உன்னுள் இருப்பது இறைவன், அவனுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.

15. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : காந்தாரபஞ்சமம்

பந்து சேர்விர லாள்பவளத்துவர் வாயினாள் பனிமாமதி போல்முகத்து
அந்தமில் புகழாள் மலை மாதொடும் ஆதிப்பிரான் வந்துசேர்விடம் வானவர் எத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

காவியங்கருங் கண்ணினாள் கனித் தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடையன்ன நடைச் சுரி மென் குழலாள்
தேவியுந் திருமேனி யோர் பாகமாய் ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணனொப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

பைய ராவரு மல்குல் மெல்லியல் பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாள் ஒரு பாலுடை எம்மிறை சாருமிடஞ்
செய்யலாங் கழுநீர் கமலம் மலர்த் தேறலூறலிற் சேறுலராத நற்
பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.

முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின் அரும்பு தேன்கொள் குரும்பை முவா மருந்து
உள்ளியன்ற பைம்பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளை மால்வரை அன்னதோர் மேனியின் மேவினார்பதி வீமரு தண்பொழில்
புள்ளி னந்துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

பண்ணி யன்றெழு மென்மொழியாள்பகர் கோதையேர் திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்ற மொய்ம்பிற் பெருமாற் கிடம் பெய்வளையார்
கண்ணி யன்றெழு காவிச் செழுங் கருநீல மல்கிய காமரு வாவிநல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.

சனிக் கிழமைகளில் காலையில் தயிர் சாதத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து உண்டு வந்தால் உடல் வளம் பெறும்.

வாணிலா மதிபோல் நுதலாள் மடமாழை ஒண்கணாள் வண்தரளந் நகை
பாணி லாவிய இன்னிசையார் மொழிப் பாவையொடுஞ்
சேணிலாத் திகழ் செஞ்சடை எம்மண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போணிலா நுழையும் பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

காருலாவிய வார்குழலாள் கயற் கண்ணினாள் புயற் காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள் மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னியன் மன்னி நிகரு நாமம்முந் நான்கு நிகழ்பதி
போருலா வெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

காசை சேர்குழலாள் கயலேர்தடங் கண்ணி காம்பன தோட்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதமருந் திருமார் பகலத்து
ஈசன் மேவுமிருங் கயிலை யெடுத்தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

கொங்குசேர் குழலாள் நிழல் வெண்ணகைக் கொவ்வை வாய்க் கொடி யேரிடை யாளுமை
பங்குசேர் திருமார்புடையார் படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனும் மாமலரோனும் மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.

கலவ மாமயிலாரியலாள் கரும்பன்ன மென் மொழியாள் கதிர் வாணுதல்
குலவு பூங்குழலாளுமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேரமணாதர்கள் ஆக்கினான்தனை நண்ணலும் நல்குநற்
புலவர்தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

தேம்பல் நுண்ணிடையாள் செழுஞ் சேலன கண்ணி யோடண்ணல் சேர்விடந் தேனமர்
பூம்பொழில் திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமென்று
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலை கொண்
டாம்ப டியிவை ஏத்தவல்லார்க் கடையா வினையே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

16. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

குருவின்மேல் அவநம்பிக்கை தோன்றும்போது இறைவனை நோக்கி அழு. அது ஒன்றுதான் விதியை மாற்றும் வழி.

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி பேராதென சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

இமையாது உயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத் தணைத்தாய் போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர் தொழுந் தேவே போற்றி சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொற்கேட்டாய் போற்றி பண்டே என்சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா உலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

17. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : பியந்தைக் காந்தாரம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

காலையில் எழுந்தவுடன் முதன் முதலில் எப்போது கண் சிமிட்டுகிறோம் என்பதைக் கவனிக்க முடிந்தால் ஆத்ம விசாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதோ டொன்றொ டேழு பதினெட்டோடாறும் உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவள மேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

18. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது
பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
ஒவ்வொரு வருடமும் எந்த அளவிற்கு கடவுளை நோக்கி முன்னேறி உள்ளோம் என்று ஆத்ம விசாரம் செய்து பார்ப்பதே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முதல் கட்டமாகும்.

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட் டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

மற்றிட மின்றி மனைதுறந்  தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்திரு வாரூர்த் திருமூலட்டானன் செங்கண்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டு கொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணும் மூடர்முன் னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலட் டானன்செய்ய
பூங்கழலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்ட ரைவிட்
டெண்ணில் புகழீசன் தன்னருள் பெற்றேற்கும் உண்டு கொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன் தன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

குழந்தை ஏன் புத்தகத்தைக் கிழிக்கிறது?
பகுத்து உணர வேண்டியதை உன்னால் படித்து உணர முடியாது என்பதை உணர்த்தவே குழந்தை புத்தகத்தைக் கிழிக்கிறது.

கரப்பர்கண் மெய்யைத் தலைப்பறிக் கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலட் டானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

கையிலிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரை விட்
டுய்யு நெறி கண்டிங் குய்யப் போந் தேனுக்கும் உண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய்யன் பிலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப் போந்தேனுக்கும் உண்டு கொலோ
மற்பொலி தோளான் இராவணன் தன்வலி வாட்டுவித்த
பொற்கழலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

19. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை

பண் : கொல்லிக் கௌவாணம்


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

மகாலட்சுமி தான் மக்களுக்கு
அளிக்கும் செல்வம் நிரந்தரமாய் தங்கி இருக்க இறைவனிடம் வேண்டி வழிபட்ட தலமே திருச்சி லால்குடி அருகே உள்ள ஸ்ரீசாமேவேதீஸ்வரர் திருத்தலமாகும். சோமநாதர் என்று முற்காலத்தில் திருநாமம் கொண்ட இத்தல இறைவனை குபேரன் வழிபட்டு, இத்தலத்தில் நெடுங்காலம் தங்கி திருப்பணிகள் செய்து தன் குபேர நிதிக்கு நிரந்தரத்தன்மை பெற்றார். தீராத தரித்திரத் தன்மை உள்ளோரும், கைக்கெட்டியது வாய்க்கெட்டாத அவலச் சூழ்நிலையில் வறுமையால் வாடுவோரும் திருமங்கல சிவாலயத்தில் உள்ள நந்தவனத்திற்கு நீர் பாய்ச்சும் திருப்பணியை ஏற்று மலர்ச் செடிகள் செழிக்க அருள்புரிவதால் திருமகளின் நிரந்தர செல்வ கடாட்சத்திற்கு பாத்திரம் ஆவார்கள்.

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன்அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாய வாட்டாயன் அடியார்க்கு மடியேன்.
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கு மடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கு மடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கு மடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கு மடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடை கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கு மடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன் பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கு மடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

கறைக் கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக் கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன்
புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையான் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பராவாரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

20. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : குறிஞ்சி


வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே

இரவில் தவளைகள் எழுப்பும் ஒலி மனிதனுக்கு நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்கும். தவளைச் சத்தம் கேட்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்தச் சப்தத்தை ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு உறங்கும் முன் கேட்பதும் நலமே.

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே

பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே

பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவ தரியதே

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தொடரும் தேவாரம் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam