக்கு நாம் பூமாறு என்று சொல்கின்ற துடைப்பமானது மிகச் சிறந்த மூலிகைத் தாவரங்களுள் ஒன்றாகும். பூந்துடைப்பம் எனப்படும் பூமாறு செடியானது மூலிகை வைத்தியத்திலே மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. உண்மையில் பூமாறுச் செடிப் பூக்களை மாலையாகத் தொடுத்து வழிபடுவோரும் உண்டு என்பதைக் கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! மலைவாழ் மக்கள் இந்த பூந்துடைப்பஞ் செடியின் காய்ந்த பூக்களைத் தான் அழகாக, மாலைகளாகத் தொடுத்து வழிபாட்டுக்கு உரியதாக அமைப்பது கேட்பதற்கே வியப்பைத் தருவதாகும். கல்யாணச் சீர்ப் பொருட்களில் கூட பூந்துடைப்பத்தையும் வைத்து அதனை மங்களகரமான பொருட்களில் ஒன்றாகச் சேர்க்கின்றார்கள் என்பதும் நாம் அறிந்த ஒன்று தானே!
இதே போன்றுதான் ஸ்ரீஜேஷ்டா தேவி எழுந்தருள்கின்ற கழுதை வாகனமும் மிகச் சிறந்த சுபசகுனமாகவும் அழைக்கப்படுகின்றது. கழுதை எதிரில் வருவதும், கத்துவதும் சிறந்த சுபசகுனங்களாகும் என்பதை நாம் நன்கு அறிவோம் அல்லவா! ஏனென்றால் கழுதை கத்துவது அதன் அடித் தொண்டையிலிருந்து எழுகின்ற சட்ஜப் பிரவரப் புனித சப்தமாகும். பொறுமைக்கும், பணிவிற்கும் அணிகலனாகத் திகழ்கின்ற கழுதையின் பல தெய்வீகக் குணங்களை நாம் அறிந்திலோம். கழுதைப் பால் என்பது இன்றைக்கும் பல நாடுகளில் மிகச் சிறந்த பானமாகக் கருதப்பட்டு வருகின்றது. ஒட்டகப் பாலை விட மிகுந்த சக்தி உடைய கழுதைப் பாலானது மிகச் சிறந்த மூலிகைக் குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. கழுதைப் பாலில் நீராடி வருவோருக்கு ஒளி பொருந்திய தேகமும், தேஜசும் கிட்டும். இதனை இன்றைக்கும் எகிப்து நாட்டில் கடைபிடித்து வருகின்றார்கள். பலவிதமான தோல் நோய்களைத் தீர்ப்பதற்காகக் கழுதைப் பாலில் நீராடுவது இயற்கை வைத்திய முறைகளுள் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. கழுதைப் பாலில் ஆற்று மணலைச் சேர்த்து உடலில் களிம்பாக அப்பி வந்தால் பலவிதமான கொடிய தோல் நோய்களுக்கு நிவர்த்தியாக இது அமைகின்றது.
இறைவன் படைப்பில் அனைத்தும் ஒன்றே!
உலகத்தில் நாம் எவற்றையெல்லாம் அருவருக்கத் தக்கதாகக் கருதுகின்றோமோ அவைதான் இறைத் திருவிளையாடலாக மிகச் சிறந்த குணங்களை, சுபசகுனங்களை உடையதாகவும் அமைந்து மனித வாழ்க்கைக்குப் பெரிதும் உதவுகின்றது.. இவையெல்லாம் இறைப் படைப்பில் உள்ள தெய்வீக இரகசியங்கள் ஆகும். எனவே, புழு, பூண்டு முதல் கோழி, நாய், மனிதன், தேவர் வரை அனைத்துப் பிறப்புக்களுக்குப் பின்னாலும் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் உண்டு. எந்த இறைப் படைப்பும் வீண் போவதில்லை. சிங்கமோ, புலியோ, கரடியோ அந்தந்தப் படைப்பும், அதனதனுக்குரித்தான பணியை, கர்மங்களைச் செவ்வனே செய்து வருவதால்தான் இன்றைய உலக வாழ்க்கை பல ஜீவ சத்சங்கமாக நடந்து வருகின்றது. ஜாதி, மத வேறுபாடு மட்டுமல்லாது ஆணோ, பெண்ணோ, தாவரமோ, விலங்கோ இதில் எவ்வித வேறுபாடும் கூடாது. இது மிகவும் உயர்ந்த தெய்வீக நிலையாகும்.
ஏனென்றால் இன்றைக்கு மனிதனாகப் பிறப்பெடுத்தவன் நாளைக்குப் புழுவாகவோ, பூச்சியாகவோ, தாவரமாகவோ, விலங்காகவோ எந்தப் பிறப்பாகவும் ஆகிடலாம். இன்றைக்கு நீங்கள் பார்க்கின்ற தாவரங்களும், சிங்கமும், புலியும், யானையும் உங்கள் பூர்வ ஜென்ம நட்பாகவோ, உறவாகவோ நிச்சயமாக அமைந்திருக்கக்கூடும். உங்கள் வீட்டில் வளர்கின்ற ஒவ்வொரு மரத்திற்கும், ஒவ்வொரு செடிக்கும், தினமும் மலர்களைப் பறிக்கின்ற உங்களுடைய ஒவ்வொரு ஒவ்வொரு பூச்செடிக்கும், உங்களுக்கு நிச்சயமாக ஜன்மாந்திரத் தொடர்பு உண்டு. அது பூர்வஜென்ம பிள்ளைகளாகவோ, தாய் தந்தையராகவோ அமைந்திருப்பதால் தான் அவர்களால் இன்று உங்களுக்குப் பலபலன்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தினந்தோறும் நீங்களும் கண்ணால் கண்டு கொண்டிருக்கின்றீர்கள்.
இவ்வாறாக, பாற்கடலில் ஸ்ரீஜேஷ்டா தேவி எழுந்த பொழுது இவ்வம்பிகையின் தியாக சீலத்தைப் பலரும் உணர்ந்திடவில்லை. ஏனென்றால் மிகுந்த  தெய்வீக சக்தியையும் அளப்பரிய தபோபலன்களைக் கொண்டவர்களால்தான் ஸ்ரீஜேஷ்டா தேவியின் மகிமையை உய்த்து உணர முடியும் என்பது ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவாக்காக அமைந்து விட்டது. கரிய நெடு உருவத்துடன் எழுந்தவள், மகாலட்சுமிக்கு மூத்தவளாக, ஜேஷ்டா தேவியாக இருக்கும் அவதார மூர்த்தியே என்பதைப் பலரும் புரிந்து கொள்ளாமல் இது ஏதோ அரக்க உருவம் என்று எண்ணி அஞ்சி ஓடினர். பாற்கடலை கடைந்தவர்களின் உள்ளக் கடலிலிருந்து சிதறி திரண்டு எழுந்த பல தீய எண்ணங்களோடு, வாசுகி என்ற பாம்பினைக் கயிறாக கொண்டு மேருமலையை மத்தாகக் கொண்டு கடைந்ததனால் உடல் வாதனை தாளாது வாசுகி நாகம் பெருமூச்சு விட அதன் விஷ காற்றுக் குமிழ்கள் எல்லாம் கரு முத்துக்களாக, நஞ்சு வித்துக்களாக மாறி பாற்கடலில் கலந்தன. இந்த நச்சுத் தன்மையை எல்லாம் திரட்டி எடுத்துப் பாற்கடலைப் புனிதப்படுத்துவதற்காகத்தான் ஸ்ரீஜேஷ்டா தேவி அவதாரம் கொண்டனள் என்பது பலரும் அறியாததாகும்.
ஸ்ரீஜேஷ்டா தேவி பாற்கடலில் கலந்த நஞ்சைத் திரட்டித் தன்னுடைய தேகத்தில் ஏற்றி மீண்டும் பாற்கடலைப் புனிதப்படுத்தியிராவிட்டால் பாற்கடலில் கிட்டிய அமுதம் மாறா நஞ்சு கலந்ததாகவே மாறியிருக்கும். எனவே, அந்த அமிர்தத்தில் ஒரு துளியும் நஞ்சு கலத்தல் ஆகாது என்ற உத்தம நோக்கத்துடன் ஸ்ரீஜேஷ்டா தேவி எழுந்தருளி தம்முடைய திருமேனியில் அனைத்து நஞ்சினையும் ஏற்று ஸ்ரீஜேஷ்டா தேவியாக மலர்ந்தனள்.
இதன் பிறகாக நடந்த இறைத்திருவிளையாடலை சித்புருஷர்களின் கிரந்தங்கள் நன்கு விளக்குகின்றன. பாற்கடலில் தோன்றிய ஸ்ரீஜேஷ்டா தேவியைக் கண்டு பலரும் ஓடிடவே எந்த லோகத்திலும் ஸ்ரீஜேஷ்டா தேவியை அமர்வித்து, தங்க வைத்து வழிபாடு செய்ய எவரும் முன்வரவில்லை. பிரபஞ்சமெங்கும் தம் கரிய திருமேனியுடன் வலம் வந்த ஸ்ரீஜேஷ்டா தேவி தன்னை எவரும் ஏற்காதது கண்டு வருந்தி சினம் கொண்டு நேரே திருக்கைலாயத்தை அடைந்து கதறினாள். “ஈஸ்வரா! பிரபஞ்சத்தைக் காக்கும் பொருட்டுத்தானே மூம்மூர்த்திகளால் யாம் தோற்றுவிக்கப்பட்டுப் பாற்கடலில் கிடந்துள்ள நஞ்சையும், தீய எண்ணங்களையும் என் திருமேனியில் ஏற்றுக் கரிய மேனியை உடையவளாக இன்று இங்கு வந்திருக்கின்றேன்,” என்று மனம் உருகிக் கதறிடவே, ஈஸ்வரனும் ஜேஷ்டா தேவியை ருத்ர கண்டம் என்னும் ஆபரணம் ஆக்கித் தன் கண்டமாகிய தொண்டைப் பகுதியில் சூடிக் கொண்டார். இதனால் தான் அவருடைய தொண்டையானது கரு நீலநிறமாகி இதன் பின்னர் ஆலகாலத்தில் உருண்ட திரண்டெழுந்த எஞ்சிய நஞ்சையும், தேக்கி வைக்கும் இடத்திற்கு உரியதாகவும் ஆயிற்று.
தம் ருத்ர கண்டத்தில் சற்று நேரம் அமர்ந்து ஜேஷ்டா தேவியாகப் பரிமளிக்கச் செய்து, “அம்பிகையே! உனக்குரிய தெய்வீக அவதார சக்தியை ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவரங்களால் மேலும் சிறப்புடன் பெறுவாயாக!” என்று அருள்பாலித்திடவே ஸ்ரீஅம்பிகையும் ஸ்ரீவைகுண்டத்தை நோக்கி விரைந்தாள். திருக்கையிலாயத்திலும் ஸ்ரீவைகுண்டத்திலும் எப்போதும் இருக்கின்ற அவதார அம்பிகையாக ஸ்ரீஜேஷ்டா தேவி அன்றும், இன்றும் என்றும் பரிமளிக்கின்றாள். ஸ்ரீமன் நாராயணப் பெருமாளும் ஸ்ரீஜேஷ்டா தேவியின் திருமேனியிலிருந்து கருமையைத் திரட்டி எடுத்துத் தன் தேகத்திலேற்று கார்மேக வண்ணனாகக் காட்சி தந்தார். அதன் பிறகு தான் ஸ்ரீஜேஷ்டா தேவி அழகிய திவ்ய சொரூபத்தைப் பெற்றாள். இவ்வாறாக அரூப லட்சுமியே ஸ்ரீஜேஷ்டா தேவியானாள். இவ்வாறாக ஸ்ரீமன்நாராயண மூர்த்தி ஜேஷ்டா தேவியின் கருத்திரளைத் தன் தேகத்தில் ஏற்று கார்மேக வண்ணனாகக் காட்சி தந்து ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு காலமே பகுதான்ய ஆண்டின் சிசிர ருதுக் கால விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.
ஸ்ரீகார்மேகவண்ணப் பெருமாளாகத் திருமால் அவதாரம் கொண்டு கருமையான தீய எண்ணங்களிலிருந்தும் நச்சுத் தன்மைகளிலிருந்தும் உலகை இரட்சித்துக் காத்த திருநாளே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீகார்மேகவண்ணப் பெருமாளே இன்றைக்குக் கலியுகத்தில் திரண்டு கிடக்கும் இருள்மயமான தீவினைச் சக்திகளை எதிர்வினை சக்திகளை, தீய எண்ணங்களை, கொலை கொள்ளை போன்ற வன்முறைச் சக்திகளை எல்லாம் அழித்து பஸ்பம் செய்து புனிதம் ஆக்குகின்ற பெருமாளாகி நம்மைக் காத்துக் கிடக்கும் பெருமாளாக கார்மேக வண்ணப் பெருமாள் அருள்பாலிக்கின்றார்...
எனவே, இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் (13.2.1999) முதல் நாள் இரவு 2.00 மணி முதல் பகல் 10.30 மணி வரை அமைகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்கின்ற தான தர்மங்களுக்கும், அபிஷேக ஆராதனைகளுக்கும் பன்மடங்கு பலன்கள் உண்டு. ஏனென்றால் ஸ்ரீநாராயண மூர்த்தியே அந்நேரத்தில் தீயசக்திகளை பஸ்பம் செய்கின்ற திருவிளையாடலை நிகழ்த்துகின்ற நன்னாளாக அமைகின்றது அல்லவா? எனவே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகத்தான பூஜை என்னவென்றால் பெருமாளுக்குத் தைலக்காப்பு சாற்றி காரிருளைவென்று, கருமைதனைத் தன்னுள் ஏற்று அருள்கின்ற பெருமாளுக்கு வெண்ணிறப் பட்டாடைச் சார்த்திக் கண் குளிர தரிசிக்க வேண்டும். இன்றைக்கு நாவல் பழம், கருப்பு நிற திராட்சை, பீட்ருட், மணத் தக்காளி, அத்திப் பழம் போன்ற கருநிற, கருநீல நிறமான உணவு வகைகளையும், ஆடைகளையும் தானம் செய்து கார்மேகப் பெருமாளை வழிபட்டிடல் வேண்டும் உங்கள் ஊரிலோ, அருகிலோ கார்மேக வண்ணப் பெருமாள் எழுந்தருளாவிடினும் கவலைப்படாதீர்கள். உங்கள் ஊர் ஆலயப் பெருமாளையே கார்மேக வண்ணப் பெருமாளாக எண்ணி வெண்பட்டாடை சாற்றி மேற்கண்ட காலத்தின் மகத்தான பலன்களைப் பெறுவீர்களாக!
தீ விபத்துகளில் மாண்டவருக்குத் தர்ப்பணம் அளிப்பதால் இன்று அவர்களுக்குத் நற்கதி கிட்டும். விஷம் உண்டு இறந்தோர், விஷவாயு பட்டு இறந்தோர். தீக்காயம் பட்டு இறந்தோர் போன்றோர்க்காக இன்று தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும். இந்த நாள் பெறுதற்கரிய தர்ப்பண நாளாதலின் இன்றைக்கு அவர்களுக்கு அளிக்கின்ற தர்ப்பணமே கோடானுகோடி ஆண்டுகளுக்கும் அவர்களுக்கு நற்பலன்களைத் தருவதாகும். கருமை அல்லது கருநீலத் துணியையோ தரையில் விரித்து அதன்மேல் தர்ப்பைச் சட்டத்தை வைத்து கங்கை அல்லது காவிரி போன்ற புனித நீரால் தர்ப்பணம் அளித்து, பிறகு அந்த புது வஸ்திரத்தைத் தானமாக இன்று அளித்திடல் வேண்டும்.
மேற்கண்ட முறையில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையை அபிஷேக, ஆராதனை, தர்ப்பணம் , தானதர்மங்களுடன் கடைபிடிப்பதனால்...
1. அக்னி சம்பந்தப்பட்ட மரணத்தை அடைந்தோருக்கு நற்கதியும்,
2. கொதிகலன் (Furnace) போன்ற அக்னி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்  எவ்வித ஆபத்தும் இன்றி நல்முறையில் வாழ்க்கை நடத்துவதற்கும்.
3. வெடிகுண்டு, இரசாயனம் போன்ற அக்னி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு நன்முறையில் தொடர்ந்து பணியாற்றி நல்வாழ்க்கையைப் பெற்றிடவும்..
4. இண்டேன் கேஸ், கேஸ் சிலிண்டர் போன்ற எரிவாயு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளோர் நன்முறையில் பணிபுரிந்திடவும்,
5. தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற அக்னி சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளோர் எவ்விதத் தீவிபத்துக்கள் இன்றி வாழ்க்கை செவ்வனே நடைபெற்று முன்னேறிடவும்.
6. தான் அழகாகப் பிறக்கவில்லையே இதனால் தன்னுடைய திருமணம் தடைபட்டு வருகின்றதே என்று ஏங்கும் கன்னிப் பெண்கள் பலருக்கும், இந்த ஏக்கத்தையும் Inferiority Complex எனப்படும் தாழ்வு மனப்பான்மையையும் அகற்றி நன்முறையில் திருமண வாழ்வைப் பெறவும்.
7. தான் அசிங்கமாக இருக்கிறோம் என்று பலரும் பலவிதமான வேதனைகளுடனும், வருத்தங்களுடனும் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். இவர்களுக்கு மனசாந்தியைத் தந்து இதுவும் நம் ஊழ்வினைச் செயலே என்ற எண்ணத்தை உருவாக்கி கிடைத்ததைக் கொண்டு நன்முறையில் வாழ்வதற்கான நல்லெண்ணத்தைத் தந்திடவும்.
8. அழகின்மை, அறிவின்மை காரணமாக பலவிதமான திருமணத் தடங்கல்களுக்கு ஆட்பட்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு நல்வாழ்க்கையைப் பெற்றுத் தந்திடவும்.
இந்த விஷ்ணுபதி புண்ணியகால பூஜை பெரிதும் உதவுகின்றது. எனவே, இத்தகைய சூழ்நிலைகள் உங்கள் குடும்பத்தில் இல்லாவிடினும் இவற்றால் வருந்துகின்ற குடும்பங்கள உய்வு பெறுவதற்காக நீங்களும் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தைக் கொண்டாடி அவர்களுக்குத் தக்க நல்வரங்களைப் பெற்றுத் தந்திடுவது மிகச் சிறந்த சமுதாய இறைப்பணி அல்லவா! வேறு எதற்காக நாம் இப்பிறவியையே எடுத்தோம் ? இவ்வாறான சுயநலமற்ற மக்கள் சேவையை ஆற்றிடத்தானே!

மகா சிவராத்திரி

மஹா சிவராத்திரி
எவ்வாறு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கானப் பலவிதக் காரணங்கள் அமைந்துள்ளனவோ அதைப் போல பல கோடி யுகங்களிலும் மகா சிவராத்திரி அன்று பலவிதமான இறை லீலா அனுபவங்கள், புராண சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இறைவனே லிங்கோத்பவராகக் காட்சியளித்த தினத்தை மகாசிவராத்திரியாகவும், கார்த்திகைத் திருநாளாகவும் பலரும் கொண்டாடுகின்றனர். ஒரு சிலரோ ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கும், ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும் இறைவன் ஒளியாகக் காட்சி தந்த நாளே மகாசிவராத்திரி என்றும் கொண்டாடுகின்றனர். நவராத்திரி போன்று பலகோடி யுகங்களாக இராத்திரி பூஜையை நிகழ்த்தி வந்த அம்பிகைக்கு அருள் ஒளி தரிசனம் தந்து இறைவன் அரவணைத்த நாளே மகா சிவராத்திரி என்றும் போற்றப்படுகின்றது. ஒரு மகாபிரளயத்திற்குப் பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களின் அறியாமையினால் பிரபஞ்சமே இருளில் ஆழ்ந்த பொழுது ஈசனே முன் வந்து, “இந்த இருளில் செய்ய வேண்டிய பூஜை ஒன்று உண்டு”, என்று கூறி சிவராத்திரி பூஜையைத் தானே உபதேசித்திட இவ்வாறு முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தேவர்களும் இரவு முழுவதும் செய்த ஈஸ்வர பூஜையின் நினைவாகவே மகாசிவராத்திரி பூஜை அமைந்திருக்கின்றது என்றும் புராண வைபவம் உண்டு.
ஈஸ்வரனுடைய கண்களை ஈஸ்வரி விளையாட்டகப் பொத்தியதனால் பிரபஞ்சமே இருளில் ஆழ்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்காக எந்த இருள் தன்னால் ஏற்படுத்தப்பட்டதோ அந்த இருளிலேயே தன்னுடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடி ஈஸ்வரியே  இராத்திரி கால பூஜையை மேற்கொண்டு அந்த இரவிலேயே ஈஸ்வர தரிசனம் பெற்றாள். இதனையே மகா சிவராத்திரி தினமாகக் கொண்டாடுவோரும் உண்டு. உண்மையில் விளையாட்டாக ஈஸ்வரி இறைவனுடைய கண்களைப் பொத்தினால் என்று சொல்வதெல்லாம் சிவராத்திரி போன்ற அற்புதமானப் பண்டிகைகளை ஜீவன்களுக்குப் பெற்றுத் தருவதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட லீலைகளாகும். ஏனென்றால் ஈஸ்வரனுடைய வலக்கண் சூரியனாகவும், இடக்கண் சந்திரனாகவும் அமைகின்றது அல்லவா! இறைவியானவள் ஈஸ்வரனுடைய கண்களைப் பொத்துகின்ற பொழுது சூரிய, சந்திர ஒளி மங்கி, மறைக்கப்படுகின்றதல்லவா! அப்போது உருவானதே இராத்திரி சூக்தம் எனப்படும் மிக அற்புதமான மந்திரமாகும். மிகவும் சிறியதான இந்த இராத்திரி சூக்த மந்திரத்தை நாம் தினம்தோறும் ஓது வந்தோமேயானால் இரவு நேரத்தில் செய்கின்ற பலவிதமான தீவினைகளுக்கு இது பிராயச்சித்தமாக அமைகின்றது.
உறக்கத்திலும் கர்ம வினையைச் சேர்ப்பதா? இரவில் தான் நாம் உறங்குகின்றோமே, எவ்விதமான அங்க அவயங்களும் செயல்படாமல் தானே நித்திரையில் இருக்கின்றது என்று எண்ணலாம். உண்மையில் பகலிலே நாம் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது சேர்க்கின்ற தீவினைகளை விட இரவில் படுத்தவாறே நாம் சேர்க்கின்ற கர்மவினைகள் தான் கலியுகத்தில் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! ஏனென்றால் நித்திரையின் போது தான் மனவுடலில் நாம் சஞ்சரிக்கின்றோம். இந்த மனவுடலில் நாம் செய்கின்ற பலவிதமான செயல்கள் தான் ஏகப்பட்டக் கர்மவினைகளை நமக்குக் கடன் சுமையாக அளித்து விடுகின்றன. எனவே தூக்கத்தின் போதும் கூட நாம் எத்தனையோ கர்மவினைகளை நல்லதோ, கெட்டதோ சேர்த்துக் கொள்கின்றோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத்தான் அம்பிகையானவள் இராத்திரி சூக்தம் என்ற ஒரு அற்புதமான மந்திரத்தை நமக்குப் பெற்றுத் தர, இது நமக்குக் கிட்டிய காலம் மகாசிவராத்திரி காலம் என்றும் பலர் கொண்டாடுகின்றனர். இவ்வாறாகவே, பல புராண லீலைகள் நிகழ்ந்த புனிதப் பண்டிகையாக மஹாசிவராத்திரி விளங்குகின்றது.
கொடிய தீவினை சக்திகளையே ஆயுதங்களாகக் கொண்டு கொடியவர்களாக விளங்கிய அரக்கர்கள் தற்போது கலியுகத்தில் இல்லை என்று எண்ணாதீர்கள். இன்றைக்கும் தினம்தோறும் இரவு நேரத்தில் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற பலவிதமான தீய செயல்களில் ஈடுபடுகின்ற எல்லோருமே அரக்கர்கள் தாம்! எனவே கலியுகத்தின் இரவு நேரமானது அசுர குணமுடைய மனிதர்களின் சஞ்சாரத்திற்கு ஏற்றதாக அமைந்து விட்டது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். எனவே, அசுர சகதிகள் பெருகுகின்ற அல்லது கூடுகின்ற இரவு நேர தீய சக்திகளிலிருந்து நம்மையும், சமுதாயத்தையும் காத்துக் கொள்வதற்காகவும் வருடத்தில் ஒரு முறையேனும் இரவில் நாம் கண்விழித்து மகாசிவராத்திரி பூஜையைச் செய்து வருவோமேயானால் இதனால் வருடம் முழுவதும் வருகின்ற இராத்திரி கால தீய சக்திகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு பெரும் புண்ய சக்தியாக இது பெரிதும் துணைபுரிகின்றது என்பதே மகா சிவராத்திரியின் பெரும் தத்துவமாகும். இவ்வாறாக மகா சிவராத்திரிக்கு எத்தனையோ விளக்கங்கள் உண்டு.
மஹாசிவராத்திரியில் சந்திர பூஜை :-
தட்சப் பிரஜாபதியின் 27 பெண்கள் தாம் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர தேவிமார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இவர்களை ஸ்ரீசந்திர பகவான் மணம் புரிந்து கொண்டதும் ஸ்ரீரோஹிணி நட்சத்திர தேவியின்பால் ஸ்ரீசந்திர பகவான் அளப்பற்ற அன்பு கொண்டமையால் இதனைக் கண்டு வருத்தமடைந்த ஏனைய 26 நட்சட்த்திர தேவியரும் தம் தந்தையாரான தட்சப் பிரஜாபதியிடம் இதைப்பற்றி முறையிட அவரும் சினத்தால் “உன்னுடைய 16 கலைகளும் தேய்வடைவதாக!” என்று தன்னுடைய மாப்பிள்ளையான ஸ்ரீசந்திர பகவானுக்குச் சாபம் இட்டுவிட்டார். இப்புராண விளக்கங்களையும் அறிவீர்கள் அல்லவா?
அக்காலத்தில் தற்போது நாம் காணுகின்ற முழு பௌர்ணமி நிலவாகத்தான் ஸ்ரீசந்திர பகவான் நித்திய பௌர்ணமி சந்திரனாக முழு வட்ட சந்திரனாகவே தினந்தோறும் பரிணமித்தார். தட்சனுடைய சாபத்திற்குப் பின்னர்தான் இந்த பௌர்ணமி நிலாவானது தேய்வடைவதாயிற்று. தட்சனின் சாபத்தால் ஸ்ரீசந்திர பகவானுக்கு என் செய்வதென்று புரியவில்லை. நாளுக்கு நாள் அவருடைய கலைகள் குறைவதாயின. அவரும் ஸ்ரீஈஸ்வரனை நோக்கித் தவம் பூண்டார். ஸ்ரீசந்திர பகவானுடன் ஏனைய 26 நட்சத்திர தேவியர்களும், தங்களுடைய தவற்றினை உணர்ந்து ரோஹிணியுடன் சேர்ந்து, அனைவரும் சந்திரபகவானுடன் சேர்ந்து ஒன்றாகக் கூடி வைவஸ்வதத் தடாகத்தில் அமர்ந்து ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். பெருந்தவத்தில் ஆழ்ந்த போதிலும் ஸ்ரீசந்திர பகவானுடைய ஒளியானது தட்சனுடைய சாபத்தால் மேலும் மங்கி வருவதாயிற்று.. 15 கலைகள் குறைந்து, குறைந்து ஒரு கலையாக பின் அந்த ஒரு கலையையும் இழந்து ஸ்ரீசந்திர பகவான் தன் ஒளியை முழுவதுமே இழக்கின்ற நிலையில் தான் அவருக்கு ஈஸ்வரன் காட்சி தந்தார்..
“அப்பனே! சந்திரா! எல்லாமே எம்முடைய திருவிளையாடல்தான். நீயும் உன்னுடைய 27 பத்தினிமார்களும் தான் இவ்வுலக வாழ்க்கையில் ஆண், பெண் தத்துவமாக, சிருஷ்டி தத்துவமாக நட்சத்திர ரீதியாகப் பரிமளிக்கவிருக்கின்றீர்கள்! அதன் காரணமாகத்தான் தட்சனுடைய சாபமும், எம்முடைய இறைத் திருவிளையாடலாக ஏற்படுத்தப்பட்டது. இந்த 27 நட்சத்திரங்களுக்குள் தான் இனி பூலோக ஜீவன்களின் வாழ்க்கை நிலைகள் நிரவ இருக்கின்றன. உன்னுடைய ஒளியானது தேய்வு தான் அடைந்திருக்கின்றதே தவிர அது இன்னும் மறையவில்லை. மங்கவில்லை., ஒரு முழு வட்டமாக நீ பெற்ற ஒளியானது இன்றைக்கு ஒரு சிறு கீறலாக அமைந்திருக்கின்றது. அதாவது இந்த ஒரு சிறு கீறலுக்குள் தான் உன்னுடைய முழுநிலவின் தாத்பரியங்கள் பரிபூரணமாக அடங்கியுள்ளன. இதை எவரும் கண்டுணர இயலாது. நீயும், உன்னுடைய 27 நட்சத்திர தேவியாரும் எம்மைத் தோத்தரித்து எம்முடைய தரிசனத்தைப் பெற்ற இந்நாளே அதாவது கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதியே பிற்காலத்தில் சிவராத்திரியாக, மாத சிவராத்திரியாக எம்முடைய தரிசனம் பெற்ற இந்நன்னாள் மகாசிவராத்திரியாக மலரும்!” என்று சொல்லி அருள்பாலித்தார். இவ்வாறு ஸ்ரீசந்திர பகவானும், 27 நட்சத்திர தேவியரும் ஈஸ்வரனை தரிசித்த பெருநாளாகவும் மாசி மாத மகாசிவராத்திரி அமைகின்றது. அதுவும் அந்த யுகத்தின் பகுதான்ய ஆண்டின் மாசி மாத மாத சிவராத்திரியின் போது தான் ஸ்ரீசந்திர பகவானும், 27 நட்சத்திர தேவியரும் சர்வேஸ்வரனைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.
இதன் தாத்பர்யம் என்ன?
தம்முடைய கணவனுடன் சேர்ந்து செய்கின்ற எந்த பூஜைக்கும் அபரிமிதமான பலன்கள் உண்டு. இதனைக் குறிப்பதாகத்தான் அமைகின்றது இவ்வருட மகாசிவராத்திரி பூஜையாகும். இன்று கணவனும், மனைவியும் சேர்ந்து இறைவனைப் பூஜிப்பது மிகவும் விசேஷமானதாம். எனவே, பகுதான்ய ஆண்டின் மகாசிவராத்திரியாக விளங்குகின்ற இந்நன்னாளில் கணவன், மனைவியர் தம் குழந்தைகளுடன் சேர்ந்து ஈஸ்வரனைப் பூஜிப்பது மிகவும் சிறப்புடையதாகும். இது தவிர பகுதான்ய ஆண்டின் மாசி மகாசிவராத்திரிக்கு இன்னொரு விசேஷத் தாத்பர்யமும் உண்டு. சர்வேஸ்வரனானவர் தன்னுடைய அதாவது 64 அவதார லீலைகளையும் ஒவ்வொரு மாதத்தின் சிவராத்திரியின் போதும் ஒவ்வொன்றாக உலகிற்கு உணர்த்தி வந்தார் அல்லவா! இவ்வாறாக சிவபெருமானுடைய 64 மூர்த்தங்களும், 64 அவதார லீலைகளும் பரிபூரணம் பெற்ற திருநாளே பகுதான்ய ஆண்டின் மாசி மாத மகாசிவராத்திரி ஆகும். ஈஸ்வரனின் 64 மூர்த்தங்களின் ஒருமித்த தெய்வ மூர்த்தியாக விளங்குபவரே ஸ்ரீநடராஜ மூர்த்தியானவர். அதிலும் பஞ்சலோக விக்ரஹத்தைவிட கருங்கல்லால் ஆன ஸ்ரீநடராஜ மூர்த்திக்குத் தெய்வீக சக்திகள் அதிகம் உண்டு.
எனவே, எங்கெல்லாம் ஸ்ரீநடராஜ மூர்த்தியானவர் கல்லில் எழுந்தருளியுள்ளாரோ அதாவது கல்லால் ஆன ஸ்ரீநடராஜ மூர்த்தி எங்கெல்லாம் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாரோ அங்கு பகுதான்ய ஆண்டின் மகாசிவராத்தியைக் கொண்டாடுவது மகாசிறப்புடையதாகும். இன்றைக்குக் கல்லால் ஆன ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு 64 மூர்த்தங்களின் பெயர்களைச் சொல்லித் துதித்து பூக்கள், தானியங்கள், பண்டங்கள், வஸ்திரங்கள், மலர்கள், தர்ப்பை, சோளி போன்ற 64 விதமான பொருட்களால் அர்ச்சித்து வழிபடுவோருக்கு அளப்பரிய வரங்கள் நல்வரங்களாகக் கிட்டுகின்றன..

ஸ்ரீநடராஜர் கூரூர்

1. பிரிந்த கணவன் மனைவியர் ஒன்று சேரவும், தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை பெருகவும் இந்த நடராஜ பூஜை பெரிதும் உதவுகின்றது.
2. பலவிதமான வியாபார, விவசாய நஷ்டங்களாலும் தங்களுடைய சொத்துக்களை எல்லாம் இழந்து அவதியுறுவோர் இப்பூஜைகளை மேற்கொண்டிட நியாயமான முறையில் தங்களுடைய சொத்துக்களை மீண்டும் பெறுவதற்கு நல்வாய்ப்பு கிட்டும்.
3. இதுவரையில் நாள், நட்சத்திரம் பாராது பலவிதமான காரியங்களைச் செய்து வருவோரும் உண்டு. தாங்கள் இவ்வாறு செய்தமைக்காக இவர்கள் வருந்துவதும் உண்டு. இவ்வாறாக நாள், நேரம் பாராது அவசர கோலமாகப் பலவிதமாகவும் காரியங்களைச் செய்து விட்டு எல்லாம் அரைகுறையாக நிற்கின்ற சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிக்கின்றவர்கள் மாசி சிவராத்திரி நாளில் கல்லால் ஆன ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு மேற்கண்ட முறையில் அபிஷேக ஆராதனை செய்து தேன் கலந்த சர்க்கரைப் பொங்கலைப் படைத்து ஏழைகளுக்குத் தானம் செய்து வருவார்களேயானால் அவசர கதியில் செய்த, அவற்றால் விளைந்த தீமைகளுக்கு பிராயச்சித்தத்தைப் பெற்றிடலாம்.
4. அவசர கோலத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். நாள், கிழமை பாராது வீடு கட்ட ஆரம்பித்தோர் அல்லது வேலையில் சேர்ந்தவர்கள் போன்றோர் இதற்குரிய பிராயச்சித்தத்தை இந்த மகா சிவராத்திரியில் மட்டுமே பெற்றிட முடியும்.
5. பல திருமணங்களில் பல பொய்களைச் சொல்லித் திருமண சம்பந்தத்தைக் கொண்டோர் தம்முடைய பொய், பித்தலாட்டங்களுக்குப் பிராயச்சித்தமாக இன்று கல்லில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு மேற்கண்ட முறையில் அபிஷேக ஆராதனைகள் செய்து தம்முடைய தவறுகளுக்கு மனதாரப் பிராயச்சித்தம் வேண்டி “பொய் சொன்ன வாய் வினை தீர போஜனம் கொடு”, என்று மூதுரைக்கு ஏற்ப தேன் கலந்த உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வருவதன் மூலமாகத்தான் தம்முடைய பொய்களுக்கு உரிய பிராயச்சித்தத்தைப் பெற முடியும். இதற்கு பகுதான்ய மஹ சிவராத்திரி பூஜை பெரிதும் உதவுகிறது!
லிங்கத்தின் மேல் படுகின்ற சூரிய ஒளி கிரணங்கள்
ஸ்ரீசூரிய பகவானே ஸ்ரீ லிங்க மூர்த்திகளைத் தொட்டு பூஜிக்கின்ற நாட்களே தெய்வ மூர்த்திகளின் மேல் சூரிய கிரணங்கள் படுகின்ற நாட்களாகும். சூரிய ஒளி மூலஸ்தான மூர்த்திகளின் மேல்படுகின்ற நாட்களில் ஸ்ரீசூரியபகவானே ஈஸ்வரனை வழிபடுகின்றார்... சூரியன் ஒன்று மட்டும் அல்ல, எத்தனையோ கோடி சூரியன்கள் விண்ணில் பிரகாசிக்கின்றன.
பாரத கண்டம் முழுவதும் நிரவியுள்ள இலட்சக்கணக்கான ஆலயங்களில் அதுவும் குறிப்பாகத் தெய்வீகம் ததும்புகின்ற சித்புருஷர்கள் எப்போதும் நடமாடுகின்ற தமிழித் திருநாட்டில் உள்ள பல்லாயிரக் கணக்கான ஆலயங்களில் குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும் தான் சூரியனுடைய கிரணங்கள் மூலமூர்த்திகளின் மேல் அதுவும் வருடத்தில் சில நாட்களில் மட்டும் தான் படுகின்றன.. இதைத்தான் நாம் ஸ்ரீசூரிய மூர்த்தியே ஈஸ்வரனை வழிபடுகின்ற நாட்களாகக் குறித்து அதனைக் கொண்டாடுகின்றனர். முற்காலத்தில் நம் மூதாதையர்கள் மூலமூர்த்திகளின் மேல்  லிங்க உருவமோ அல்லது பெருமாள் உருவமோ அல்லது அம்பிகையோ  எம்மூர்த்தியாயினும் சரி சூரிய கிரணங்கள் மூர்த்திகளின் மேல் படுகின்ற நாட்களை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள். ஆனால் இது காலப்போக்கில் மறைந்து விட்டதைக் கண்டு நாம் வருந்துகின்றோம்...
ஏதோ விஞ்ஞானமயமான சில அபூர்வ கோணங்களின் மூலமாகத்தான் சூரிய ஒளி மூலமூர்த்தியின் மேல் தோய்வதாக நாம் எண்ணினாலும் கூட விஞ்ஞானம் தெளிவு பெறாத அக்காலத்தில் இது எவ்வாறு சாத்தியமாக முடியும்? காரணம், தற்காலத்தில் தான் ஒரு பேப்பரையும், கம்ப்யூட்டரையும் பல இயந்திரங்களையும் பலவிதமான கட்டிட வரைவு அமைப்புக்களை வைத்துக் கொண்டு பொறியாளர்கள் மாய்ந்து, மாய்ந்து வரைந்தாலும் கூட அக்காலத்தில், “எதுவும் என்னுடையதல்ல, அனைத்தும் உன்னுடையதே,” என்ற இறை மனப்பாங்கில் பணியாற்றியமையால் தான் அனைத்துமே சற்குரு வாய்மொழிகளாகவும், தெய்வீக அருள் வாக்காகவும் பலவிதமான புதுமையான கட்டிட அமைப்புகள் அவர்களுக்கு மெய்ஞானக் கல்வியாக உணர்விக்கப்பட்டன.. இவ்வாறாக, கோடானு கோடி வருடங்கள் கடந்தாலும் கூட கோபுரங்களும் மற்றும் ஆலய அமைப்புகளும் பலவிதமான மாறுதல்களுக்கு உட்பட்ட போதும் கோயிலுக்கு எதிரிலும், பக்கவாட்டிலும் பலவிதமான புதுப் புதுக் கட்டிடங்களும் தோன்றி மாற்றங்கள் ஏற்பட்டாலும், பல அபூர்வமான ஸ்தலங்களில் சூரிய கிரணங்களும், சந்திர ஒளியும் மூலமூர்த்தியின் மேல் இன்றைக்கும் எப்போதும் போல் குறித்த தினங்களில் படிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுதான் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட மெய்ஞான விந்தையாகும்.
சாயா சுவர்ச்சலாம்பாள் சமேதராக ஸ்ரீசூரிய பகவானே சுவாமியைத் தரிசிக்கின்ந இந்நாட்களில் நாமும் அத்தகையத் திருத்தலங்களுக்குச் சென்று தெய்வ மூர்த்திகளை வழிபடுவோமேயானால் ஸ்ரீசூரியபகவானுடைய பூஜையில் நாமும் பங்கு கொண்ட பேரானந்தத்தைப் பெற்றிடலாம் அன்றோ! ஏனென்றால் ஒரு சூரியனுடைய ஒளியையே நம்மால் காணமுடியவில்லை. கண்கள் கூசுகின்றன அல்லது வெப்பம் தகிக்கின்றது... நாம் எண்ணுவது போல விஞ்ஞானப் பூர்வமாக ஒரேயோரு சூரியன் மட்டும் பிரகாசிக்கவில்லை. விண்ணில் எத்தனையோ கோடி சூரியன்கள் உண்டு. இன்றைக்கும் விஞ்ஞானத்தால் காண முடியாத, பகுத்தறிய முடியாத கோடானு கோடி நட்சத்திரங்கள் விண்ணில் மிதக்கத்தான் செய்கின்றன. விஞ்ஞானமும் இறைவனின் படைப்பே! கலைவாணியை நன்கு உபாசித்து, பூர்வ ஜென்மங்களில் ஸ்ரீசரஸ்வதி வழிபாட்டினை முறையாகக் கடைபிடித்தோரும் தான் இன்றைக்கு விஞ்ஞானிகளாகப் பரிமளிக்கின்றனர்...
ஏனென்றால், மெய்ஞானம் என்பது வெறும் படிப்பாலோ, பட்டத்தாலோ ஆராய்ச்சி சாலைகள் மூலமாகவோ வருவது கிடையாது. அது தன்னைத்தானே உய்த்து உணர்த்துவதே! சூரிய புராணத்தை எடுத்துப் பார்த்தோமேயானால் ஸ்ரீசூரிய பகவானும் எத்தனையோ ஆலயங்களில் வழிபட்டு ஈஸ்வர தரிசனம் பெற்றதை நாம் காண்கின்றோம்... சர்வேஸ்வரவனுடைய ஒளி அம்சமாக விளங்குகின்ற ஸ்ரீசூரிய நாராயண சுவாமி கூட சாதாரண ஜீவன்களுக்கும் மட்டுமின்றி மகரிஷிகள், யோகியர்கள் போன்ற உத்தம இறைநிலை அடைந்தோருக்கும் ஒரு இறைப் பாடத்தைப் புகட்டும் முகமாகத்தான் தம்மை ஒரு சாதாரணப் பிரஜையாகக் கருதிக் கொண்டு பல ஆலயங்களிலும் சிறப்பான பாஸ்கர வழிபாட்டை நடத்தி அதனை அனைவருக்கும் இன்றும் உணர்த்துகிறார்..
ஜீவன்களுக்கு வேண்டிய ஜீவித சக்தியை நாம் சூரிய ஒளியிலிருந்து தான் பெறுகின்றோம் என்பதில் ஐயமில்லை அல்லவா! இன்றைக்கு பிரபஞ்சத்திலுள்ள பெரும்பாலான ஜீவன்கள் அனைத்துமே கண்ணுக்குத் தெரியாத கிருமிகளிலிருந்து புழு, பூச்சிகள், தாவரங்கள், மனிதர்கள் , தேவர்கள் வரை அனைத்து ஜீவன்களுமே சூரிய ஒளியை நம்பித்தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சூரிய சக்தியைப் பெற்று வாழ்கின்றன என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றே, சூரிய பகவானுடைய தெய்வீகக் கதிர்கள் நன்கு பரிணமித்துச் சிறப்பாக விளங்குகின்ற சில விசேஷமான தினங்களும் உண்டு.
இரதசப்தமி, மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல், உத்தராயண, தட்சிணாயன புண்ணிய கால தினங்கள் (தை முதல் தேதி, ஆடி முதல் தேதி) சூரிய, சந்திர பெயர்ச்சி தினங்கள், சூரிய சந்திர கிரண நாட்கள், அமாவாசை இவ்வாறான ஸ்ரீசூரிய பகவானுக்கு உரித்தான முக்கிய தினங்கள் பல உண்டு. பித்ருகாரகனாக, தந்தை வழி மூதாதையர்களுக்கு அதிபதியாக விளங்குகின்ற ஸ்ரீசூரிய பகவானுடைய பேரருளை ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாகப் பெற்றாக வேண்டும். நவகிரஹங்களுள் தலைமை நாயகனாக விளங்குகின்ற ஸ்ரீசூரிய நாராயண சுவாமியே ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பலா பலன்களை நமக்குத் தந்தருள்பவர்.. ஏனென்றால் ஸ்ரீகாயத்ரீ தேவி உறைகின்ற சவிதா மண்டலமானது சூரிய மண்டலத்திற்குள் அமைந்திருக்கின்றது.. மேலும், ஸ்ரீசூரிய நாராயண சுவாமியாக நமக்கு அருள்கின்றவரே ஸ்ரீமகா விஷ்ணு மூர்த்தியின் பேரம்சங்களைத் தன்னுள் கொண்டு நமக்கு அருள்பாலிக்கின்றார்..
சூரிய வழிபாடு பித்ரு சாப நிவர்த்தி :- பல குடும்பங்களில் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாதனால் இன்று பித்ரு சாபங்கள் நிறைந்து கிடக்கின்றன.. இதனால் தான் சந்ததியின்மை, ஊனமுற்றல், மன வியாதிகள், பைத்தியம் பிடித்தல், பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் மூலம் சொத்து நிலபுலன்கள் முடங்கிக் கிடத்தல், பிறப்பிலிருந்து இறப்பு வரை பலவிதமான நோய்களால் அவதியுறுதல் இவ்வாறு பலவிதமான துன்பங்கள் பல குடும்பங்களைப் பாதிக்கின்றன. இதற்குக் காரணம் தந்தை வழி மூதாதையர்களுக்கு உரித்தான திதி வழிபாடுகள், சிராத்தங்கள், திவச பூஜைகள், தர்ப்பணங்கள் ஆகியவற்றை முறையாகச் செய்யாமை தான்! இதற்கென்று பிராயச்சித்தம் தருவதாகவே பல சூரிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

ஸ்ரீபரிதியப்பர் பரிதிநியமம்

சூரிய தீர்த்தங்கள் உள்ள ஸ்தலங்கள், ஸ்ரீசூரிய மூர்த்திக்கு தனி சன்னதி உள்ள இடங்கள், சாயா தேவி, ச்வர்ச்சலாம்பாள் தேவியுடன் சேர்ந்து அருள்பாலிக்கின்ற சூரிய மூர்த்திகள், அந்தந்த நவக்கிரஹத்திற்கு உரிய நிறத்தில் தோன்றி அருள்பாலிக்கின்ற நவக்கிரஹ மூர்த்திகள் (சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயம், திருச்சி ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம்) , ஆடுதுறை அருகே ஸ்ரீசூரியனார் கோயில், ஸ்ரீசூரிய பகவான் வழிபட்ட ஸ்தலங்கள் (திருத்துறைப் பூண்டி அருகே பரிதிநியமம், கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், திருநாகேஸ்வரம், வேதாரண்யம்..) இவ்வாறாக ஸ்ரீசூரிய பகவானின் தெய்வாம்சங்கள் பரிணமிக்கின்ற பல தலங்களிலும் உங்கள் தந்தை வழிப் பித்ருக்களுக்கு உரிய தர்ப்பண வழிபாடுகளையும், தான் தர்மங்களையும் செய்து வந்தால் மேற்கண்ட பலவிதமான தோஷங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவர்த்தி கிட்டும். இது மட்டுமின்றி மேற்கண்ட பிராயச்சித்தங்கள் அனைத்துமே முழுமையான பலன்களைத் தர வேண்டுமானால்..
1. ஸ்ரீசூரிய பகவான் பூஜிக்கின்ற ஸ்தலங்களில் அதாவது வருடத்தில் குறித்த சில தினங்களில் மட்டுமே சூரிய கிரணங்கள் படுகின்ற மூலமூர்த்திகள் அருள்பாலிக்கின்ற ஸ்தலங்களில்..
2. சுவாமியின் மேல்பட்டு பிரதிபலிக்கின்ற சூரிய ஒளியை தரிசித்து...
3. அங்கேயே அந்த தினங்களிலேயே பித்ரு தர்ப்பணங்களையும், திதி வழிபாடுகளையும் மேற்கொண்டு...
ஏழைகளுக்கு உரிய பித்ரு ப்ரீத்தி தருவதான தானதர்மங்களை மேற்கொள்வீர்களேயானால் உங்களுடைய பித்ரு தோஷங்களுக்கும், பித்ரு சாபங்களுக்கும் துரிதமாக தக்க நிவர்த்தி கிட்டும்.. ஏனென்றால் நிறைந்த ஒளி சக்தியையுடைய சூரிய கிரணங்களை நம்முடைய கண்களால் பார்க்க முடியவில்லையாயினும் அதே சூரிய கிரணங்கள் லிங்க மூர்த்திகளின் மேல்பட்டு, பிரதிபலித்து லிங்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்ற ஆத்ம ஜோதியை, ஆத்ம சக்தியைத் தம்முள் ஈர்த்து வெளிவருகின்ற பொழுது அது நம்முடைய உடம்பில் பட்டு ஸ்பரிசித்து நமக்கு பலவிதமான அனுக்கிரங்களை தருகின்றன. ஏனென்றால் சூரிய பகவானே நமக்கு முக்தியைத் தரவல்ல, மோட்சத்தைப் பெற்றுத் தரக்கூடிய தெய்வ மூர்த்தியாக விளங்கிடினும் மற்றொரு தெய்வமூர்த்தியை வணங்குவது என்றால் அதனை நாம் காணுகின்ற பாக்கியத்தைப் பெறுவதென்றால் என்னே பெரும் பாக்கியம் அது..!
பாஸ்கர பூஜை பலன்கள் – கடுமையான தோல் வியாதிகளால் அவதியுறுவோர் இத்தகைய பாஸ்கர பூஜை நடைபெறுகின்ற இடங்களுக்குச் சென்று லிங்க மூர்த்திகளின் மேல் பட்டு பிரதிபலிக்கின்ற சூரிய கிரணங்களை தம் தேகத்தில் அதிக அளவுபடுமாறு நின்று தரிசித்தாக வேண்டும். மேலும் ஸ்ரீசூரிய பகவானுக்குப் ப்ரீத்தியான கோதுமையாலான உணவுப் பண்டங்களை சுவாமிக்குப் படைத்து ஏழைகளுக்கு அர்ப்பணிப்பீர்களாக! தான, தர்மங்கள் ஏன் விசேஷமாக வலியுறுத்தப்படுகின்றன என்றால் அக்காலத்தில் பாஸ்கரக பூஜை நியதியாக அதற்குரித்தான சூரிய நமஸ்காரத் ஸ்தோத்திரங்கள், பாஸ்கர ஹோமம் என்று பலவிதமான வழிபாடுகள் ஆலயங்களில் நடத்தப்பட்டன. தற்போது இறைவழிபாட்டிற்குக் கூடக் கட்டணம் விதிக்கின்ற, அர்ச்சனை ஆராதனைக்குக் கூட நிறைய செலவாகின்ற காட்சியைத் தான் நாம் காண்கின்றோம்... எத்தகைய இறைவழிபாட்டிற்கும் அது அர்ச்சனையோ, ஆராதனையோ, அபிஷேகமோ, சந்தனக் காப்பு, தைலக் காப்பு போன்ற பூஜைகள், ஹோமமோ, சகஸ்ரநாமமோ எதற்குமே எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. சுவாமியைத் தரிசிப்பதற்குக் கூட கட்டணம் வசூலிப்பது தவறுதான்.
ஆனால் இத்தகைய தவறுகள் தானே கலியுகத்தில் மீண்டும், மீண்டும் நிகழ்கின்றன. அதனால்தானே சமுதாயத்தில் துன்பங்கள் நம்மை எப்போதும் அண்டிக் கொண்டிருக்கின்றன..! எனவே, மேற்கண்ட கலியுக இடைச் செருகலாக ஏற்பட்டுள்ள பலவிதமான துன்பங்களால் தான் நம்மால் எந்த இறை வழிபாட்டையும் ஆத்மார்த்தமாக மேற்கொள்ள முடிவதில்லை.. கோவிலில் தரிசனக் கட்டணங்கள் விதிக்கப்படுவது கோயிலினுடையப் பராமரிப்பிற்காக என்று நாம் சமாதானம் செய்து கொண்டாலும் கூட கோயில் பராமரிப்பு என்பது அந்தந்த ஊர் மக்களுடைய பொறுப்பாகத்தான் அக்காலத்தில் இருந்தது. மேலும், தெய்வ பக்தியில் திளைத்து இறைவனுடன் பேசுகின்ற அளவிற்குச் செம்மையான பக்தியைப் பெற்ற சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களைக் கொண்டிருந்த உத்தம, தெய்வீகத் திருத்தமிழ் நாடு இது... ஆனால் கலியுகத்தில் அனைத்தும் மாறிவிட்டனவே!
மேற்கண்ட வகையிலான பலவிதமான பூஜைகளை நாம் முறையாகச் செய்ய இயலாத சூழ்நிலை கலியுகத்தில் ஏற்பட்டு விட்டமையால் தான, தர்மங்கள் தான் இதற்குரிய பலன்களை நமக்குத் தந்தருள்கின்றன.. ஏனென்றால் அன்னதானமோ அல்லது ஆடைதானமோ அல்லது பொன் மாங்கல்ய தானமோ எதுவானாலும் சரி அதனை ஆத்மார்த்தமாக ஓர் ஏழைக்கு அளித்திடும் பொழுது அந்த ஏழை பரம சந்தோஷம் அடைகின்றார் அல்லவா.
பரமானந்தம் எதுவோ? எந்த சந்தோஷத்தை உன்னால் பெற முடியவில்லையோ அந்த சந்தோஷத்தை பிறர் அடைகின்ற பொழுது நீங்கள் பெறுகின்ற புதுவிதமான ஆனந்தமே பரமார்த்த ஆனந்தமாகும்.. அதாவது உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கலாம்.. ஆனால் உங்களால் உண்டு இன்பம் பெற இயலாத இனிப்பு வகைகளை நீங்கள் ஒரு ஏழைக்கு அளிக்கின்ற பொழுது அவற்றை அந்த ஏழை உண்டு அவருடைய கண்களிலும், முகத்திலும், உள்ளத்திலும் ஏற்படுகின்ற ஆனந்தத்தை நீங்கள் கண்கூடாகப் பார்க்கும் பொழுது தான் அதுவே பரமானந்தமாக மலர்கின்றது.. மேலும் உங்களுடைய சுயநலத்தை விடுத்து காசு, பணம் செலவைப் பொருட்படுத்தாது உங்களுடைய பொருட்களைப் பிறருக்குத் தானமாக அளிக்கின்ற பொழுது அங்கு சுயநலம் அழிக்கப்படுகின்றது... எங்கெல்லாம் சுயநலம் அழிக்கப்படுகின்றதோ அதுதான் சமுதாய சேவையாக, இறைத் திருப்பணியாக, மகேசன் சேவையாக, மக்கள் சேவையாக மலர்கின்றது...
எனவே, தான தர்மம் என்பது மிகச் சிறந்த சமுதாய சேவையாக, சமுதாய பூஜையாக அன்றைக்கும், இன்றைக்கும் என்றும் விளங்குகின்றது.. சுயநலம் அற்று மக்களுக்கு சேவையை இறைப்பணியாகப் புரியத்தான் மனிதன் பிறப்பெடுத்தான்.. ஆனால் ஆசாபாசங்களினாலும், பேராசைகளினாலும், பகைமை, குரோதம், சுயநலம் போன்ற பல இடையூறுகளினாலும் தான் மனிதன் தன்னுடைய இறை இலட்சியங்களை மறந்து விட்டான்.. இதனை அடிக்கடி அவனுக்கு உணர்த்தி அவன் பிறப்பெடுத்ததே பிறருக்குச் சேவை செய்கின்ற இறைப்பணியை மேற்கொள்ளத்தான் என்பதை உணர்வதற்காகத் தான் நம்முடைய பண்டிகைகளும், விசேஷ தினங்களும் அமைந்திருக்கின்றன... இவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் சூரிய பூஜை அல்லது பாஸ்கர பூஜை எனப்படும் சூரிய கிரணங்கள் லிங்க மூர்த்தியின் மேல்படுகின்ற விசேஷ தினங்களாகும்.. எனவே பெறற்கரிய பாக்யத்தை இழந்து விடாதீர்கள்..
சூரிய பூஜை தினங்கள்
மூலஸ்தான லிங்க மூர்த்திகளின் மேல் சூரிய ஒளிக் கிரணங்கள் தோயும் விசேஷமான நாட்கள் கீழ்க்கண்ட தினங்களில் அந்தந்தக் கோவில்களில் உள்ள மூல மூர்த்திகளின் மேல் சூரிய கிரணங்கள் படுகின்றன. இதனையே சூரிய பூஜையாகக் கொண்டாடுகின்றோம். நாம் அறிந்தவரை பல ஆலயங்களிலும் சூரிய ஒளியானது மூல மூர்த்திகளின் மேல்படுகின்ற விசேஷத்தை பலரும் அறியாதிருக்கின்றனர்.. எனவே குறித்த தினங்களில், குறித்த ஆலயங்களில் சூரிய பூஜை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றதா என்பதை முன்னரேயே அறிந்து தெரிந்து கொள்ள அன்பர்களை வேண்டுகின்றோம்... பல இடங்களிலும் பக்தர்களின் வேண்டுதல்களுக்கு இணங்கியே சூரிய பூஜை விசேஷமாக நடத்தப்படுகின்றது.. திருச்சி குளித்தலை அருகே அய்யர்மலையில் கார்த்திகை தீபத்தின் போது ஆலய நிர்வாகம் மற்றும் பொது மக்களின் அற்புதமான ஒத்துழைப்பால் எவ்வாறு நம் ஆஸ்ரமம் சார்பில் அய்யர்மலையில் மலை உச்சியில் கார்த்திகை தீப ஜோதியை தரிசிக்க வைக்கும் பெரும்பேறு (எத்துணை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் இப்பெருவாய்ப்பு மீண்டும் கிட்டுமோ?)  கிட்டியது போல எங்கெல்லாம் சூரிய பூஜை நடைபெறவில்லையோ அங்கு நீங்கள் அனைவரும் ஒன்று கூடி தக்க அனுமதியுடன் பாஸ்கர பூஜையை அபிஷேக ஆராதனை, தான தருமங்களுடன் நிகழ்த்தினால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இத்தகைய அரிய தெய்வீக தரிசனத்தைப் பெற்றுத் தருகின்ற மகத்தான புண்ணிய சக்தியைப் பெறலாமன்றோ?

கோயில்கள்

சூரிய பூஜை நாட்கள்

சென்னை ஸ்ரீகுன்றத்தூர் ஸ்ரீநாகநாத சுவாமி கோயில்...

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி மாசி மாதம் 17, 18, 19, 20, 21 (மார்ச் 1, 2, 3, 4, 5) தினங்கள். இங்கு தற்போது சூரிய பூஜை நடக்கின்றதா என்று முன் கூட்டியே அறியவும்.

சேலம் அருகே ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்பமூர்த்தி ஈஸ்வரன் கோயில்.

மாசி 1, 2, 3, 4, 5, 6, 7 (பிப்ரவரி 13, 14, 15, 16, 17, 18, 19)

சென்னை பூந்தமல்லியில் ஸ்ரீவைத்தியநாத சுவாமி ஆலயம்...

பங்குனி 7, 8, 9, 10, 11 தேதிகள் (மார்ச் 21, 22, 23, 24, 25)

தஞ்சாவூர் அருகே கண்டியூர்

சூரிய அஸ்தமன நேரத்தில் மாசி மாதம் 13, 14, 15 (பிப்ரவரி 25, 26, 27)

கும்பகோணம் அருகே திருவழுந்தூர் ஆலயம்.

மாசி 23, 24, 25 (மார்ச் 7, 8, 9) தேதிகளில்

கும்பகோணம் அருகே திருச்சேறை பெருமாள் ஆலயம்

மாசி 13,14,15 (பிப்ரவரி 25,26,27) தேதிகளில் மாலை நேரம் ஆலயத்தில் நன்கு விசாரித்துக் கொள்ளவும்..

மாயூரம் அருகே ஸ்ரீவைத்தீஸ்வரன் ஆலயம்

மாசி 19, 20, 21 (மார்ச் 3, 4, 5) கோயிலில் அறிந்து கொள்ளவும்...

பானு சப்தமி விரதம்

சப்தமி திதி மிகவும் சுபமான திதிகளுள் ஒன்று, கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதற்கும், கண் அறுவை சிகிச்சை செய்வதற்கும் மிகவும் சிறப்பான நாளே சப்தமி திதியாகும். இசைக் கலைகளில் ஈடுபாடு கொண்டுள்ளோர் சப்தமி திதிகளில் குறித்த சில ஆலயங்களில் எவ்விதக் கட்டணமும் பெறாமல் நல்ல இறைப் பணியாக கச்சேரிகளை நிகழ்த்தி வந்தால் சிறந்த புகழையும், கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் பெறுவர். சுமங்கலித்துவ சக்தியைத் தரவல்லது ஸ்ரீசப்தமி திதி பூஜையாகும். கணவனுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் நல்வரமாகத் தருவதே சப்தமி திதி விரதமாகும்.

மொத்தம் உள்ள பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 திதிகளும் மற்றும் அமாவாசை, பௌர்ணமி திதிகளும் ஒவ்வொன்றும் எத்தனையோ விசேஷ தெய்வீகத் தன்மைகளைத் தன்னுள் கொண்டுள்ளன. அஷ்டமி, நவமி என்று பல திதிகளை இன்று சுப காரியத்திற்கு ஏற்றதன்று என்று ஒதுக்கி வருகின்றார்கள்.. எந்தத் திதியும் தீது பயப்பது அல்ல. ஆனால் ஒவ்வொரு திதியிலும் செய்ய வேண்டிய காரியங்கள் உண்டு. மனிதனானவன் ஆழ்ந்து ஆலோசித்து எக்காரியத்தையும் நிகழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் கால நேரப் பாகுபாடுகள் நடைமுறைக்கு வந்தன. நினைத்தால் எதனையும் செய்திடலாம் என்ற எண்ணம் வருமேயானால் அவசர கோலத்தில் இது அழிவிற்குத்தான் வழி வகுக்கும். பெரியோர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் ஆசியுடன் நல்ல காரியங்களைச் செய்தல் வேண்டும் என்பதற்காகத்தான் நல்ல நேர இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து தினங்களும், மற்றும் எல்லா நேரங்களுமே நல்லதாக அமைவதில்லை என்று சொல்வதை விட ஒவ்வொரு மனிதனுக்கும் உரித்தான நல்ல நேரங்கள் சில குறித்த நாட்களில் தான் அமைகின்றன என்பதே உண்மையாகும்.
எத்தனையோ கர்மங்களின் தொகுப்பாகத்தான் ஒரு மனிதப் பிறவி கிட்டுகின்றது. மனிதப் பிறவியின் இரகசியம் என்னவென்றால் அவரவர் தம்முடைய கர்மவினைகளை நன்முறையில் கழித்து இறை நெறியில் ஈடுபட்டு, பிறப்பு, இறப்பு அற்ற பெரு நிலையை அடைய வேண்டும் என்பதேயாகும். எனவே எப்போதுமே இறைப்பணியில் ஈடுபட்டிருப்பதற்கு எவ்வித நேரத் தடையும் கிடையாது. ஆனால் இலௌகீகமான காரியங்களில் அதாவது சுயநலமுள்ள காரியங்களில் தன்னுடைய குடும்பத்திற்கோ தனக்காகச் செய்யப்படும் செயல்களுக்காக நிச்சயமாக சில கால நேர பாகுபாடுகள் உள்ளன. ஏனென்றால் இவ்வாறு இல்லாவிடில் எதையுமே எப்போதுமே செய்யலாம் என்ற மனப்பான்மை தான் மனித மனதினுள் ஏறி ஒரு கட்டுப்பாடற்ற, பண்பற்ற, ஒழுங்கு முறையற்ற வாழ்க்கை தான் மிஞ்சும். இது சமுதாயக் கட்டுக் கோப்பையும் பாதிக்கும். எனவே பூமியானது தெய்வீக அமைதி நிலவுகின்ற இறைச் சமுதாயப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மனிதர்களுடைய வாழ்க்கை செம்மையான ஆன்மீகப் பாதையாக வேண்டும் என்பதற்காகத்தான் கால இலக்கணங்களும், இறைநெறி முறைகளும் நன்கு வகுக்கப்பட்டு நம் பெரியோர்களால் தரப்பட்டுள்ளன.
பிரதமை திதி முதல் அமாவாசை அல்லது பௌர்ணமி திதி வரை உள்ள 15 தினங்களிலுமே செய்ய வேண்டிய காரண, காரியங்கள் உண்டு. கல்வி, தொழில், பிரயாணம், உழுதல், பயிரிடுதல், களை எடுத்தல், வணிகம், கடன் கொடுத்தல்/ வாங்குதல், பூணூல் போடுதல், திருமணம், சீமந்தம், வளைகாப்பு, கிரஹப் பிரவேசம் என்று விதவிதமான காரியங்களை எல்லோரும் ஒரே நாளிலா நிறைவேற்ற முடியும்? அந்தந்த மனிதனுடைய ஜாதக கிரஹ அமைப்புகளைப் பொறுத்துத்தான் நல்ல தினங்கள் அமைகின்றன அல்லது அமையுமாறு ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இத்தகைய பஞ்சாங்க இலக்கணப் பகுப்பு கூட நம்முடைய வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காகத்தான் என்பதை உணர்ந்து கொண்டால் தான் நாம் கால தேவதைகளின் ப்ரீதியை முறையாகப் பெற முடியும்.
உண்மையில் சுப நேர தெய்வீக அம்சங்களைத் தந்தருள்பவர்கள் நவக்கிரஹ மூர்த்திகள் தாம், அவர்கள் தாம் தெய்வமூர்த்தி சாட்சிகளாக நின்று நம்முடைய கர்மவினைகளின் தன்மையை நாமே அனுபவித்துக் கழித்திட, இறைவனைத் துய்த்துணர நல்வழி காட்டுகின்றனர்... இவ்வகையில் அஷ்டமி, நவமி திதிகளானவை பலவிதமான வழிபாடுகளுக்கும், பூஜை தினங்களுக்கும் மிகச் சிறந்த தினங்களாக அமைகின்றன.. ஏனென்றால் இத்தினங்களில் தான் சூரிய, சந்திர மற்றும் ஏனைய கிரஹங்கள் பௌர்ணமி / அமாவாசையை ஒட்டி ஒரு குறித்த கோணத்திலோ, அருகிலோ அல்லது விரிந்தோ நவகோணங்களிலும், அஷ்டகோணங்களிலும் கூடுகின்றன..
கற்கோண சக்தி... :- சிலவிதமான கற்களை எண்கோணத்திலும், நவகோணத்திலும் அமைத்துப் பார்த்தீர்களேயானால் அவற்றிற்கு உட்புறமும், வெளிப்புறமும் அற்புதமான மூலாதார ஈர்ப்பு சக்திகள் ஏற்படுகின்றன என்பதை உணரலாம். இதனைத் தான் பிரம்மாந்திரக் கற்கள் என்று சொல்கின்றார்கள்.. இந்த பிரம்மாந்திரக் கற்களின் எண்கோண, நவகோண அமைப்புகளுக்கு தட்ப, வெப்ப நிலையையும், மழைப் பொழிவையும், காற்றுச் சூழலையும் வடிக்கின்ற ஈர்ப்பு சக்தி நிறைய உண்டு. எனவே தான் இன்றைக்கும் மலேசியா போன்ற நாடுகளில் மழையைப் பெய்விக்கின்ற தாந்த்ரீக, மாந்த்ரீக முறைகளில் அஷ்டகோண, நவகோண முறைகளில் கற்களோ, நவரத்தினக் கற்களோ, யோக அமைப்புகளில் குறிப்பிட்ட பிரமிட் தத்துவ முறைகளில் அடுக்கப்பட்டு இதனால் எழும் மந்திர சக்திகளைக் கொண்டு கிரஹ ஈர்ப்பு முறைகளைச் சீர்படுத்தி நமக்குப் பயன்படும் வகையில் முறைப்படுத்துகின்றார்கள்.

ஸ்ரீசப்தலிங்கங்கள் புதுக்கோட்டை

இவ்வாறாக சமுதாயத்திற்கு நல்வரம் தரும் இறை பூஜைகளுக்கு ஏற்ற மிகவும் சக்தி வாய்ந்த திதிகளாக அஷ்டமி, நவமி திதிகள் அமைந்திருப்பதால் தான் அக்காலத்தில் இவற்றைப் பொது பூஜை தினங்களாக அமைத்தார்கள்.. இதனையே காலப் போக்கில் அசுப திதிகளாக்கி விட்டார்கள்! எல்லா திதி தேவதைகளும் ஒவ்வொரு வகையில் நமக்கு அருள்பாலிப்பவையே என்பதை அறிந்திடுக! திதி மகிமைகளில் சப்தமி திதியானது மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. புதுக்கோட்டையிலுள்ள திருக்கோகர்ணம் சிவாலயத்தில் சப்த ஸ்வர லிங்க மூர்த்திகளாக ஏழு சிறு லிங்க வடிவ அமைப்புகள் உள்ளதைப் பலரும் அறியார்.
மிகவும் சக்தி வாய்ந்த சப்த ஸ்வர லிங்க மூர்த்திகள் இவை.. பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத்தான் தென்படும்... ஆனால் இவற்றுள் அடங்கிக் கிடக்கின்ற தெய்வீக சக்திகளோ எண்ணற்றவை. இசையமைப்பாளர்களும், பாடகர்களும் இசைத் துறையில் ஈடுபாடு கொண்டோரும். புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள இந்த சப்த ஸ்வர லிங்க மூர்த்திகளை தரிசித்து அபிஷேக, ஆராதனைகள் செய்து இவற்றின் முன் அமர்ந்து குறித்த சில கீர்த்தனைகளைப் பாடுவார்களேயானால் அவர்களுக்கு நல்வாழ்க்கை அமைவதோடு இசைத் துறைக்குத் தம்மை முழுதும் அர்ப்பணிக்கின்ற நல்ல உத்தம தெய்வீக மனோநிலையும் கிட்டும். ஏனென்றால் தற்காலத்தில் இசை விற்பன்னர்கள் பெரும்பாலோர் தம்முடைய இசைக்காகக் கட்டணத்தைப் பெற்று இசை மூலம் செல்வப் பெருவாழ்க்கை வாழ்கின்ற நிலையைத் தான் நாம் காண்கின்றோம்.. ஸ்ரீமகாதேவ சிவன் போன்ற மிகவும் அரிய பாடகர் தாம் ஒரு பைசா கட்டணம் கூடப் பெறாது தம்முடைய வாழ்க்கையையே இசைத் துறைக்கு அர்ப்பணித்து முக்திப் பெருநிலையை அடைந்து நல்வழி காட்டியுள்ளார்கள்!
ஸ்ரீமகா தேவ சிவன் புதுக்கோட்டை சப்தலிங்க மூர்த்திகளின் சக்தியை உணர்ந்த உத்தமப் பெரியோர்களில் ஒருவராவார்.. கலியுகத்தின் தாத்பர்யமாக இவ்வாறாகத் தான் பல தெய்வ மூர்த்திகளின் மகத்துவம் அறியாது நாம் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.. இனியேனும் மகான்களும், யோகியரும், சித்புருஷரும் காட்டுகின்ற இறைத்தல மகிமைகளை உணர்ந்து, குறித்த நாட்களில் அந்தந்த தெய்வ மூர்த்திகளை வழிபட்டு அபரிமிதமான பலன்களைப் பெற்று, வாழ்க்கையில் இழந்து விட்ட எத்தனையோ பூஜைகளுக்கும் பரிகாரத்தைப் பெற்று விடுவோமாக!
பானுவின் சூரிய பூஜை
பானு சப்தமி என்று தொடங்கினோம் அல்லவா! இதற்கு இப்பெயர் வரக் காரணம் என்ன?
துரியோதனனின் மனைவிதான் பானு என்ற பெண்மணியாவாள். சூரிய பூஜையில் தலைசிறந்து விளங்கிய பெண்மணி. அதர்மத்தின் உருவாக விளங்கிய துரியோதனனுக்கு தர்மத்தின் சிகரமாக விளங்கிய பானு நல்மனைவியாக வாய்த்தாள். ஆனால் ஒரு தர்மபத்தினியால் தன் கணவனைச் சீர்திருத்த முடியவில்லையா என்ற கேள்வி எழலாம். நல்மனைவி என்ற முறையில் சகதர்மிணி என்ற உத்தம நிலையில் தன்னுடைய இல்லறப் பணிகளைச் சீராக செய்தவளே ஸ்ரீபானுதேவியாவாள்! ஆனால் நல்மனைவியின் நல்வாக்கினை அலட்சியம் செய்தமையால்தான் துரியோதனன் நல்வாழ்க்கையை இழந்தான். துரியோதனன் எத்தனையோ அதர்ம காரியங்களில் ஈடுபட்ட பொழுது பானு தேவிதான் முன்னின்று அவனுக்கு எத்தனையோ நல்புத்திமதிகளை அளித்தாள். ஆனால் அதனை துரியோதனன் பொருட்படுத்தவில்லை..
பானுவானவள், துரியோதனனுடன் வாழ்ந்த வாழ்க்கையை அறிவதைவிட அவள் எத்தகைய பூஜை முறைகளைக் கையாண்டு நன்னிலை அடைந்தாள் என்பதை இங்கு காண்போம்.. பானு பிறந்த உடனேயே ஜோதிடர்கள் அவளுடைய திருமண வாழ்க்கையில் பலவித துன்பங்களும், இடையூறுகளும், கைம்பெண் நிலையும் கிட்டுமென முன்னரே அறிந்து அதற்குரித்தான பிராயச்சித்த முறைகளையும் நல்கினர். இறையருளால் பானு சிறுபெண்ணாக இருக்கும் பொழுதே பாஸ்கர பூஜை எனப்படும் சூரிய பூஜையில் மிகச் சிறந்து விளங்கினாள். இரத சப்தமி, மகர சங்கராந்தி , உத்தராயண, தட்சியாணயனம் போன்ற புண்ணிய தினங்களில் பல அரிய சூரிய பூஜைகளைக் கடைபிடித்து தன் தெய்வீகத் தன்மையைப் பெருக்கிக் கொண்டாள். எதுவாக இருந்தாலும் என்ன பயன்? துரியோதனன் என்ற அதர்மவாதிதானே அவளுக்குக் கணவனாகக் கிட்டினான் என்றுதானே எண்ணத் தோன்றுகின்றது... உண்மை அதுவல்ல!
துரியோதனனுடைய வாழ்க்கைத் துணைவியாக விதிப்படி ஒரு வாழ்க்கையைத் தானே மனநிறைவுடன் ஏற்றுக் கொண்ட பானுவானவள் இராணி என்ற உயர் பதவி மூலம் கர்வம் கொள்ளாது இலட்சக் கணக்கான இல்லறப் பெண்மணிகளைத் தனித் தனியே சந்தித்து அவர்களுக்கு பாஸ்கர பூஜையை, சூரிய பூஜை முறைகளை எடுத்துரைத்து உணர்வித்தாள். உண்மையில் இன்று நாம் பாஸ்கர பூஜை என்று கொண்டாடுகின்ற அனைத்தும் இலட்சக்கணக்கான ஜீவன்களுக்கு பானுவால் தான் நன்கு அறியும்படி செய்யப்பட்டதுதான் என்பது பலரும் அறியாத தெய்வீக இரகசியமாகும். தனக்குக் கைம் பெண் கோலம் வந்திடும் என்பதை முன்னரே உணர்ந்தாலும் கூட மகாராணி என்ற முறையில் தான் பல இலட்ச மக்களைச் சந்திக்கின்ற தெய்வீக நல்வாய்ப்பு கிட்டும். அப்போது நல்லருளைப் பெற்றுத் தருகின்ற சப்தமி திதி பூஜையைப் பற்றி அனைவருக்கும் உணர்த்திடலாம் என்ற தார்மீக சிந்தனையுடன் தான் அவள் தெய்வீக சேவைகளில் ஈடுபட்டாள்.
சித்தியின்றேல் முக்தியுண்டு :- பானு நினைத்திருந்தால் தன்னுடைய சப்தமி திதி பூஜையின் பலாபலன்களாகத் தனக்கு வர இருக்கின்ற கைம்பெண் நிலையைக் களைந்திருக்க முடியும். ஆனால் வெறும் சுயநலத்திற்காக மட்டும் தன்னுடைய பூஜா பலன்களைப் பெற அவள் விரும்பவில்லை. மேலும், அதர்மத்திற்குத் துணை போகக் கூடாது அல்லவா! எதுவும் விதிப்படி நடக்கட்டும் என விதியின் வசம் தன்னை அர்ப்பணித்துத் தன்னுடைய இறைப்பணிகளைத் தொடர்ந்தாள்.. சித்திகளைப் பெற்றாலும், தாமாக வந்தாலும் ஒருக்காலும் சித்தியைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இன்றைக்கும் கலியுகத்தில் எத்தனையோ மகான்கள் புற்று நோய், காச நோய், கண் நோய்களைத் தங்கள் உடலில் ஏற்று அவற்றைக் களைகின்ற அற்புதமான தபோபலன்களைத் தாங்கள் பெற்றிருந்தாலும் கொஞ்சம் கூட அதில் ஈடுபடாது தன்னுடைய தெய்வீக சக்திகளை எல்லாம் மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த, வாழ்கின்ற மகான்களும், யோகியரும், சித்புருஷரும் எத்தனையோ எத்தனையோ உண்டு.
இதைப் போலத்தான் துரியோதனனின் மனைவி பானு தன்னுடைய சப்தமி திதி பூஜாபலன்களை எல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்து அதன் பலன்களை எல்லாம் தன்னுடைய குடிமக்களுக்குச் சென்றடையும் வண்ணம் அற்புதப் பணியாற்றினாள்.. ஸ்ரீதுர்வாச மாமுனி பற்றி நாம் நன்கு அறிவோம். பிரபஞ்சத்தின் அனைத்து கோடி லோகங்களிலும், நட்சத்திர மண்டலங்களிலும் , கிரஹ தேவதா மண்டலங்களிலும் என்றும் உலவும் தெய்வீக சக்தியைப் பெற்றிருப்பவர். ஸ்ரீதுர்வாச மகரிஷியினுடைய அருட்பெரும் தவத்திறன் என்னவென்றால் இல்லறப் பெண்மணிகளுடையத் துன்பங்களைக் களைகின்ற பலவிதமான பூஜைகளைத் தந்தருளிய மாமுனி அவர். துர்வாசரின் சினம் என்றாலே பலரும் அஞ்சி ஒதுங்கிய பொழுது குடும்பப் பெண்மணிகள்தாம் அவருடைய தெய்வீகத் தன்மைகளை நன்கு உணர்ந்து, சரணடைந்து அவரிடமிருந்து பலவிதமான பூஜை முறைகளையும், மந்திரங்களையும் உபதேசமாகப் பெற்று ஒழுக்கமான பண்பாடு நிறைந்த, பக்தி நிறைந்த தெய்வீக வாழ்வைப் பெற்றனர்.
குந்தி தேவி, கௌசல்யா, மண்டோதரீ, தாரா போன்ற உத்தமப் பெண்மணிகளுக்கு நல்பூஜைகளை உபதேசித்த மகரிஷி ஸ்ரீதுர்வாச மகரிஷி ஆவார். ஸ்ரீதுர்வாச மகரிஷியிடமிருந்து தான் சப்தமி திதி பூஜையின் மகிமைகளை நன்கு உணர்ந்து பானு அதனைத் தன் சிறு பிராயத்திலிருந்தே, ஐந்து வயதிலிருந்தே கடைபிடித்து நற்கதியைப் பெற்றாள். இன்றைக்கும் உத்தம லோகத்தில் நல்ல இறை நிலையை அடைந்து இல்லறப் பெண்களுக்கு அருள்பாலிக்கின்ற தெய்வீகத் தன்மையை உடையவளாகப் பானு பிரகாசிக்கின்றாள். இன்றும் உயர்ந்த ஓர் நட்சத்திரமாகப் பிரகாசிக்கின்ற நற்கதியை ஸ்ரீபானுமதி பெறுவதற்குக் காரணமே அவளுடைய சப்தமி திதி பூஜையாகும்.
சப்தமி திதியில் பிறக்கின்ற பெண்களுக்கு பானு என்ற பெயரைச் சூட்டுகின்ற பண்பாடு உண்டு, பானுவாரம் எனப்படும் ஞாயிற்றுக் கிழமையானது பானு என்ற பெயரைக் கொண்டுள்ளோருக்கும் சப்தமி திதியில் பிறந்தோருக்கும் மிகவும் சிறப்பான நாளாகும். மேலும், ஞாயிற்றுக் கிழமையும், சப்தமி திதியும் சேர்ந்த நாளுக்கான பல விசேஷமான பூஜைகள் மூலம் பெண்கள் சுமங்கலித்துவ பாக்யத்தை எளித்தில் பெற்று விடலாம். இத்தகைய மகா விசேஷத்தைக் கொண்டதே ஞாயிறும், சப்தமியும் சேர்கின்ற அற்புதமான நாளாகும். பானு சப்தமி விரதம் வரும் 7.2.1999 அன்று அமைகின்றது... நன்கு காய்த்துக் குலைகளுடன் கூடிய இரண்டு வாழை மரங்களை இன்று கோயிலில் துவார பாலகர்கள் இருக்கின்ற நுழை வாயிலில் இருபுறமும் கட்டி, தோரணைகளுட்ன் அலங்காரம் செய்து இவ்வாழை மரங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி வழிபட வேண்டும். ஏனென்றால்.... துவார பால மூர்த்திகளாக இருக்கின்ற தெய்வமூர்த்திகள் யாவருமே வாழை மரத்தைப் பூஜித்து இப்பெரும் நிலையை அடைந்தார்கள்..
துவார பாலகர்கள் என்றால் ஏதோ சாதாரண தேவதைகள் என்று எண்ணி விடாதீர்கள். மூலமூர்த்திகளை வழிபடுவதற்கு உரித்தான முறைகளில் நாம் துவாரபாலகர்களை வணங்கி உள்ளே செல்லும் பொழுது சுயநலமற்ற தியாகம் நிறைந்த பிரார்த்தனைகள் மட்டுமே அர்த்த மண்டபத்திலோ, மூலமூர்த்தியின் முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். நோய் தீர வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும் போன்ற எந்த விதமான சுயநலம் உள்ள பிரார்த்தனைகள் இருப்பினும் அவற்றை துவாரபாலகர்களின் முன்னே நின்று தான் மூலமூர்த்திகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இறைநியதி உண்டு. ஏனென்றால் பிரார்த்தனைகளின் வகை முறைகளைக் கண்காணித்து வகைப்படுத்துகின்றவர்களே துவாரபாலகர்களாவார்.. அப்படியானால் நம்முடைய கர்ம வினைகளைக் கழிப்பதற்கு துவாரபாலகர்கள் எந்த அளவிற்குப் பங்காற்றுகின்றார்கள் என்பதை ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்..! ஆலயங்களில் உள்ள ஒவ்வொரு கல்லும் தெய்வீக சக்தியுடன் பரிமளிப்பதாகும். ஒவ்வொரு தெய்வமூர்த்தியும் சர்வேஸ்வரனின் அம்சமாய்ப் பல வழிகளில் நமக்கு அருள்பாலிக்கின்றார்..
பில துவார மஹிமை
பிலதுவாரம் என்று சில ஆலயங்களில் அமைந்திருக்கின்றது.. திருவலஞ்சுழியில் இன்றும் இதனைக் காணலாம்.. பிலதுவாரம் என்பது இறை ஜீவ விருத்தியைக் குறிக்கின்றது.. ஜீவன்கள் பிறப்பது எல்லாம் பிலதுவாரத்தின் மூலமாகத்தானே! பிலதுவாரம் மகத்தான தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் காமாக்யா என்னும் திருத்தலம் அம்பிகையின் யோனி பீடமாக இன்றும் வழிபடப்பட்டு வருகின்றது.. இதனை பிலதுவாரப் பெரும் பீடம் என சித்புருஷர்கள் போற்றுகின்றார்கள்.. காமக் குற்றங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், பெண்களுக்கு உரித்தான இயற்கையான தெய்வீக சக்தியை நன்குணர்ந்து ஜாதி, மத பேதம் மட்டுமின்றி ஆண், பெண், விலங்கினங்கள், தாவரங்கள் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்திலுமே இறைவன் உய்கின்றான் என்ற உத்தமப் பெரு நிலையை அடைவதற்கு இந்த யோனி பீட வழிபாடு பெரிதும் உதவுகின்றது. இத்தகைய உத்தம இறைநிலையை அடையப் பெரிதும் உதவுவதே பிலதுவாரப் பூஜைகளாகும். பிலதுவார பூஜை இரகசியங்களுள் ஒன்றே வாழை முக பூஜையாம்...
வாழைமுக முக பூஜை
பலருக்கும் இளவயதிலேயே மரண கண்டங்கள் ஏற்படுவதுண்டு.. கண்டம் என்றால் அந்த சமயத்தில் அவ்விடத்தில் விதியின் போக்கானது அந்நிலையில் உள்ள புண்ணிய சக்திக்கு ஏற்பவும், பெரியோர்களின் ஆசிக்கு ஏற்பவும் மாறுபடக்கூடும் என்பதை உணர்த்துகின்ற நியதியாகும் கரணம் தவறினால் மரணம் என்று சொல்வார்கள்.. ஆதலால் கண்டத்திலிருந்து தப்புவோரும் உண்டு. சிக்குவோரும் உண்டு. இளவயதில் மரண கண்டத்தைப் பெற்றுள்ளோர் இதிலிருந்து தப்பும் முகமாகத்தான் வாழை முகப் பூஜை என்ற கதலி பூஜை என்ற ஒன்று உண்டு.
பலருக்கும் முதல் திருமணத்தில் கண்டம் என்று ஒன்று இருக்குமாயின் அவரை வாழை மரத்துடன் திருமணம் செய்வித்து அவ்வாழையினை ஓடுகின்ற ஆற்று நீரில் விடுகின்ற பிராயச்சித்த பரிகார பூஜை முறை ஒன்றானது வாமன தாந்த்ரீகத்தில் இன்றும் நிலவுகின்றது... வாழை மரத்திற்குப் பொன் மாங்கல்யம், அணிவித்து முதல் கண்டத்தைப் பூர்த்தி செய்து ஏழை, எளியோருக்குப் பொன்னால் ஆன பொருட்களால் தானம் செய்வதால் இந்த சுவர்ண தானத்தின் மகிமையாலும், கதலி (வாழை) பூஜை சக்தியாலும் மரண கண்டங்கள் நீங்குகின்றன என்பதும் உண்மையே.
எனவே பானு சப்தமி திதி அன்று துவாரபாலகர்கள் அருகே குலை, பூக்களுடன் கூடிய இரண்டு முழு வாழை மரங்களை வைத்து அதற்குத் தகுந்த பூஜை செய்து ஆலயத்தை அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வர வேண்டும். சப்தமி திதி முழுவதும் இவ்வாழை மரங்கள் ஆலயத்திலேயே இருப்பது நல்லது. இதற்கான தக்க, அனுமதியை ஆலயத்தில்  முன்னரேயே பெற்றிடவும்! மறுநாள் நவமி திதி அன்று வாழை மரத்திலுள்ள வாழை இலை, வாழைத்தண்டு வாழைப்பூ, வாழைக்காய் ஆகியவற்றை உணவுப் பண்டங்களாகச் சமைத்து வாழை இலையில் வைத்து குறிப்பாக கன்னிப் பெண்களுக்கும், பழுத்த சுமங்கலிகளுக்கும் எவ்வித ஜாதி, மத பேதமின்றி அன்னதானமாகச் செய்வதால் கணவனுக்கு நீண்ட ஆயுளும், நல்ஆரோக்கியமும் கிட்டுகின்றது. பலவிதமான பிணிகளால் ஏதேனும் ஒன்று மாற்றி ஒன்று நோயினால் இருக்கின்ற கணவன்மார்களுக்கு நல்முறையில் ஆயுளோடு நல்வாழ்க்கையைப் பெற்றுத் தர இந்த சப்தமி திதி பூஜை பெரிதும் உதவுகின்றது.
சந்ததி விருத்திக்குப் பெரிதும் உதவுவது இந்த சப்தமி திதி பூஜையாகும். சப்தமி திதி அன்று உங்கள் இல்லத்தின் முன்னும், பூஜை அறை மற்றும் சுவாமி படத்தின் அருகிலும் மேற்கண்டதைப் போல இரண்டு வாழை மரங்களை வைத்துத் தோரணங்களால் அலங்கரித்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி வாழை மரத்தை அலங்கரித்து அதற்குக் கற்பூர ஆரத்தி செய்து வழிபட வேண்டும். வெறும் வாழை மரத்தை வழிபடுகின்றோம் என்று எண்ணாதீர்கள்.. இன்றைக்கும் வாழை மரமே ஸ்தல விருட்சமாக விளங்குகின்ற திருத்தலங்கள் உண்டு. இந்த பானு சப்தமி திதி பூஜையை ஸ்தல விருட்சமாக வாழை உள்ள இடங்களில் கொண்டாடுவீர்களேயானால், இதனால் கிட்டுகின்ற பலன்களை எழுத்தால் வடிக்க இயலாது. இல்லறப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான துன்பங்களைக் களைவதற்குச் சிறப்பான பூஜை மிகவும் எளிமையானதும் கூட.

தலவிருட்சம் வாழை
திருப்பைஞ்ஞீலி

திருக்கழுக்குன்றம், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி போன்ற இடங்களில் வாழை மரமே ஸ்தல விருட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பானு சப்தமி திதியில் உங்கள் இல்லத்திலுள்ள அனைத்து அறைகளின் நுழைவாயிலிலும் வாழை மரங்களைக் கட்டி அதற்குப் பூஜை செய்திடுக! சந்ததி குழந்தை இல்லாதோர் காலையிலிருந்து மாலை வரை இவ்வாழை மரங்களை அறையின் நுழைவாயிலில் வைத்து இரவில் இதனுடைய இலைகளைப் படுக்கையில் பரப்பி அதில் உறங்கி எழுதல் வேண்டும்.. திபெத் நாட்டில், ASTRAL TRAVEL எனப்படும் மனநிலைப் பிரயாணத்தில் தீர்க்க தரிசனத்தைப் பெறுவதற்காக, இரவு முழுவதும் வாழை மற்றும் முக்கியமான மூலிகை இலைகளைப் பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி, நிறைந்த மூலிகைச் சக்திகளைப் பெறுகின்ற மூலிகை வைத்தியம் ஒன்றும் நடைமுறையில் உண்டு.
இதே போல் பானு சப்தமி திதியில் தம்பதிகள் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருமே வாழை இலையை விரித்து அதில் உறங்கி எழுதலால் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும், நாடி நரம்புகளுக்கு அபரிமிதமான மூலிகை சக்திகளும் உண்டாகின்றன. ஏனென்றால் மூலிகை வைத்தியத்தில் விந்து அணுக்களின் எண்ணிக்கைக் குறைவை நிவர்த்தி செய்வதற்காக ஒரு நாள் முழுவதும், குறிப்பாக சப்தமி திதி, முழுவதும் பசுவிற்கு வாழை இலை, வாழைக்காய், வாழைத்தண்டு போன்ற வாழை வகை மட்டுமே அதற்கு உணவாக அளித்து மறுநாள் அதனுடைய பாலை உட்கொள்ள வேண்டும். இது போன்று சப்தமி திதி விரதத்தைக் கடைபிடித்து வருவோருக்கு விந்து அணுக்கள் சீரடைந்து சந்ததி தழைப்பதற்குப் பெரிதும் உதவுகின்றது. இது பலரும் அறியாத மூலிகை வைத்திய இரகசிய முறையாகும்.
ஏனென்றால் பசுவானது வாழை வகைகளைத் தன்னுடைய உணவாக ஏற்கும் பொழுது அன்று முழுதும் அதனுடைய இரத்தத்தில் வாழையினுடைய மூலிகைச் சத்தானது கிரஹிக்கப்பட்டு பால் மூலமாக அதனுடைய கதலி ஜீவ அணு விருத்திச் சக்தியை ஜீவன்களுக்குத் தருகின்றது. இவ்வாறாக வாழை போல பசுமாடும் நமக்குப் பலவிதமான முறைகளில் உதவுவதால் தான் பசுவும் ஒரு தெய்வமாக, பெற்ற தாய்க்கு அடுத்த இரண்டாவது ஸ்தானத்தை வகிக்கின்றது. மூன்றாவது தாய் ஸ்தானத்தைப் பெறுவது வாழை மரமாகும். இதனால் தான் அன்ன பிரசானம் எனப்படும் விசேஷப் பண்டிகையில் முதன் முதலில் கைக்குழந்தைக்கு அன்னத்தை ஊட்டும் போது குருவாயூர் போன்ற ஆலயங்களில் முதலில் சுவாமி பிரசாதமாக அன்னத்திற்கு முன் வாழைப் பழத்தை ஊட்டுவார்கள்.. தாய்ப்பால், பசும் பாலிற்குப் பிறகு வாழைப் பழமாதலின் தாய்க்குரிய ஸ்தானத்தை வாழையும் பெறுகின்றது. மேலும் திருமணங்கள் உள்பட பல நற்காரியங்களிலும் வாழைமரம் நம்மை வரவேற்று உபசரித்து பெரியோர்களைப் போல வளைந்து நமக்கு ஆசி கூறி வரவேற்கின்றது. வாழை மரத்தில் வந்து தங்கி அருள்பாலிக்கின்ற தேவதைகள் எத்தனையோ உண்டு. குலை தள்ளி இருக்கின்ற வாழை மரங்களுக்கு ஆசீர்வாத சக்திகளும், சந்ததி விருத்தி ஆசியும் நிறைய உண்டு. எனவே தான் ஆசீர்வாத தேவதைகள் இதில் தான் வந்து உறைந்து நமக்குப் பேரருளைத் தருகின்றன.. மேற்கண்ட முறையில் பானு சப்தமி தினத்தில் எளிய பூஜைகளையும் கடைபிடித்து நவமி திதியின் போது வாழை மரத்தின் அனைத்து பகுதிகளையும் உணவாக்கி ஏழைகளுக்குக் குறிப்பாகக் கன்னிப் பெண்களுக்கும், பழுத்த தீர்க்க சுமங்கலிகளுக்கும் தானமாக அளித்து வருவதால் பலவிதமான நல்வரங்களைப் பெற்றிடலாம். இது மிகவும் கிடைத்தற்கரிய விரதமாகும். இந்த பானு சப்தமி விரத மகிமையைப் பலருக்கும் அறிவித்து, அனைவரும் இதனை கடைபிடித்து தங்களுடைய வாழ்க்கை இன்னல்களிலிருந்து விடுதலை பெற நீங்களும் ஓர் நல்ல இறைக் கருவியாகப் பணியாற்றுங்களேன்! தேவூர், திருப்பைஞ்ஞீலி, மருகல், திருக்களாஞ்சேரி போன்ற ஆலயங்களிலும் வாழை மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பஞ்சநதன மஹா சிவராத்திரி
பகுதான்ய ஆண்டு மஹா சிவராத்திரியில் அருள்புரியும் நடராஜரே மிகவும் விசேஷமாக கல்லில் எழுந்து அருள்பாலிக்கின்றார். ஆலயமெங்கும் காண்கின்ற சிலா ரூபங்கள் அனைத்துமே மிகவும் சக்தி நிறைந்த கற்களாகும். எத்தனையோ மஹரிஷிகளும், யோகியர்களும், சித்புருஷர்களும், கோடிக் கணக்கான ஆண்டுகளும், யுகங்களும் தவம் இருந்து தாங்கள் இறைவன் எழுந்து அருள்கின்ற சிலா ரூபங்களாகவும், உலோகப் படிமங்களாகவும், திருமலை, திருஅண்ணாமலை, திருக்கழுக்குன்றம், போன்ற மலைத் தலங்களிலுள்ள படிகளாகவும், ஆக வேண்டும் என நல்வரம் வேண்டிப் பெற்று மகிழ்ந்தனர்.. இறைவனே எழுந்தருள்கின்ற சிலாக் கற்கள் என்றால் அதனுடைய மகிமையை எளிதில் விளக்கிடவா முடியும்? சொற் பொருள் கடந்த உயரிய நிலையை உடையதன்றோ அச்சிலாமூர்த்திகள்! எல்லாக் கற்களுமா தெய்வீக சிலா கற்களாக ஆகிவிட முடியும்? நதன யோகம் என்ற ஒரு அற்புதமான யோகக் கலையைத் தவமாகக் கொண்ட சிலாரூபக் கற்கள் தான் தெய்வீகச் சிலைகளாக மாறுகின்றன. சிலாரூபங்களை வடிவிப்பதற்கான கற்களை தேர்ந்தெடுப்பதற்கான சில தெய்வீக இரகசியங்களும் வழிமுறைகளும் உண்டு. இதற்கெனக் குறித்த சில பிருதிவி யோக, அப்பியாச விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீநடராஜமூர்த்தி ஊட்டத்தூர்

சிலாக் கல் ரகசியங்கள் :- பொதுவாக வாஸ்து ஹோம இரகசியங்களைப் பரிபூர்ணமாக அறிந்தவர்களால் தான் சிலாகற்களின் இரகசியங்களை நன்கு உணர்ந்திட முடியும். இக்கற்பாறைகளிலேயே ஆண்கல், பெண்கல், அலிக்கல் என மூன்று வகையான கற்கள் உண்டு. கற்களின் வண்ணத்தைப் பொறுத்தும், கற்களைத் தட்டும் போதும் எழுகின்ற ஸ்வர தொனிகளைக் கொண்டும் தான் அவற்றின் வகைகளைப் பகுத்து உணர முடியும். இதிலும் விஷ்கம்ப யோகம் எனப்படும் அற்புதமான யோக நேரத்தில் தான் கற்களின் இசைப் படிமங்களை உய்த்து உணர்வதற்கான மிகவும் சிறந்த தெய்வீக நேரமாகும். சிலாரூபங்களை வடிப்பதற்காகக் கிடைக்கும் கற்கள் வட திசையில் கிடைக்குமாயின் அதனை துரீய யோக நேரத்தில் தான் விரத பூஜை மேற்கொண்டு வெட்டி எடுத்தல் வேண்டும்.
எந்தவித தெய்வ மூர்த்திக்கு எந்தவிதமான ஆண், பெண் அலிகற்களைக் கொண்டு சிலாரூபங்களை வடித்திட வேண்டும் என்று சிலாரூப ரகசிய விதிமுறைகளும் உண்டு.. கல்லை வடிக்கின்ற போது குருவிரல் (ஆள்காட்டி விரல்), சூரிய விரல் (பாஸ்கர), புதவிரல் (சுண்டு விரல்) போன்ற விரல் கோணங்களைப் பயன்படுத்துகின்ற வகை முறைகளும் உண்டு.. எக்காரணம் கொண்டும் தெய்வச் சிலாரூபம் வடிக்கின்ற கல்லில், நகக் கண்கள் படுவது கூடாது. இதற்காகத்தான் மருதாணி இட்ட விரல்களுடன் தான் நதனக் கற்களின் கற்களின் இசைப் பரிமாணங்களைக் கணிக்க வேண்டும் என்ற இலக்கணமும் விதிக்கப்பட்டுள்ளது.. முப்பூ ரகசியம் என்பது இறை ரூபங்களை வடிப்பதற்கான சித்புருஷர்கள் அருள்கின்ற அற்புதமான சிற்பக் கலையாகும். ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யான நதனம், யாழி நதனம் என்ற ஐவகையான நதன அம்சக் கலைகளை கொண்டு விளங்குவது தான் சிற்பக்கலைத் தத்துவமாகும். முப்புரி நூல் கொண்டு அப்பூதி சேர்வதே ஆறு நடனக் கலையப்பா என்று யோகமுடைய சிற்பக் கலை நாடி வாக்கியம் பாடுகின்றது....
சிற்பகந்த நாடிகளிலே ஊடுகலை ரகசியங்கள் என்று சிற்பக்கலை பரிணாமப் பிரிவு என்று ஒன்று உண்டு. இதில் தான் மேற்கண்ட முக்கியமான ஐந்து வகையான நதன சிலாக்கற்களைப் பற்றிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. இதனைத் தக்க சற்குரு மூலமாகப் பெற்றால் தான் இதன் தாத்பரியங்களை நன்கு உய்த்து உணர முடியும்.. மேலும், தெய்வங்களுக்கான சிலா ரூபக்கற்களை வடிக்கும் போது அதனை ஓர் உத்தமமான இறைப் பணியாகக் கருதித்தான் தொண்டு ஆற்ற வேண்டுமே தவிர அதற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆனால் பெரியோர்களால் சிற்பக்கலை நன்கு விருத்தி அடைவதற்காக அளிக்கின்ற சன்மானங்களை ஏற்பதில் எவ்விதத் தவறும் கிடையாது.. சுயநலத்தை விடுத்து தியாகசீலத்துடன் தெய்வமே ஆவாகனம் ஆகின்ற சிலாரூபத்தை வடிக்கின்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி உத்தம இறைப்பணிச் சிலையை வடிக்கும் போது தான் நாம் பெற்ற பிறவியின் தெய்வீகக் கடமை நன்முறையில் நிறைவேறுகிறது என்பதை உணர வேண்டும்.. முப்பூ ரகசியத்தின் ஒரு பகுதியாகத் தான் பஞ்சநதன சிலாக் கற்களின் விதிமுறைகள் விளக்கப்படுகின்றன. இதில் ஒன்றாகிய ஊடு ரகசியமானது தெய்வீகச் சிலைகளை வடிப்பதற்கான பிளவுப் பாறை வடிவங்களை நன்கு விளக்குகின்றது...
நடராஜ பஞ்ச நதனம்
ஏன் இத்தகைய தெய்வீக ரகசியங்கள் நிறைந்த சிலாக் கற்களின் தாத்பரியங்கள் அளிக்கப்படுகின்றன என்றால் வருகின்ற பகுதான்ய வருட மகா சிவராத்திரியில் தான் பலகோடி யுகங்களிலும் பகுதான்ய மகா சிவராத்திரி விசேஷமாக சர்வேஸ்வரனுடைய 64 மூர்த்தங்களும் ஒன்றாகப் பரிணமிக்கின்ற நடராஜ பஞ்சநதன பலாபலன்கள் கைகூடுகின்றன. முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவ மூர்த்திகளும் பகுதான்ய மகா சிவராத்திரியில் தான் ஸ்ரீநடராஜப் பெருமானின் பஞ்சநதன அம்சங்களின் பரிபூர்ண ஒளிக் கதிர்களை தரிசித்து நமக்கு எண்ணற்ற நல்வரங்களைப் பெற்று தருகின்றார்கள். கல்லாலான ஸ்ரீநடராஜ தரிசனம் என்பது எளிதல்லவே!
ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும் ஸ்ரீநடராஜர் அபிஷேக தினங்கள் என்று சில மாதங்களில் வருவதுண்டு. பஞ்ச நடன அபிஷேக தினங்கள் என்று சித்புருஷர்கள் இவற்றை அழைக்கின்றார்கள் இந்நாட்களில் கல்லால் ஆன ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.. ஆனால் லட்சக் கணக்கான ஆலயங்களில் ஒரு சில இடங்களில் தான் பஞ்சநதன மூர்த்தியாக ஆண் சிலாரூபத்தில் ஸ்ரீநடராஜர் எழுந்தருளி இருக்கின்றார்.. என்பது அபூர்வமான தெய்வீக ரகசியமாகும்.. இதெல்லாம் முப்பூ ரகசியம் எனப்படும் சித்புருஷர்களின் சிலாக்  கிரந்தங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஊடு முறை நதன கிரந்தங்களில் எவ்வாறு கல்லால் ஆன ஸ்ரீநடராஜ சிலாரூபங்கள் வடிக்கப்பட வேண்டும் என்ற இறை நெறிமுறைகள் குரு மூலமாக உபதேசம் பெறப்பட வேண்டியதாகக் குறிக்கப்பட்டுள்ளன. இதில் பஞ்ச நதனம் என்ற சிலாக் கல்லைப் பற்றி மட்டும் நாம் இங்கு விளக்குவோம். ஏனென்றால் முப்பூ ரகசியங்களைப் பற்றி விளக்கப் புகுந்தோமேயானால் பற்பல புராணங்களாக விரிந்து மாபெரும் இதிகாசமாக ஆகிவிடும்..
பஞ்ச நதனம் என்பது ஒரு வகை தெய்வீகப் பாறையாகும்.. பல நவரத்தினங்களைப் பதித்து வைத்தாற் போல பலகோடி சூரியங்களின் பிரகாசத்தை உடைய இந்தக் கல்லானது சாதாரண கண்களுக்கு வெறும் கருப்புக் கல்லாகத் தான் தோன்றும். இதில் கருநீல நிறமோ கரும்பச்சை நிறமோ இருப்பதுண்டு.. ஆனால் பஞ்ச நதனக் கல்லின் பிரகாசமானது சூரிய மண்டலத்தில் எழுகின்ற சித்சபேசக் கிரணங்களில் இருந்து பெறப்பட்டமையில் இதனை உத்தம பக்தி நிலையில் தான் தரிசிக்க முடியும். பஞ்ச ஸ்வர தொனிகளை உடைய தெய்வீகக் கல் இது. எத்தனையோ கோடி கோடியாய் பாறைகள் இவ்வுலகத்தில் கிடைத்தாலும், பல கோடிக்கு ஒன்றாக தான் இந்த பஞ்ச நதனக் கல் கிட்டும். பஞ்ச நதனக் கல்லினால் வடிக்கப்பட்ட ஸ்ரீநடராஜர் சிலை எங்கு இருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கின்ற தல்லவா? இந்த பஞ்சநதன சிலா ரூப நடராஜரை இந்த பகுதான்ய வருட மகா சிவராத்திரியில் வழிபடுதல் மிகவும் பெறுதற்கரிய பாக்கியமாகும். 60 வருடத்திற்கு ஒரு முறையே கிட்டுகின்ற தெய்வத் திருவாய்ப்பு என்றால் இப்பிறவி எடுத்ததின் பெரும் பலனை இங்கு தானே நாம் பெற முடியும்! எத்தனையோ தேவாதி தேவ மூர்த்திகளும் ஓடோடி வந்து பகுதான்ய மகாசிவராத்திரியின் போது வழிபடுகின்ற மூர்த்தி யென்றால் சாதாரண மக்களாகிய நாம் இந்த பாக்கியத்தை நழுவ விடலாமா?
பஞ்ச நதனக் கல்
பகுதான்ய மகா சிவராத்திரியை பஞ்சநதன மகா சிவராத்திரி என்று சித்புருஷர்கள் போற்றிப் புகழ்கின்றனர். எத்தனையோ இந்திர மூர்த்திகள் தங்களுடைய இந்திர பதவிகளை மீண்டும் பெற்று நற்கீர்த்தி அடைந்தனர்.... மேலும் எத்தனையோ மன்னர்கள் இறைவனுக்கு பலவித ஆபரணங்களைச் செய்த போது அவற்றை இந்த சிலாரூபக் கல்லால் ஆன ஸ்ரீநடராஜ மூர்த்திக்குப் படைத்து, அணிவித்து தான் அந்தந்த கோயில்களுக்கான நகைகளை அணிவித்தனர் என்றால் இந்த பஞ்ச நதன நடராஜ மூர்த்தியின் சிறப்பை, மகத்துவத்தை, முக்கியத்துவத்தை என்னென்று கூறுவது!
ஏனென்றால் சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்ல பஞ்சநதன ஸ்ரீநடராஜ மூர்த்தி இன்றைக்கு இத்திருக்கோயிலில் கல்லில் அமர்ந்து கனிந்து அருள்பாலிக்கின்றார்.... இத்திருக்கோயிலில் உள்ள நடராஜ மூர்த்தி பஞ்ச நதனக் கல்லில் வடிவு பெற்றவர்.. இது எங்கு கிடைக்கின்றது தெரியுமா, இதனை எவ்வாறு பெயர்ப்பது ? இது சாதாரண மனித முயற்சி கொண்டு பாறைகளிலுமிருந்து பிளக்கப்படுவதும் கிடையாது.. அந்தக நரிமணம் என்ற ஒரு அற்புத விருட்சம் உண்டு. இருளிலும் ஒளி காட்டும் அற்புத விருட்சமிது! இன்றைக்கும் கொல்லிமலை, பொதியமலை போன்ற மூலிகை மலைக் காடுகளில் இவ்விருட்சம் காணப்படுகின்றது.. இந்த விருட்சத்தின் வேர்கள் தான் பஞ்சநதனப் பாறையை பிளந்து செல்லும் தன்மையைக் கொண்டதாகும்.
இந்த அற்புத மரத்தின் தன்மை என்னவென்றால் இவ்விருட்சத்தின் வேர்கள் எப்போதும் வடக்கு நோக்கித் தான் நகர்ந்து விரிந்து விருந்தியடையும். வடக்கு நோக்கியுள்ள வேர்களுக்கு மிகவும் மகத்துவம் உண்டு. எவ்வாறு வடக்கு நோக்கிப் பாய்கின்ற நதி தீரங்களில் தர்ப்பணம் இடுதலோ, கழுத்தளவு நீரில் நின்றவாறு ருத்ரம், ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீவிநாயகர் அகவல் போன்ற திருமந்திரத்தை ஜபிப்பது சிறப்புடையதோ, இதைப் போலத் தான் எந்த மூலிகை வேர்களை எடுக்கின்ற பொழுதும் வடக்குப் பக்கத்தில் அல்லது வடக்கு நோக்கி விரிகின்ற மூலிகைகளுக்கு அபரிமிதமான வைத்திய தெய்வீக சக்தி உண்டு... காசி, திருச்சி அருகே திருமாந்துறை, திருவலஞ்சுழி போன்ற இடங்களில் காவிரி / கங்கை வடக்கு நோக்கிப் பாய்வதால் தான் இவை தெய்வீக புகழ்ப் பெற்று திகழ்கின்றன... அந்தக நரிமண விருட்சத்தின் வேர்கள் தான் பஞ்சநாத பாறையைப் பிளந்து நடராஜர் சிலையை வடிப்பதற்கான அற்புதமான பாறையாக மாறுகின்றது. உளிபடாக் கல் என்றும் சொல்வார்கள். இன்றைக்கும் உளிபடா விடங்க மூர்த்திகள் என்று தஞ்சாவூர்ப் பகுதியிலே பல கோயில் மூர்த்தங்கள் உண்டு. எந்தவித உளி வைத்தும் வடிக்காது தானே உருவான நந்தி மூர்த்திகளும், தெய்வமூர்த்திகளும் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும்... இது போலத்தான் ஊடு ரகசிய முறையில் அந்தக நரிமண மரத்தின் வடக்குப் பகுதியில் பாய்கின்ற வேர்கள் பஞ்சநதப் பாறையை பிளந்து உளிபடா, தெய்வீகக் கல்லாக உருவாக்கி பஞ்சநதனக் கல்லை நமக்குத் தருகின்றது... இந்த பிளவுப் பாறையை தீர்க்க தரிசனமாக கண்டுபிடிக்கின்ற தெய்வீக விரத முறைகள் தான் மிகவும் சிறப்பு உடையதாகும். பொதுவாக இதனை முதலாண்டு மகா சிவராத்திரியில் தொடங்கி ஒரு வருடம் நன்முறையில் விரதமிருந்து அடுத்த மகா சிவராத்திரியின் போது நிறைவுறச் செய்து அன்று தான் இந்த பஞ்சநதப் பிளவுப் பாறையை தேர்ந்தெடுக்கின்ற அற்புத தெய்வீகச் சக்தியை அக்காலத்தில் வல்லுநர்கள் பெற்றிருந்தனர்.. இவை குரு பாரம்பர்யமாக, குரு உபதேசமாக, குரு அருள்மொழிகளாக உபதேசம் பெறப்பட்டமையால் “எதுவும் என்னுடையதல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா, அருணாசலா“ என்றே ஆத்ம பூர்வமாக அக்காலத்தில் உணர்ந்திருந்தனர்..
நவபூஜை மஹிமை :- இவ்வாறாக முப்பூ ரகசியம், ஊடுசிலா ரகசியம் போன்ற தெய்வீகச் சிற்ப கலை அம்சங்களின் மூலம் பெறப்படுகின்ற பஞ்சநதப் பாறைக்கு காப்பு பூஜை, பூதலிங்க பூஜை, அஷ்டநாக பூஜை, தேவ பூஜை, குலதேவதா பூஜை, வசிய பூஜை, பிதுர் ரகசிய பூஜை, மகாசித்த பூஜை, குரு பூஜை – 9 வகையான நவலிங்க பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன.. ஸ்ரீமுருகப் பெருமானே தஞ்சைப் பகுதியில் சோழ நாட்டில் 9 இடங்களில் நவலிங்க பூஜைகளை மேற்கொண்டு பஞ்சநதனக் கல்லை வல்லுநர்களுக்கு பல அபரிதமான சக்திகளை பெற்றுத் தந்தார்... இன்றும் சோழ நாட்டுப் பகுதியில் நவலிங்க பூஜைத் திருத்தலங்கள் உண்டு. பஞ்சநதனப் பாறைக்கு, பஞ்சநதன சிலாக்கல்லுக்கு இத்தகைய 9 விதமான பூஜைகள் நிறைவுற்ற பின் அக்கல்லானது நடராஜ மூர்த்தியின் வடிவைப் பெறுவதற்கு உரியதாகின்றது.
முதலில் காப்பு பூஜையின் போது நவதான்யங்களைக் கொண்டு பலவிதமான மூலிகைக் காப்புகள், அரிசிமாவு, பாசிப் பயிறு, கோதுமை மாவு, முதலியவற்றைக் கொண்டு இப்பாறைகளுக்குக் காப்புகள் இடப்படுகின்றன.. பிறகு பூதலிங்க பூஜையாக ஐந்து வகையான வேள்விகள் இப்பாறையைச் சுற்றி நிகழ்த்தப்படுகின்றன... அஷ்டநாக பூஜையின் போது பஞ்சமியிலும், சதுர்த்தியிலும் எட்டு திக்குகளிலும் உள்ள நாகதேவதைகளுக்குப் பூஜைகள் நிகழ்த்தப்பட்டு அஷ்டமி திதியன்று இப்பாறையின் மீது எட்டு விதமான நாகங்கள் படம் எடுத்து நின்று தெய்வ தரிசனங்களை தந்து இப்பாறைகளுக்கு தெய்வ சக்தியை உண்டாக்குகின்றன.. பிறகு தேவ பூஜையின் போது இக்கற்களுக்கு முப்புரி நூலிடப்பட்டு சந்தனக் காப்பு இடப்படுகின்றது.. குலதேவதை பூஜையின் போது அதற்கு ஆவாஹன கார்ய சக்தி அனுகிரக பூஜை நடைபெறுகின்றது... வசிய பூஜை என்பது இப்பாறைகளின் மந்திர சக்திகளுக்கு உரித்தான தேவதைகளைப் ப்ரீத்தி செய்வதற்கான பூஜையாகும்.. பிதுர் ரகசிய பூஜை என்பது தெய்வீக சக்திகள் நிறைந்த இப்பாறையின் பீஜாட்சர சக்திகளை ஜீவ சம்ரட்சணத்திற்காக பீஜாட்சர வெளிப்பாடுகளை வெளிக்கொண்டு வருதல் ஆகும்..
இதன் பிறகு மிகவும் முக்கியமான மகாசித்த பூஜையையும், குரு பூஜையும் நிகழ்கின்றன.. மகா சித்த பூஜையில் தெய்வ மூர்த்திற்கான சர்வேஸ்வர கடாட்சம் ஆவாஹனம் ஆவதற்கு உரிய பலவகையான அக்னி ஜல, பிருத்வி, வாயு, பூஜைகள் நிகழ்கின்றன... குரு பூஜையின் போது ஸ்ரீநடராஜ மூர்த்தியே ஸ்ரீதக்ஷணா மூர்த்தி ரூபத்தில் பரிணமித்து அரூவ ரூபத்தில் பூஜை நிகழ்கின்றது.. இவ்வாறாக நவலிங்க பூஜைகளில் எத்தனையோ விளக்கங்கள் உண்டு.. இதன் பின்னர் தான் பஞ்சநதன சிலாக்கல்லில் ஸ்ரீநடராஜருடைய திருஉருவம் இறையருளாலும், குரு அருளாலும் வடிக்கப் பெறுகின்றது...
இந்த பஞ்சநதன ஸ்ரீநடராஜ மூர்த்தி தான் பார்க்க இனியவர், பாட இனியவர், தேவ இனியவர், தொட இனியவர், தொடர்ந்து வேண்ட இனிதே அருள்பவர், தொடாமலும் தூர இருந்து வேண்டுவோர்க்கு விடாமல் அருள்பவர்! இவ்வாறு பல்வேறு வரங்களையும் தரவல்ல சிலாரூபத்தில் ஆன கல்லில் வடிக்கப் பெற்ற ஸ்ரீநடராஜ மூர்த்தி இருக்கின்ற தலமே திருச்சி  அருகில் உள்ள ஊட்டத்தூர் என்ற திருத்தலமாகும். ஊட்டத்தூர் ஸ்ரீசுத்த இரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் தான் பஞ்சநதனக் கல்லில் முப்பூ சிலாக்கல் ரகசியங்களுக்கு ஏற்ப ஊடு பிருதிவி ரகசிய முறையில் வடிக்கப்பட்டுள்ளது.. இந்த பஞ்சநதன சிலாரூப ஸ்ரீநடராஜரை எல்லோரும் தரிசித்திடவே எல்லாம் வல்ல அவருடைய திருவடிவம் தான் இந்த இதழின் பின்பக்கத்தில் ஸ்ரீபஞ்சநதன நடராஜ மூர்த்தியாக அருளூட்டுகின்றது... பகுதான்ய ஆண்டின் மகாசிவராத்திரியை இவ்வாலயத்தில் கொண்டாடுவதால் பெறுகின்ற பலன்களோ அளப்பற்றவை!
பகுதான்ய ஆண்டிற்கான ஸ்ரீபஞ்சநதன மஹா சிவராத்திரி பூஜா பலன்கள்! நகை, இரத்தின வியாபாரிகளுக்கும், சுயதொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும், நியாயமான முறையில் உயர்ந்த பதவி, விருதுகளுக்குக் காத்திருப்போர்க்கும் அருள்புரிகின்ற ஸ்ரீசுத்த இரத்தினடிகிரீஸ்வரரே மூலமூர்த்தியாக அருள்பாலிக்கின்ற ஊட்டத்தூர் சிவாலயத்தில் தான் சிலா ரூபத்தில் கல்வடிவில் ஸ்ரீநடராஜர் அருள்பாலிக்கின்றார்.. திருச்சியிலிருந்து வடக்கே சுமார் 30 கி.மீ தொலைவிலிருப்பது ஊட்டத்தூர் என மருவியிருக்கும் ஊற்றத்தூர் ஆகும்.. இதனருகில்  இதனருகில் “நந்தியாறு“ ஓடுகின்றது.. பெரும்பாலான ஆலயங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தி உற்சவ விக்கிரமாக, ஆடல் வல்லானாகத்தான் பஞ்ச உலோகத்தில் எழுந்தருளியிருப்பார்.. கல்லால் ஆன ஸ்ரீநடராஜரைக் காண்பது மிகவும் அரிதாகும்.
வரும் மாசி மஹாசிவராத்திரியன்று இத்திருத்தலத்தில் நந்தியாற்றில் நீராடி நல்விரதம் பூண்டு, சிவபெருமானுடைய 64 மூர்த்தங்களின் பரிபூரண அம்சமாக விளங்கும் பஞ்சநதன சிலாக் கல்லால் இங்கு எழுந்தருளியிருக்கும்  ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு புஷ்பம், வஸ்திரம், பஞ்சாமிர்தம், பால், தேன், புண்ணிய தீர்த்தம் (கங்கை, காவிரி) எண்ணெய், மூலிகைத் தைலம், நவதான்யங்கள், பழங்கள், சந்தனம், பசுநெய், வெண்ணெய் போன்ற 64 விதமான அபிஷேகங்களால் ஆராதித்து ஸ்ரீநடராஜனை வழிபட்டிட பகுதான்ய ஆண்டின் பெறற்கரிய பூஜையாக இது அமைகிறது... அடுத்த பகுதான்ய வருடத்தில், நாம் எங்கு இருப்போமோ? எனவே, அமிர்த விருந்தாய் சற்குருவின் கருணையால், நம் குரு மங்கள் கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமன் அவர்களின் சற்குரு கடாட்சத்தால் சித்புருஷர்களின் கிரந்தங்களினின்றும் கிட்டியுள்ள இவ்வரிய பஞ்சநதன மகா சிவராத்திரிப் பூஜையை ஒப்பற்ற இறைநிலை அடைவோமாக!
நல்விதமான எத்துணையோ முயற்சிகள் எடுத்தும், பலவிதமான நற்காரியங்கள் தடைபட்டிருப்பினும், இவ்வாலயத்தில் அபிஷேக, ஆராதனைகளுடன், குரு பகவானுக்குரித்தான எலிமிச்சை அன்னம் படைத்து ஏழைகட்கு அன்னதானமாக அளித்து வர முயற்சிகள் திருவினையாகும்...
சாப நிவர்த்தி :- பதவி, செல்வம், அந்தஸ்து, அகங்காரம், ஆள் பலம் காரணமாகப் பலரும் எத்துணையோ இறைத் திருப்பணிகளைத் தடுத்து நிறுத்திப் பெறும் சாபத்திற்கு ஆளாகின்றனர்.. இதனால் அவர்களுடைய சந்ததி பாதிக்கப்படும்.. இத்தகைய செயல்கட்குப் பிராயச்சித்தமாக மனம் வருந்தி இங்கு மஹாசிவராத்திரியன்று ஸ்ரீநடராஜரை தரிசித்துத் தங்களால் தடைப்பட்ட நற்காரியங்களை நிகழ்த்திட ஆவன உதவிகள் செய்து வர, பெரும் பழியிலிருந்தும், கொடிய பாவத்திலிருந்தும் விடுபடுவதற்கான பிராயச் சித்த அனுக்கிரஹங்கள் கிட்டும்...  வாகன அதிபர்களும், டிரைவர்களும், அறிந்தோ, அறியாமலோ ஆடு, கோழி, மாடு, நாய் போன்ற ஜீவன்களின் மீது வண்டிகளை மோதி ஜீவ பலிக் குற்றத்திற்கு ஆளாகின்றனர். ஊற்றத்தூர் என்னும் புராதனப் பெயர் கொண்டு இத்திருத்தல மண்தான் நந்தி ஆறான நந்தியின் திருவாயினின்றும் விழுகின்ற பிரம்ம தீர்த்த ஜலப் பிரவாஹத்தால் ஜீவ ஊற்று சக்தியைப் பெற்றுள்ளமையால் இன்று இங்கு நந்தி ஆற்றங்கரையில் காருண்யத் தர்ப்பணமாக விபத்தில் மாண்ட உயிரினங்களுக்கும், உற்றம், சுற்றம், நண்பர்கட்கும், தர்ப்பணம் அளித்து வெல்லத்தாலான இனிப்பு வகைகளை தானமளித்திட ஜீவ பலிக்குற்றங்களுக்கான பிராயச்சித்த நல்வழி கிட்டும்...
சுந்த இரத்தினகிரீஸ்வரராகவும், சுத்த இரத்தினகிரீஸ்வர லிங்க மூர்த்தியாகவும் மூல மூர்த்தி அருள்பாலிக்கும், இத்தலத்தின் கல்லால் ஆன ஸ்ரீநடராஜர் வடிவமானது தேவாதி தேவ லோகங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்றதாய் இன்றும் விளங்குகின்றது... ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் வருகின்ற முக்கியமான ஸ்ரீநடராஜர் அபிஷேக தினங்களில் இத்திருத்தல ஸ்ரீபஞ்சநதன நடராஜ மூர்த்திக்கு தேவ சூட்சுமமாக இன்றைக்கும், திருஅண்ணாமலை உச்சியிலும், பர்வத மலையிலும் நிகழ்வது போன்ற தேவ பூஜைகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன.. இதனை ஆத்மார்த்தமாக உணர்வதற்கான பக்தியை நாம் இன்னமும் பெறுதல் வேண்டும்... ஸ்ரீமஹா சிவராத்திரியன்று இத்திருத்தலத்தில் (ஊற்றத்தூர்) ஸ்ரீநடராஜ மூர்த்திக்கு அனைத்து விதமான தைல எண்ணெய்களாலும், குறிப்பாகக் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, தேங்காய் எண்ணெய், மருதாணி , செம்பருத்தி, போன்ற தைலங்களால் காப்பிட்டு சிவநாமாவளிகளை சத்சங்கமாகப் பலரும் ஓதி நாம சங்கீர்த்தனம் பாடியும், நாதஸ்வரம், மத்தளம், மேளம், மிருதங்கம், வீணை போன்ற வாத்திய இசைக் கருவிகளை வாசித்தும், சப்தஸ்வர தொனிக் கல்லாக விளங்குகின்ற தெய்வீக பஞ்சநதனக்கல் சிலாக்கல் ரூபத்திலிருந்து அபரிமிதமாக நடராஜ சிவகாம சக்தியை நல்லருளால் பெற்றிடுதல் வேண்டும்...
தட்டினால் இசை தரும் பஞ்சநதனக் கல் இது... ஆனால் எவரும் தட்டுதல் கூடாது! ஆடல் வல்லானாகிய தியாகராஜப் பெருமானாகிய, சிதம்பர மூர்த்தியாகிய, சிவ நடராஜ ரூபத்தில் தான் சர்வேஸ்வரனின் 64 மூர்த்தங்களும், பரிபூரணமாக ஐக்கியமாகி அதிலும் இத்தகைய பஞ்சநதன சிலா ரூபத்தில் தான் குறிப்பாக மஹா சிவராத்திரியன்று  தான் ஈஸ்வர சக்திகள் அபரிமிதமாக அருள் மழையாகப் பொழிவதால் இறை மழையில் நனைந்து மறை எழில் பூண்டு வரையில்லா திருவருளைப் பெற்று உய்த்திடுவோமாக! இன்று ஈஸ்வரனின் 64 நாமாவளிகளைத் துதித்து அர்ச்சித்தல் சிறப்பானதாகும், 64 வகை மலர்களாலும், வில்வம், துளசி போன்ற மூலிகைகள், தான்யங்கள், நாணயங்கள், சந்தன, வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சித்தல் சிறப்புடையதாகும். நிலையில்லா வேலையால், வியாபாரத்தால் நிலை கொள்ளாதிருப்போர்க்கு நன்னிலை தரும் நடராஜ மூர்த்தி! மஹா சிவராத்திரிக்குரிய ஊட்டத்தூர் திருத்தலமானது திருச்சி – பெரம்பலூர் சாலையில் பாடாலூரிலிருந்து 5 (ஐந்து) கி.மீ தொலைவில் உள்ளது.
ஈஸ்வரனின் 64 மூர்த்த நாமாவளிகள் (மஹா சிவராத்திரி அன்று ஓதி உய்ய வேண்டிய துதிகள்...)  நமஹ / போற்றி எனவும் கூறலாம்..

1. ஓம் ஸ்ரீலிங்க மூர்த்தயே நம: (போற்றி)

2. ஓம் ஸ்ரீலிங்கோத் பவாய நம:

3. ஓம் ஸ்ரீமுகலிங்காய நம:

4. ஓம் ஸ்ரீசதாசிவாய நம :

5. ஓம் ஸ்ரீ ஸ்ரீகண்டாய நம:

6. ஓம் ஸ்ரீஉமா மஹோசாய நம:

7. ஓம் ஸ்ரீசுகாசநாய நம:

8. ஓம் ஸ்ரீஉமேசாய நம:

9. ஓம் ஸ்ரீசோமாஸ்கந்தாய நம:

10. ஓம் ஸ்ரீசந்திர சேகராய நம:

11. ஓம் ஸ்ரீரிஷபாரூடாய நம:

12. ஓம் ஸ்ரீரிஷிபாந்திகராய நம:

13. ஓம் ஸ்ரீபுஜங்க லளித மூர்த்தயே நம:

14. ஓம் ஸ்ரீபுஜங்கத்திராஸராய நம:

15. ஓம் ஸ்ரீஸந்தியாந்ருத்தராய நம:

16. ஓம் ஸ்ரீஸதாந்ருத்தராய நம:

17. ஓம் ஸ்ரீஓம்ஸ்ரீநாட்ய மூர்த்தயே நம:

18. ஓம் ஸ்ரீகங்காதர மூர்த்தயே நம:

19. ஓம் ஸ்ரீகங்கா விஸர்ஜநாய நம:

20. ஓம் ஸ்ரீதிரிபுராந்தகாய நம:

21. ஓம் ஸ்ரீத்ரைலோக்யாய நம:

22. ஓம் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வராய நம:

23. ஓம் ஸ்ரீகஜயுத்தராய நம:

24. ஓம் ஸ்ரீ ஜவ்ரா பக்கனராய நம:

25. ஓம் ஸ்ரீகீர்த்தி வாஸேஸ்வராய நம:

26. ஓம் ஸ்ரீபாசுபத மூர்த்தயே நம:

27. ஓம் ஸ்ரீகங்காளேஸ்வராய நம:

28. ஓம் ஸ்ரீகேசவார்த்தராய நம:

29. ஓம் ஸ்ரீபிக்ஷாடனாய நம:

30. ஓம் ஸ்ரீஸிஹ்மக்நராய நம:

31. ஓம் ஸ்ரீசண்டேசானு க்ரஹாய நம:

32. ஓம் ஸ்ரீதக்ஷிணா மூர்த்தயே நம:

33. ஓம் ஸ்ரீயோக தக்ஷிணாமூர்த்தயே நம:

34. ஓம் ஸ்ரீவீணா தக்ஷிணா மூர்த்தயே நம:

35. ஓம் ஸ்ரீ காலாந்தக மூர்த்தயே நம:

36. ஓம் ஸ்ரீ காமதஹனாய நம:

37. ஓம் ஸ்ரீலகுளேசுவராய நம:

38. ஓம் ஸ்ரீபைரவாய நம:

39. ஓம் ஸ்ரீஆபதோத் தாரணாய நம:

40. ஓம் ஸ்ரீவடுகாய நம:

41. ஓம் ஸ்ரீக்ஷேத்ரபாலகராய நம:

42. ஓம் ஸ்ரீ வீரபத்ராய நம:

43. ஓம் அகோராஸ்திராய நம:

44. ஓம் ஸ்ரீதக்ஷயஞ்ஞ ஹத மூர்த்தயே நம:

45. ஓம் ஸ்ரீசிநாத மூர்த்தயே நம:

46. ஓம் ஸ்ரீகுருமூர்த்தயே நம:

47. ஓம் ஸ்ரீ அசுவாரூடாய நம:

48. ஓம் ஸ்ரீகஜாந்திரகராய நம:

49. ஓம் ஸ்ரீ சலந்திர வத மூர்த்தயே நம:

50. ஓம் ஸ்ரீஏகபாத மூர்த்தயே நம:

51. ஓம் ஸ்ரீகௌரீ வரப்ரத மூர்த்தயே நம:

52. ஓம் ஸ்ரீபஞ்சநதன மூர்த்தயே நம:

53. ஓம் ஸ்ரீஏகபாத த்ரி மூர்த்தயே நம:

54. ஓம் ஸ்ரீசக்கர தான ஸ்வரூப மூர்த்தயே நம:

55. ஓம் ஸ்ரீகௌரீலீலாச மனுவிதராய நம:

56. ஓம் ஸ்ரீவிஷபாஹரணாராய நம:

57. ஓம் ஸ்ரீகருடாந்திகராய நம:

58. ஓம் ஸ்ரீபிரம்ம சிரச்சேதராய நம:

59. ஓம் ஸ்ரீகூர்ம ஸம்ஹாராய நம:

60. ஓம் ஸ்ரீமகா தேவாய நம:

61. ஓம் ஸ்ரீபிரார்த்தனா மூர்த்தயே நம:

62. ஓம் ஸ்ரீபிட்சாடானாய நம:

63. ஓம் ஸ்ரீசிஷ்யபாவ மூர்த்தயே நம:

64. ஓம் ஸ்ரீரக்த பிக்ஷா ப்ரதானாய நம:

ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை

விரல் முத்திரைக் கோணங்களிடையே கோபுரங்களை தரிசிப்பீர்களாக ! எம்முடைய ஸ்ரீகாயத்ரீ தபஸ் முத்திரைகள் நூலில் அருணாசல கிரிவல முத்திரையாக, 14-வது ஸ்ரீகாயத்ரீ முத்திரையாகப் பரிணமிப்பதே ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரையாகும்..  இம்முத்திரை விளக்கத்தில் அளித்துள்ளபடி நவக்கிரஹச் சின்னங்களாக விளங்கும் நம் கை விரல்களைப் பல கோணங்களில் வடித்து, ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரையாக அமைக்கின்ற பொழுது இதில் 45க்கும் மேற்பட்ட விதவிதமான முக்கோண அமைப்புகள் உருவாகியிருப்பதைக் கண்டு அதிசயித்திடுவீர்கள்! இவையெல்லாம் ஸ்ரீஈஸ்வரியாம் உலக அன்னை உறைகின்ற ஸ்ரீசக்கர, ஸ்ரீநகரக் கோணங்களைக் குறிப்பதாகும்...இதனூடே கோபுர, மலை தரிசனங்களைக் காண்பது மிகவும் சிறப்புடையது... ஆலய தரிசனங்களுக்கு மட்டுமின்றி, திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற போது காணக் கிடைக்கின்ற, இரு கண்களுக்குள்ளும், உள்ளத்துள்ளும் நிறைந்து விளங்குகின்ற ஆயிரக்கணக்கான மலை உச்சி தரிசனங்களைப் பெறுதற்கரிய உங்கள் கண்களால் தரிசிக்கின்ற பொழுது கோபுர தரிசன முத்திரை மூலமாக திருஅண்ணாமலை தரிசனத்தைக் காண்பீர்களேயானால் எத்தனையோ தெய்வீக ரகசிய ஒளிக் காட்சிகளையும் சித்புருஷர்களின்/ மஹரிஷிகளின் தரிசனங்களையும் குருவருள் கூடிடின் நிச்சயமாகப் பெற்று ஆனந்தமடைவீர்கள்! எனவே, அனைவரும் பயில, அறிய, கடைபிடித்து ஸ்ரீதிருஅண்ணாமலை கிரிவலத்தின் போது தெய்வீக தரிசனங்களை உய்த்துணர வேண்டிய முத்திரையிது!

அமுத தாரைகள்

1. இருள் போக்கும் உததீதரரருள் ! இருளில் அமர்ந்து ஜோதியமயமான தேக சாந்தியுடன் உததீ சித்புருஷர் நட்சத்திர யோகம் பயின்று அருள் புரிந்தமையால் தான் தக்கோலத்தில் இன்றும் அவருடைய ஜீவாலய சமாதி லிங்கம் காரிருளில் சிறு சந்நதியாகப் பொலிகின்றது. இங்கு வியாழன் தோறும் பொன்னாங்கண்ணித் தைல எண்ணெயால் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வர வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ செய்த பெருந்தவறுக்குரிய பிராயச்சித்த நல்வழிகள் கிட்டும்..
2. ஸ்ரீசாக்ஷூஷோபநிஷத் மாமந்திரம் – ஸ்ரீசாயாதேவியுடன் ஸ்ரீசக்கர சூர்ய தேவமூர்த்தியே ஓதுகின்ற மந்திரம் எனில் எத்தகைய தெய்வீக சக்தி நிறைந்தது இம்மாமந்திரம். எனவே ஞாயிறன்றும் ரதசப்தமியன்றும்  (24.1.1999) இதனை ஓதி ஸ்ரீசாயா தேவி சமேத சூரிய தேவரை வணங்கி தீர்க்கமான கண் ஒளியையும், நல்தரிசனங்களையும் பெறுவீர்களாக! அதியற்புத சித்புருஷர்களின், மஹரிஷிகளின் தரிசனங்களைப் பெற்றுத் தரக் கூடிய மந்திரம்! ஞாயிற்றுக் கிழமை சூரிய ஹோரை நேரத்தில் இம்மந்திரத்தை ஓதியவாறே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில் ஏதேனும் ஒரு ரூபத்திலோ, வடிவிலோ, புழுவாகவோ, பசுவாகவோ, காகமாகவோ, சக மனிதராகவோ, நாகமாகவோ, எந்த வடிவிலும் சித்புருஷ தரிசனம் நிச்சயமாகக் கிட்டும். ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுமையும் சற்குருவின் திரண்ட அருளும் தான் இத்தகைய பாக்யங்களைப் பெற்றுத் தரும்...
3. சென்ற மாத அமிர்த தாரைகளுக்கான விடை விளக்கங்கள் :- 1. ஸ்ரீபாரிமலர்ப் பிள்ளையார் அருளுமிடம் : திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) .. 2. ஸ்ரீஆறுமுகம் ஆறுகரம் உடைய சன்னதி : கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் உள்ளது.. 3. இறப்பின் இரகசியத்தைத் தெரிந்து மரண பயம் நீங்கித் தெளிவு பெற அருள் செய்யும் ஆலயம் :- தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநீலக்குடியில் திருநீலகண்டராக எழுந்தருளியுள்ள சிவனை மக நட்சத்திரத்தில் அபிஷேகித்து எள் சாதம் அன்னதானம் செய்து தினமும் அபிஷேக நீரை அருந்தி வந்தால் மரண பயம் நீங்கி அவரவர் நிலைக்கு ஏற்றவாறு தெளிவு பெற்று இறைவழி அடையலாம்.
4. தும்பை தீர்க்கும் துன்பம் :- பூலோக வாழ்க்கையில் நோய்கள் வராதவரே கிடையாது.. நோய்கள் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு.. கடுமையான வெயிலிலும் மழையிலும் உழைப்பவர்களுக்கு உடல் வியாதிகள் வருவது இயற்கை தானே! எவ்வித உடல் உழைப்பும் இன்றி அமர்ந்தவாறான வாழ்க்கையைக் கொண்டிருக்கும் வியாபாரிகள், முதலாளிகள், அலுவலகப் பணியாளர்கட்கும் கூட வியாதிகள் வருகின்றனவே. அது ஏனோ? இதற்குக் காரணம் அவரவருடைய கர்ம வினைகள் மட்டுமல்லாது அவர்களுடைய செழிப்பினையும், வளப்பத்தையும், சுகத்தையும் எண்ணி எண்ணி மற்றவர்கள் பொறாமை எண்ணத்தாலேயே அவர்களைத் தாக்குவதாலும் உடல் உபாதைகள் வருகின்றன.. இதற்கு மருந்தால் பலன் தெரியாது.. தெரிந்திடினும் அது குறுகிய காலத்தே! பலவிதமான குறிப்பாக தோல் சம்பந்தமான நோய்கள் நீங்க வேண்டும் என்றால்ல் தும்பை பூவால் ஸ்ரீகாசி விஸ்வநாதர் லிங்கத்திற்கு அர்ச்சித்து தேன் அபிஷேகம் செய்து வர அனைவர்க்கும் குறிப்பாக புஷ்ப வியாபாரிகளும், தங்க வியாபாரிகளுக்கும், பொற் கொல்லர்களுக்கும் வருகின்ற நோய்கள் தீரும்.
5. காசியை விட வீசம் பெரிசு! காசிக்குப் பிரயாணம் என்பது அவ்வளவு எளிது கிடையாது.. அந்த காலத்திலும் சரி, இனி எந்த காலத்திலும் சரி! ஏனென்றால் பலவிதத் தடங்கல்கள், எதிர்ப்புகள், குழப்பங்கள் – இவையனைத்தையும் கடவுளருளால் கடந்தால் தான் அங்கு போய் வரலாம் . சில பேருக்கு அடிக்கடி காசிக்குப் போய் வருகின்ற சந்தர்ப்பங்கள் அமைவது உண்டு. ஒன்று மட்டும் நிச்சயம், காசியிலே பிறந்து, கங்கையிலே வளர்ந்து நீராடி இருந்த பலனைப் பெற வேண்டும் என்றால் தென்னாட்டவர்க்கும் ஒரு அற்புத வழி உண்டு. திருவையாறு, திருவெண்காடு, திருமயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருவாஞ்சியம் ஆகிய ஆலயங்களில் அன்னதானம், ஆடைதானம், தர்மம் திருப்பணிகள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் காசியின் பலனை மிக எளிதில் இருக்கும் இடத்திலேயே பெற்று விடலாம்! காசிக்கு ஈடான பலன்களைத் தரவல்லவை இவை! “காசிக்கு வீசம் பெரிது!” என்று இத்தலங்களின் மஹிமையைச் சொல்வதுண்டு.
6. நல்ல கணவனைப் பெற! திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை அனைவரும் அவரவர் வாயால் சொல்வதை அனைவரும் கேட்டிருப்பர்.. ஆனால் அவரவர் வீட்டுத் திருமணம் என்று வந்து விட்டால் அது வேண்டும், இது வேண்டும் என்று வரதட்சிணை கேட்காதவரே கிடையாது. பெண் வீட்டாரிடமிருந்து பிச்சை எடுத்துப் பிடுங்குகின்ற பொருளால் ஆண் வீட்டார் அமைதியை இழந்து விடுவர் என்பது தர்ம சாஸ்திரம். இவ்வாறு பெண் வீட்டாரைப் பிடுங்கித் துன்புறுத்தி ஊரார் வீட்டுப் பணத்தில் உடல் சூடு காய விரும்பும் மாப்பிள்ளை வீட்டார்களால் பெண்கள் துன்புறாமல் நல்ல இடத்தில் திருமணம் நடக்க ஒரு அற்புத மந்திரம் உண்டு. அதாவது நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல கணவன் கிட்டிட இதனைக் கன்னிப் பெண்கள் தினந்தோறும் ஜபித்து வர வேண்டும்.
காத்யாயனி மஹாமாயே! மஹாயோகின் யதீச்வரி!
நந்த கோபஸுதம் தேவி! பதிம் மே குரு தே நம:!!
7. மனைவியுடன் தெய்வீக அன்புடன் வாழ!
பெரும்பாலானோர்க்கு தன்னுடைய மனைவியை அன்புடன் நடத்துவதற்குப் பதிலாக அதட்டி, உருட்டி, அடக்கி வைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது! ஆனால் மனைவியைப் பார்த்தவுடன் அதட்டலும், மிரட்டலும் பறந்து போய் இவரே அடங்கி விடுகிறார், இது தான் இன்று நடக்கும் உண்மை.. இதெல்லாம் பெரும்பாலும் நம் நாட்டில் கிடையாது.! வெளிநாட்டில் தான் இது மிகுந்துள்ளது. ஆகவே மனைவிமார்கள் கணவனுக்கு அடங்கி தெய்வீகமான அன்புடன் ஆறுதலாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற கணவன்மார்கள் பார்வதி மலையிலிருக்கும் இறைவனுக்கு திங்கள், புதன் கிழமைகளில் புனுகு சார்த்தி கருநீல திராட்சை கலந்த உணவுடன் இயன்ற இதர தானங்களைச் செய்து வந்தால் தன் நிலையையுணர்ந்து மனைவி அன்புடன் வாழ்வாள்.
8. கிரிவல புண்ய சக்தி : அனைத்துக் காரியங்களிலும் வருகின்ற நல்லது, தீயது இவற்றை ஆய்ந்து எமதர்மராஜானிடம் சமர்ப்பிக்கின்ற ஸ்ரீசித்ரகுப்த தேவ மூர்த்தி தன் அடியார்களின் புண்யக் கணக்கு விகிதாசாரத்தை ஸ்ரீசித்ரகுப்த மூர்த்தியினாலேயே நிர்மாணம் செய்ய முடியவில்லையாதலின் தம் இஷ்ட மூர்த்தியாகிய ஸ்ரீசிவகாம சுந்தரியை நோக்கித் தவமிருந்தார்.. அம்பிகை நேரில் தோன்றி திருஅண்ணாமலைத் திருத்தலமானது உத்தம சிவ அடியார்களான சித்புருஷர்களின் இறைப் பாசறையாக விளங்குவதால் தம்முடைய பக்தராகிய சக்தி ரிஷியைத் தக்க அறவழி காணுமாறு பணித்திடவே சக்தி ரிஷி என்ற உத்தம சித்தர் தம் தவத்தின் மூலம் ஒரு தெய்வீகக் கைங்கர்யத்தைச் செய்தார்.. அது என்னவென்றால் திருஅண்ணாமலையைத் தொடர்ந்து பல காலம் கிரிவலம் வரும் அடியார்களின் நல்லது, தீயதை கர்மவினைப் பகுப்பினை நேரடியாக அனைத்தையும் சிவகாம சுந்தரியிடம் சமர்ப்பித்து தேவியின் அருளாணையின்படி கழிக்க வேண்டியதை எல்லாம் கழித்து அம்பிகையின் அருட் தீர்ப்பே அளிக்க வேண்டியனவற்றை அளித்து தர்ம ராஜனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தம் தபோ பலத்தால் ஒரு பெரும் வரத்தைப் பெற்றார்.. அன்று முதல் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் சந்நதியில் ஸ்ரீசித்ர குப்தர் திருச்சந்நிதியும் இருக்க சித்தாகம ஏற்பாடு ஆகியது. ஆகவே சிவகாம சுந்தரியை வணங்குகிறவர்களையும் திருஅண்ணாமலை கிரிவலம் வருகின்ற அடியார்களுக்கானவற்றை சித்ர குப்தர் விசேஷ அருட்பாங்குடன் கவனித்தே எழுதுவார் கர்மவினைக் கணக்குகளை! ஓம் சித்ர குப்தாய நம:!
9. இல்லறக் கொடுமைகள் தீர!
அறுபது வயது, எழுபது வயது, எண்பது வயது ஆனாலும் உடல் ஆரோக்யமும், கை நிறைய பணமும், வசதியான பதவியும் இருந்து விட்டால் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி அகந்தையால் ஆடுகின்றார்கள். தற்காலத்தில் ஆண்டவனை நினைப்பதைத்  தவிர, அன்னதானத்தில் ஈடுபடுவதைத் தவிர, ஆத்ம விசாரத்தில் தெளிவு பெறுவதைத் தவிர மற்ற தேவையற்ற காரியங்களில் தான் பல வயதானோர்கள் தலை தெறிக்க ஆடுகின்றார்கள். பெரியோர்கள் பெரியோர்களாக வாழ்வதே சிறப்புடையது! இத்தகைய வயதானோர்களின் கொட்டத்தால் வேதனை அடைகின்ற இளைஞர்களும், பெண்களும், தம்பதியரும் தங்களுக்கு வருகின்ற, அனுபவிக்கின்ற துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும், ஆணவத்தால் ஆடுகின்ற இத்தகையோரை அடக்கிடவும், மாமனார், மாமியார் கொடுமைகளிலிருந்து மீளவும் திருத்தல சக்தியொன்றுண்டு. இங்கு தான் பல யோகியரும் மஹரிஷிகளும் மக்களுடைய இல்லறத் துன்பங்களைக் களைந்தனர். அந்த இறைவன் இருக்கின்ற இடமோ ஊதிமலை! கோவை மாவட்டம், காங்கேயத்திலிருந்து பழநி செல்லும் பஸ் மார்க்கத்தில் 14 கி.மீ தூரத்தில் உள்ளது. ஊதிமலை முருகனுக்கு செவ்வாய் ஹோரை நேரத்தில் செவ்வாய் தோறும் பழங்களாலான மாலைகள் சாற்றி ஏழைகளுக்குப் பழங்களை தானமாக அளித்து வர முருகனருள் கனிந்து இல்லறக் கொடுமைகள் தணியும்..
10. கடன் தீர்க்கும் கடவுள்!
வேப்பமரத்தின் கீழே அமர்ந்து பெறுகின்ற காற்றை சுந்தரக் காற்று என்பார்கள் பெரியவர்கள்.. தற்காலத்தில் மின்விசிறி இல்லாத வீடே கிடையாது. மின்விசிறி காற்றை அனுபவித்தவர்கள் குளிர் காற்று கிடைக்க வேண்டும் என்று ஏர்கண்டிஷன் போட்டுக் கொள்வார்கள். அப்படி ஏர்கண்டிஷன் போட முடியாதவர்கள் ஏர்-கூலர் போட்டுக் கொள்வார்கள். ஆனால் இக்கருவிகளைத் தயாரிப்போர் வியாபாரம் செய்கின்றோர் தங்கள் தொழிலில்படுகின்ற வாதனைகள் எத்தனை, எத்தனை? ஏ.ஸி கருவிகள், மின் விசிறிகள், வாட்டர் கூலர்ஸ் போன்றவற்றை உருவாக்குகின்ற பெரிய வியாபாரிகளும் சிறிய தொழிலாளிகளும் இதில் ஈடுபட்டுள்ளோருக்கும் இத்தொழிலில் ஏற்படுகின்ற கடனோ சொல்லி மாளாது. இதற்கு சீதளாக்ருத தோஷம் என்று பெயர். இக்குறிப்பிட்ட தொழிலில் வருகின்ற கடனைத் தீர்ப்பதற்கும் முன்னேற்றம் பெறுதற்கும் அற்புத ஒரு தெய்வம் உண்டு. அந்த தெய்வத்திற்கு வெண்ணையும், சர்க்கரையும் படைத்து பக்தர்களுக்கு தானம் அளித்திடில் கடன் தொல்லையிலிருந்து மீள்வர். கடன் தொல்லை தீர்க்கும் சக்தி வாய்ந்த மூர்த்தி இருக்கும் தலம் எது தெரியுமா? பக்தர்களே தேடிக் கண்டுபிடியுங்கள்.. பரமனைத் தேடும் நேரமும் பக்திமார்கத்தின் பாங்கு தானே! ஏனென்றால், வைஸ்ய அனுக்கிரந்த நாடிகளில் ஒவ்வொரு தொழிலுக்கும் மேன்மை தரும் திருத்தல பூஜை விளக்கங்கள் நிறைய உள்ளன.
11. முறையான வாகன வசதி பெற!
வாழ்க்கையில் ஸ்கூட்டர், கார் போன்ற இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே கிடையாது. சைக்கிள் ஓட்டுகிறவர்களுக்கு மொபெட் ஓட்டுகிறவர்களைப் பார்த்தால் மனம் தாங்க மாட்டேன் என்கிறது. மொபெட் ஓட்டுகிறவர்களுக்கு 4- ஸ்ட்ரோக் எஞ்சின் மோட்டார் ஓட்டுகிறவர்களைப் பார்த்தால் பொறாமை.. 4- ஸ்ட்ரோக் எஞ்சின் மோட்டார் ஓட்டுபவர்களுக்கு கார் வாகனங்களை ஓட்டுபவர்களைப் பார்த்தால் மனம் தாள மாட்டேன் என்கிறது... நான்கு சக்கர சிறு கார்களை ஓட்டுபவர்களுக்கு சொகுசுக் கார்களைப் பார்த்தால் மனம் பொறுப்பதில்லை! இவ்வாறு ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைப்படுவதற்கு அங்கு ஒன்றுமே கிடையாது.. மக்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை ஏன் கொள்ள வேண்டும்? முன் வினைப்படி அல்லவா வாகனங்கள் அமைந்து வாழ்க்கையும் நடக்கிறது!

வண்டியூர் தெப்பக்குளம் மதுரை

ஆகவே நீங்களும் அற்புதமான வாகனங்களைப் பெற்று ஓட்ட வேண்டுமா? வாகனம் பெற ஆன்மீகத்தில் பல பரிஹார அனுகூல வழிகள் இருந்தாலும் முக்கியமான வழி மதுரையில் உள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் பிதுர்த் தர்ப்பணங்களும், அமாவாசைத் தர்ப்பணங்களும், பிறருக்கான காருண்யத் தர்ப்பணங்களும் செய்து வர, வாகனத் தொழில், வாகன உதிரி பாகங்கள் விற்பவர்கள், ஓட்டுனர்கள் இவர்கள் தர்ப்பணமும், காயத்ரீ ஜபமும் செய்திடில் நல்லபடியாய் சொந்த வாகனம் அமையும், இவ்வாறு செய்கின்றவர்கள் பெறுகின்ற வண்டிகளைப் பிறர் பார்த்து பொறாமைப் பட மாட்டார்கள்.. எதிர்வினை சக்திகளும் முறிந்து விடும்.
12. இனிய சம்பந்தம் கனிந்திட..!
திருமணம் செய்ய வேண்டுமே என்று பொல்லாத பொய்யெல்லாம் சொல்லி மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றுவதும் உண்டு. பெண் வீட்டார் ஏமாற்றுவதும் உண்டு. இது இந்தக் கால நாகரீகம் ஆகும் என்று எண்ணி விடாதீர்கள்.. பழங்காலத்திலிருந்தே  இவ்வாறு தான் நடந்து கொண்டு இருக்கிறது. திருமணத்திற்குப் பின் தான் ‘குட்டு’ உடைகிறது. ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டால், பெண் வீடும் முழிக்கிறது, மாப்பிள்ளை வீடும் முழிக்கிறது.. முழித்தால் பிரச்னைகள் தீர்ந்து விடுமா? நிச்சயமாய்த் தீராது.. ஆனால் இத்தகைய ஏமாற்று வேலைகளில் சிக்காமல் நல்ல குடும்பத்தில் பெண் கிட்டிட இதற்குப் பூரணமாய் உதவி செய்யும் எம்பெருமானாகிய வேல் முருகன் வேலை படுகண்ணி என்னும் மந்திரக் கட்டால் வில்லாய் மாற்றி வில்லேந்திய வேலவராய் நின்று பூம்புகார் அருகே உள்ள சாயாவனத் திருத்தலத்தில் வழிகாட்டக் காத்துள்ளார். தஞ்சம் புகுங்கள், தரணியில் நலம் பெறுவீர்! விசாகம், கார்த்திகை, அனுஷம், மிருகசீரிஷம், செவ்வாய், மகம், உத்திர நாட்களில் இங்கு வேலுக்கு வெண்ணெய் சாற்றி வெண்ணெய், நெய் கலந்த உணவை அன்னதானமாக அளித்து வாருங்கள். நல்ல சம்பந்தம் வாய்க்கும்!
13. கண்ணனூரில் கழியும் கல்யாணச் சுமைகள்
பல குடும்பங்களில் அக்காவுக்கு திருமணம் ஆகவில்லையே என்று தம்பியும், தங்கைக்குத் திருமணம் ஆகவில்லையே என்று அண்ணனும் வருந்தி சும்மாகவே இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது தவறு. அக்குடும்பத்தில் வயதில் இளையோராயினும் எவருக்குத் திருமணம் குதிர்கின்றதோ அவருக்கு முதலில் திருமணம் செய்து வைத்திடில் அவர்களுடைய திருமண அதிர்ஷ்டக் காற்றானது மற்றவர்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடும்... இந்த அதிர்ஷ்டக் காற்றிற்கு சித்தர்கள் இட்ட பெயரோ ‘விண்ணேறு விளக்கொளிக் கூட்டுக் காற்று’ அவ்வாறு கல்யாணம் ஆனவர் கையால் இலவசத் திருமணங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் திருமணப் பேறு பெறுவர்... இவ்வாறு திருமணம் பூரணம் பெறுவதற்கு உதவியாய் இருக்கும் தெய்வம் கண்ணனூர் கோயிலாகும். புதுக்கோட்டை அருகில் உள்ள மிகப் பழமையான கோயில். இவ்வாலயத்தில் ஏழைகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்திடில் இதுவே பல திருமணத் தடங்கல்களுக்கு நிவர்த்தியாக அமைந்து இவ்வாறு நடத்தி வைத்தவரின் இல்லத்தில் உள்ள ஏனையோர்க்கான திருமணத் தடங்கல்களையும் நீக்குகின்றன...
14. கண்ணுக்குக் கண்ணான கதிரவப் பூஜை
சிவ சூரியனாக அருள்பாலிக்கின்ற ஸ்ரீசூர்ய பகவானே சாக்ஷுஷோபநிஷத் மந்திர சக்திகளை அருள்கின்ற பரம்பொருள் மூர்த்தி சர்வேஸ்வரனின் வலது கண்ணிலிருந்து பிறந்த சூர்யமூர்த்திகளுள் சிவசூரியனானவர் பஞ்சபூதத் தலங்களில் அக்னிக்குரிய மூர்த்தியான ஸ்ரீஅருணாசலேஸ்வரனின் வலக்கண் ஜோதி அம்சங்களுடன் அருள்பாலிப்பவரே ஸ்ரீசிவசூரிய மூர்த்தி! எங்கெல்லாம் ஸ்ரீசிவசூரியன் அருள்பாலிக்கின்றாரோ அங்கு சூரிய பகவானுகுரித்தான ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்தை நீரால் கழுவி, பச்சரிசி மாவினால் ஆலயம் முழுதுமே சூரிய கோலமிட்டு ஸ்ரீசாக்ஷுஷோபநிஷத் மந்திரங்களை ஓதியவாறே அடிப்பிரதட்சிணம் செய்து வருவதலால் கண் சம்மந்தமான நோய்களுக்கு நிவர்த்தி கிட்டும்... ஞாயிற்றுக் கிழமையன்று தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஸ்ரீசூர்ய கோடீஸ்வரர் (ஒன்பத்து வேலி) ஆலயத்தில் சுவாமிக்கு வெண்பட்டு சார்த்தி கண்களின் அமைப்பில் கோதுமை அல்வா செய்து படைத்து தானமளித்து வர குழந்தைகளுக்கு கண் பார்வை விருத்தியடையும்..
நித்ய கர்ம நிவாரணி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது.. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேராவண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்..

தேதி

 வழிபாட்டு தான, தர்ம முறைகள்

   மனம் குளிரும் சகாய பலன்கள்

1.2.1999

அணில்களுக்கு உணவு இடுதல்

ஒதுங்கிப் போன மனைவி வந்து சேருவாள்.

2.2.1999

மயில்களுக்கு உணவளித்தல்

மேல் அதிகாரிகளின் தொல்லை குறையும்.

3.2.1999

மனைவிக்குப் புதிய காலணிகள் அளித்தல்..

நண்பனின் உதவியைப் பெறுவர்..

4.2.1999

ஒரு நல்ல சுமங்கலிப் பெண்மணியின் தாய்க்குப் பத்து முழும் மல்லிகைப் பூ அளித்து ஆசி பெறுதல்..

வாகன ப்ராப்தி கிட்டும்..

5.2.1999

பார்வதி, பாக்கியம், ‘பா’‘ என்ற எழுத்தில் தொடங்குகின்ற பெண்மணிகளுக்குத் தாலி சரடு, மஞ்சள், குங்குமம் அளித்தல்..

கணவனின் காரியம் சித்தி பெறும்.

6.2.1999

நன்றாகப் படிக்கின்ற ஏழை மாணவனுக்கு கை கடிகாரம் தருதல்

கடன் உதவியை எளிதில் பெறுவர்.

7.2.1999

பருத்திப் பஞ்சு பறிக்கின்ற தொழிலாளிகளுக்கு வயிறார உணவு இடல்..

ஆஸ்துமா நோயின் வேகம் குறையும்..

8.2.1999

சாக்கு (கோணி) தைக்கும் தொழிலாளிகளுக்கு முழு வாழையிலையில் வயிறார உணவிட்டு ஆடை தானம்...

 வைத்தியர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகம்.. பகைமை, சண்டை தீரும்..

9.2.1999

கோந்து, பிசின் எடுக்கும் தொழிலாளிகளுக்கு வயிறார உணவிட்டு ஆடை தானம்...

வெளிநாட்டுத் தொடர்பு நலமாய் அமையும்..

10.2.1999

நாய்களுக்கு மருத்துவ உதவி..

நம்பினவரால் நலம் பெறுவர்..

11.2.1999

ஏழைகளுக்கு தலைமுடி வெட்ட உதவுதல்...

நண்பர்கள் தேடி வந்து பண உதவி செய்வர்.

12.2.1999

ஏழை விவசாயிக்கு ஏர் வாங்கித் தருதல்...

எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிட்டும்..

13.2.1999

லட்சுமி குபேர பூஜை

வியாபாரத்தில் நல்ல விருத்தி

14.2.1999

விளக்கில்லா சிவன் கோயிலில் தொடர்ந்து விளக்கு ஏற்றிடில்...

கர்வம், அகங்காரம் நிறைந்த மனைவியால் வரும் துன்பம் தீரும்..

15.2.1999

குண்டாக இருக்கின்றவர்கள் கொழுக்கட்டை செய்து வலம்புரி விநாயகர் கோயிலில் தானம் செய்து வர...

கொழுப்பு சம்பந்தமான நோய்கள் தணியும்.

16.2.1999

ஏ.ஸி ரெப்ரிஜிரேட்டர் ரிப்பேர் செய்கின்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவிகள்...

எதிர்பாராமல் வருகின்ற துன்பத்திலிருந்து விடுதலை பெறுவர்...

17.2.1999

தம் பள்ளிக் கணக்கு வாத்தியாரை சந்தித்து அவருடைய தேவையை ஓரளவு நிறைவு செய்திடில்....

பக்கத்து வீட்டுக்காரரால் வருகின்ற துன்பம் தீரும்..

18.2.1999

11 கலச கோபுரங்கள் உள்ள திருக்கோயிலில் அன்னதானம்...

துணி ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள துன்பங்கள் படிப்படியாய்த் தீரும்..

19.2.1999

பாதாள விநாயகருக்குப் பால் பொங்கல் நைவேத்தியம் தானம்...

கிராமத்துப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்...

20.2.1999

கன்று குட்டியோடு இருக்கும் பசுவிற்கு கோதுமைத் தவிடு அளித்திடில்.-

தாய் வீட்டைச் சார்ந்தவர் நலம் பெறுவர்..

21.2.1999

குதிரைக் குட்டிக்கு வேகவைத்த கொள் அளித்தல்...

 மனக்குழப்பம் தீரும்.

22.2.1999

ஏழைக் கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ இட்ட பால் தானம்...

வயிறு சம்பந்தமான கோளாறுகள் தீரும்..

23.2.1999

இரட்டைக் குழந்தை பெற்ற ஏழைத் தாய்க்கு வயிறார உணவிடுதல்..

புதிய வீடு அமையும்...

24.2.1999

ரோகிணி நட்சத்திரப் பெண் குழந்தைகளுக்கு புதுப் பாவாடை, சட்டை தானம் ..

மனைவிக்கு வரும் தலைவலி நோய் தீரும்.

25.2.1999

மரத்தில் ஏறி மரத்திலேயே உறங்குகின்றவர்களுக்குக் கீழிறங்கியவுடன் உணவு ஆடைதானம் செய்திடில்...

ஓடிப் போனவர் மீண்டும் திரும்பி வருவர்..

26.2.1999

மலைவாழ் பழங்குடி ஏழை மக்களுக்கு ஆடைதானம்...

போட்டியில் வெற்றி பெறுவர்...

27.2.1999

துப்புரவுத் தொழிலில் வேலை செய்கின்ற ஆறு குழந்தைகளை பெற்ற துப்புரவுப் பணியாளரான சுமங்கலிக்குப் பச்சை நிற ஆடை தானம்......

வாகனத் துன்பத்திலிருந்து மீள்வர்.

28.2.1999

அரிசி மில்/ இயந்திரத் தொழிலாளிகளுக்கு ஆடைதானம்..

 துணிக்கடைக்காரர்களுக்கு வருகின்ற துன்பம் தீரும்..

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam