முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

காலத்தை விருத்தி செய்வது எப்படி ?

சனீஸ்வர லோகத்தைச் சார்ந்த சித்தர்களும், மஹரிஷிகளும், புனிதமான நதி நீரோட்டத்தில் கழுத்தளவு நீரில் நின்று, நாள் முழுதும் ஸ்ரீருத்ர மந்திரங்களை ஓதி, ஸ்ரீருத்ர மூர்த்தியையும்,
ஒரு மரப் பலகையில் கை, கால் உடல் அங்கங்கள் எதுவுமே ஒரு சிறிதும் தரையில் படாது பத்மாசனத்தில் அமர்ந்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத் துதிகளை ஓதி, ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாளையும் வழிபடுகின்ற தினமே, மிருகசீரிஷ தினம் கூடிய சனிக்கிழமையாகும்.

ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் கரூர்

மிருகசீரிஷ நாளில் திருச்சி அருகே திருமாந்துறை ஆலயத்தில் தானே நீராட்டி, மஞ்சள், குங்குமம் வைத்த பசு, கன்றுக்கு வயிறார உணவளித்து, கோ பூஜை ஆற்றி, குடும்பத்தாரோடு பசு, கன்றுடன் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு வர, கோப, தாபத்தால், (வாய்ச்) சண்டைச் சச்சரவுகளால் பிரிந்துள்ள குடும்பம் ஒன்று சேர நல்வழி பிறக்கும்.
மிருக சீரிஷ நட்சத்திர நாளில் விலங்குகளும், பறவைகளும் விரதம் பூண்கின்றன. இந்த நட்சத்திர நாளில் கரிநாளும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். கோபம், குரோதம், காமவெறி போன்ற மிருகத்தனமான குணங்களை உடையோர் நன்னெறியை அடைய, சனிக் கிழமை தோறும்பசு, கன்றுகளை நீராட்டி, கோ பூஜையை ஆற்றி வர வேண்டும்.
மிருகசீரிஷம், கரிநாள், சனிக் கிழமை கூடுகின்ற அரிய நாளில், சனீஸ்வர மூர்த்தி, மானுட வடிவில் சில குறித்த தலங்களில் (சோழபுரம், குச்சனூர், விளங்குளம்) ருத்ர பூஜைகளை ஆற்றுகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. ருத்ர ஜபத்தின் மகிமை யாதெனில், காலம் இதில் விரிவுபடும்.

திருமாந்துறை

அதாவது, உதாரணமாக, ஒரு முறை ருத்ர, சமக மந்திரங்களை ஓதினால், 25 நிமிட நேரம் ஆகும் என்று கணக்கு வைத்துக் கொள்வோம். பக்திப் பூர்வமாக, ஏகாதசம் ருத்ரம் எனப்படுவதான பதினோரு முறை ருத்ர, சமக மந்திர ஓதுதலைக் கடைபிடித்தால், மிக மிகக் குறுகிய காலத்திலேயே மந்திர ஜபம் முடிந்து விடுவதை அவரவர் தாமே உணர்ந்திடலாம்.
இதே போல, கழுத்தளவு நீரில் நின்று கொண்டு, முழுமையாக ருத்ரம் ஜபிக்கும் போது, நீர் வழியாகக் காலசக்திகள் உட்பரிமாணமாகி, காலம் நன்கு விருத்தியாவதை உணர்ந்திடலாம். இதனால்தான் ருத்ர மந்திரமானது, காலம் கடந்ததாக, யுகங்களைக் கடந்ததாகத் துலங்குகின்றது.
ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, பஞ்சமி நிறைந்த சனிக் கிழமையில் வரும் கரிநாளில் ஈஸ்வரன் எனும் மூர்த்தியை வழிபட்டு, ருத்ர சக்திகளைப் பெற்று, ஈஸ்வர பட்டம் பெறும் அனுகிரக சக்திகளை அடைந்தார். சனீஸ்வரர் இதற்காகத் தவம் புரிந்த தலங்களுள் ஒன்றே ஸ்ரீபூஜேஸ்வரர், ஸ்ரீபூஜாலீஸ்வரர் என நாமம் பூண்டு ஈஸ்வரன் அருளும் தலமாகும், தேடி கண்டுபிடித்துப் பயன் பெறுக! சனீஸ்வர சக்திகள் நிறைந்த தலம். சனீஸ்வரர் மிகவும் விரும்பி வழிபடும் மூர்த்தி!
எதையுமே, உடனடியாக அளித்து விட்டால் அதனுடைய அருமை, பெருமை கலியுகத்தில் தெரியாது போய்விடும். அருகிலேயே நடந்தாலும், இருந்தாலும் அதனுடைய அருமையும் புரியாது. இவ்வகையில்தான், சுயம்பு லிங்கத்தின் அருகில் இருந்து பூஜிக்கும் பாக்கியத்தையும், பூர்வ ஜன்மப் புண்ய சக்தியையும் பெற்று இருந்தாலும், பல யுகங்களையும் காலம் கடந்தருளும் சுயம்பு லிங்க அருமை தெரியாமல் போய் விடுகின்றது அல்லவா! இவ்வாறு பலருக்கும், எத்தனையோ மக்களுக்குக் கிட்டாத அபூர்வமானத் தெய்வீக வாய்ப்புகளைப் பூர்வ ஜன்மப் புண்யமாகப் பெற்றும், இதன் அருமை, மஹிமை, மகத்துவம் அறியாது, விரயமாகக் கழித்த காலத்தை, ஒரு போதும் திரும்பப் பெற இயலாது.
வாழ்க்கையில் எத்தனையோ நல்ல சந்தர்ப்பங்கள் வந்தும், அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளாது கை விட்டவர்களும் உண்டே! இதனை எண்ணி, எண்ணி ஏங்கி என்ன பயன்? இனியேனும் வருகின்ற நல்ல வாய்ப்புகளை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேனும், கரிநாளில் சனீஸ்வரரே வழிபடும் ஸ்ரீகரியமாலீஸ்வரரை வழிபட்டு வருக! தசரதர் ஓதிய சனீஸ்வரத் துதிகளையும், நவகிரக வழிபாட்டு சக்திகளைத் தரும் தசாவதாரத் துதிகளையும் நன்கு மனமார ஓதிடுக.

சப்தமியில் பூக்கும் எண்ணங்கள்

மெளனமும், சப்த சக்திகளும் நன்கு பரிமளிக்கும் தினமே திங்கள் கிழமையும், சப்தமித் திதியும் சேரும் நாளாகும். சப்தமித் திதியில், சப்தங்கள் நன்கு பரிமளிக்கின்றன. திங்கட்கிழமையோ, மெளன சக்திகள் நன்கு பூரிக்கின்ற - சோமன் எனப்படும் சந்திர மூர்த்திக்கு உரிய - சோமவாரமும் ஆகும்.
சப்த நாளங்கள் பூரிக்கும் சப்தமியும், மெளன சக்திகள் பரிமளிக்கும் திங்கட் கிழமையும் சேர்கையில், மெளட்ய சப்த வள சக்திகள் நன்கு பூரிக்கின்றன. இதெப்படி சாத்தியமாகும்? மெளனம் என்பது வார்த்தைகளை அடக்குவது, சுருக்குவது மட்டுமல்ல. உங்கள் மனதினுள் ஆழ்ஒலியைக் கேட்பதும் மெளனமே! உள்ஒலியைக் கேட்பதும் மெளனமே! உள்ளூரப் பேசுவதும் மெளனமே!

தியானத்தின் ஆரம்ப நிலையே மெளனம் அன்றோ! தியானம் என்பது உள்ளத்திலும், மனதிலும் மெளனம் புலர்ந்து புலனாவதாகும். ஆனால் இது எளிதில் சித்திப்பதன்று. வாழ்வில் தினமுமே முறையாகப் பயின்று வந்து அடையும் மிகவும் உயர்ந்த நிலையே தியானமாகும். அதுவரையில், தியானம் என்பது மனப் பயிற்சியாகவே தொடரும். தியானத்திலும் பல உத்தம நிலைகள் உண்டு.
ஆழ்நிலை தியானம் என்பது எளிதல்ல!  பல்லாண்டு காலமான தினசரிப் பயிற்சியில் தக்க குருவருளால் சிறிது, சிறிதாக வந்தமைவதே தியான நிலையாகும். இதிலும் பல நிலைகள் உண்டு. இதில் ஒரு சில நிலைகளை அடைபவர்கள், அதுவே தியானத்தின் முழுநிலை என நினைத்து, மனோசக்திகளை விரயமாக்கி, இருக்கின்ற நிலைகளில் இருந்தும் சறுக்கி விடுகின்றார்கள்.
தியானத்தில் பல சித்திகள் தாமாகவே சித்திக்கும். உதாரணமாக, பிறர் என்ன எண்ணுகின்றார்கள் என்பது ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் தெரிய வரும். ஆனால் இதனைத் தவறாகப் பயன்படுத்திடில், தியான விருத்தி மாசுபடும். எனவே, தியானத்தில் முதலில் தானாகக் கிட்டத் தொடங்கும் மனோசக்திகளை விரயம் செய்தல் ஆகாது. தியானப் பயிற்சியில் பத்மாசனம் போன்ற யோகப் பயிற்சிகள் கூடினால் இத்தகைய விரயங்கள் ஏற்படாது.

ஸ்ரீவிநாயகர் சோழபுரம்

எனவே தியானத்தில் யோகத்தை இணைப்பது நன்றே! இரண்டும் சேர்தலே மனப் பரிமாணத்தைத் தரும். பத்மாசனம், சுகாசனம் போன்றவை யோக நிலைப்பாடுகளைக் காட்டும். ஒன்றும் பேசாது கண்ணை மூடி, உள்ளுக்குள் என்ன நிகழ்கிறது என மனதை ஆய்தலே ஆரம்ப நிலை தியானம்.
பிறருடைய எண்ணங்களை அறிய வந்தால் மனம் துடிப்படையும் அல்லவா! இதற்கு ஆளானால் மனச் சிதறல்களே உண்டாகும். இவ்வாறு மனம் சிதறாமல் இருக்கவே, திங்கள் தோறும் அல்லது குறித்த விரத நாட்களில் அவ்வப்போது முழு நாள் மெளனம் பயின்று வர வேண்டும். பரிபூரண நிலையை தியானத்தில் அடையும் வரை, அது மனப் பயிற்சியாகவே பல நிலைகளைக் கடக்கும்.
தியானத்தில் உடலும், மனமும், உள்ளமும் ஐக்யமடையும். சாதாரணமாக, இவை மூன்றும் தனித்துச் செயல்படுவதால்தான் மனப் போராட்டங்கள், மனக் கொந்தளிப்புகள் உண்டாகின்றன. யோகம் என்பது, உடல் சார்புடையது. தியானம் என்பது மனம் சார்புடையது. உள்ளம் என்பது ஆழ்நிலையில் மனமும், உடலும் ஒழுங்குபடுவதாகும். இதற்கு மெளன விரதம் நன்கு உதவும்.
எவ்வாறு ஒன்றே இறைவன் என்பதை உணர்த்திட, இறைவனே பல வடிவுகளைக் காட்டிப் பற்பல அவதாரங்களைக் கொண்டு, அனைத்திலும் உறைவது சர்வேஸ்வரனே பரம் பொருள் என்று உணர்த்துவது போல, தியானமும், யோகமும் உள்ளம், மனம், உடலை முதலில் நன்கு வேறுபடுத்திக் கண்ட பின், இவற்றை ஒன்றாக ஐக்யமடையும் நிலையினை அளிக்கின்றது.
எனவே தியானத்தில் யோகத்தை இணைப்பது நன்றே! எவ்வாறு? பத்மாசனம், சுகாசனம் போன்றவை யோக நிலைப்பாடு. வெறுமனே ஒன்றும் பேசாது இருத்தல் மெளனமாகாது. (மனதின், உடலின்) உள்ளேயும் பேச்சு நடக்கும் அல்லவா! முதலில் உள்உரையைக் கேட்கத் தொடங்க வேண்டும். அப்போதுதான் அவரவருடைய மனமானது கட்டுப்பாடின்றிச் செயல்படுவது தெரிய வரும்.
சப்தமித் திதியும் திங்களும் பரிணமிக்கும் நாளில் ஏழு விதமான மனோநிலைகள் கிட்டுகின்றன. மெளன விரதம் பூணுவோர்க்கும் அல்லது நாள் முழுதும் இறை விஷயங்களையே நிறையப் பேசுவோர்க்கும் இவை ஓரளவு புலப்படும்.

ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் ஆமூர்

* நல்ல எண்ணம்
* தானாகவே எழும் தீய எண்ணம்
* முன்னர் அனுபவித்த சுகத்தால் எழும் சுக போக எண்ணம்
* பிற பொருளை, மனிதர்களைப் பார்த்து மனம் உந்தப் பெறுவதால் ஏற்படும் வெளிவகை எண்ணங்கள்
* பூர்வ ஜன்மக் கிளைப்பு எண்ணங்கள்
* அனுபவ எண்ணங்கள்
* வருங்காலத்தைப் பற்றிய எண்ணங்கள்
- இவ்வாறாக ஏழேழாக, எவ்வளவோ எண்ணங்கள் எழுந்து பரிசுத்தமாக வல்ல நன்னாள்.
இவ்வாறாக முதலில் ஏழு விதமான எண்ண வகைகள் சப்தமித் திதியில் பண்படுத்தப் படலாகும். காரணம், சப்தமித் திதியில்தாம் சூரிய மூர்த்தி, தம் ஏழு வகைப் பூமி பரிபாலனக் கிரணங்களைச் சுத்திகரித்துக் கொள்கின்றார். உலக நடப்புகள் அனைத்துமே சூரிய, சந்திர சாட்சியாக நிகழ்வதால், சூரியக் கிரணங்கள் சப்தமித் திதி தோறும் விஸ்வ கர்மாவின் தேவப் பட்டறையில் சுத்திகரிக்கப் படுகின்றன.
எனவே, அனைவரும் திங்களன்று மெளன விரதம் பூண வேண்டும். திங்களன்று வரும் சப்தமித் திதியோ சப்தம் சம்பந்தப்பட்டது, இவ்விரண்டு மாறுபடும் காலஅம்சங்களையும் எவ்வாறு சங்கமிக்கச் செய்வது? நல்ல இன்னிசைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே சமைத்தல், வீட்டு வேலைகளைச் செய்தல், மெளனமாக இருத்தல் ஆக இவ்வாறாக இனிய சப்தங்களின் ஊடேயும் இன்றைய நாளைச் செலுத்த வேண்டும், நாளைக் கழிக்கக் கூடாது, சப்தமி கூடும் திங்கள் வந்தால், பேசாமல் விடுமுறை எடுத்து கொண்டு, மெளன விரதம் இருந்து பாருங்களேன், இதன் அருமைகள் புலனாகும்.
பால் வகை இனிப்பு வகைகளைச் சிறுவர், சிறுமியர்க்குத் தானம் அளித்து, சூரியக் கிரணங்கள் லிங்கத்தின்மேல் படும் ஆலயங்களிலும், ஸ்ரீசந்திர சேகரர், ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரர், நிலாத் துண்டப் பெருமாள் போன்ற சந்திர சக்தித் தலங்களிலும் ஏழு முறை மெளனமாக அடிப் பிரதட்சிணம் செய்து வழிபடுக!

தம்பதிகள் ஒற்றுமைக்கு ...

குங்குமம், மஞ்சள், பூக்கள், மாங்கல்யம், புண்ணியத் தீர்த்தம் போன்றவற்றில் எப்போதும் மங்கள சக்திகள் நிறைந்திருக்கும். இவற்றிலிருந்து மங்கள சக்திகளைத் திரட்டி வாழ்க்கைக்குப் பயன்பட உதவும் பூஜை நாளாக அமைவதே செவ்வாய்க் கிழமை ஆகும்.
மங்கள சக்திகள் மஞ்சள், குங்குமம், பூக்கள், மாங்கல்யம் மட்டுமல்லாது, குறித்த சில திதி, நட்சத்திரம், யோகம், கரணங்கள் போன்ற கால அம்சங்களிலும் வந்தமையும். இவ்வாறு பொருட்கள், திரவியங்களில் நிரவும் மங்கள சக்திகளை கால மங்கள சக்திகளோடு கூடி மலர்ந்திட உதவுவதே செவ்வாய்க் கிழமை விரத நாளாகும்.
மங்கள சக்திகளோடு, சுப சக்திகளும் இயற்கையாகவே பஞ்ச பூத சக்திகளிலும் பரவி, நிறைந்து, மேற்கண்ட மங்களப் பொருட்கள், மங்களக் காலசக்திகளோடு பவ்யமாய் இணைந்து வருவதே சுபமுகூர்த்த நாளாகும்.

சாளரக்கோயில் பெருநகர்

செவ்வாய் கிரகத்திற்கு உரிய எண் ஒன்பதாகும். ஒன்பதின் விசேஷம் யாதெனில், எந்த எண் ஒன்பதோடு கூடினாலும், அதே எண்ணே கூட்டு எண்ணாக வருவதாகும். அனைத்து எண்களுக்கும் உரிய எழுத்து வடிவுகளும் உண்டு. பழந்தமிழில், ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களுக்கு உரிய தமிழ்க் குறியீடுகள் உண்டு.
பெரும்பாலான மொழிகளில், எழுத்து வகையிலான எண்களுக்கான வடிவுக் எண் குறியீடுகள் அமைந்திருக்கும். உலகெங்கும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற வகையிலான நடை முறை எண் வழக்கு தற்போது உள்ளது அல்லவா! இதனை மேல்நாட்டு வகையிலான, ஆங்கில முறையிலான முறை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். இவை யாவும் பாரதத் திருநாட்டில் புழக்கத்தில் இருந்து, பிற நாடுகளுக்குக் காலப் போக்கில் சென்று நமக்கே புதிதாக உள்ளது போல் வந்துள்ளதேயாகும்!
தமிழ் போலவே, இந்தி மொழியிலும் இந்தி அட்சர எண் வடிவுக் குறியீடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த பழந்தமிழ் எண் குறியீடுகளை நாம் முற்றிலும் மறந்து விட்டோம்.
பழந்தமிழ் எண் வடிவுகள் யந்த்ர, மந்த்ர சக்திகள் வாய்ந்தவை. உண்மையில், பழந்தமிழ் எண் குறியீடுகள் யாவும் அட்சரயோக சக்திகள் நிறைந்ததாகும். எனவே, தினமும் உங்கள் பூஜை அறையிலாவது, பூஜையிலாவது, க, உ, ஞ, ச, ரு … என்ற வகையில் அமைந்திருந்த பழந்தமிழ் எண் வடிவுகளைப் பயன்படுத்தி வாருங்கள்.
ஒன்று முதல் எட்டு வரை மட்டுமே முழு எண்களாக எண் ஒன்பதை இரட்டைச் சாளர எண்ணாக வரிக்கும் எண் கணித ஜோதிடத் துறையும் உண்டு. இதனை நபும்சக எண்ணாகக் கொள்கின்ற சாத்திர முறையும் உண்டு.
எட்டுப் புள்ளிக் கோலத்தில் நடுவில் ஒன்பதாம் புள்ளியை வைத்துக் கோலத்தை நிறைவு செய்வார்கள். செவ்வாயும், நவமியும் சேர்ந்து பரிணமிக்கும் நாளில், நவகிரக மூர்த்திகளுக்கு அந்தந்த தானியங்களைப் பாதங்களில் நிரப்பிப் பூஜித்தல் நன்று.
மூலத்தானத்திற்கு முன் வாசல் இல்லாது சுவற்றால் மூடி இருக்கும் சாளரக் கோயில்களில், பொதுவாக ஒன்பதின் வகைகளில் சாளரங்கள் இருக்கும். செவ்வாய் தோறும் சாளரக் கோயில்களில் ராகு கால துர்க்கைப் பூஜை முடிந்தவுடன், உடனே நவகிரக மூர்த்திகளை அந்தந்தத் தானியங்களால் நவகிரக மூர்த்திகளின் பாதங்களை நிரப்பி, ஆராதித்து வழிபடுவதும், தானியங்களைப் பட்சிகளுக்கும், தானிய ரவையுடன் சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கும் இட்டு வழிபடுவதால், தம்பதிகள் இடையே உள்ள மனஸ்தாபங்கள் தீர உதவும்.  

தரித்திரம் நீக்கும் தவிடு

மக நாளில் கோதூளி பூஜை, கோதூளி நீராடல் விசேஷமான புண்ய சக்திகளைப் பெற்றுத் தரும். கோதூளி என்றால் பசுவின் கால் குளம்படிப் பட்ட புனிதமான மண் என்று பொருளாகும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் முதல் திருமகள், கலைமகள், பார்வதி தேவி உட்பட அகஸ்தியர் மாமுனி குபேரன் வரை அனைத்துத் தேவாதி தேவ தேவதா மூர்த்திகளும், சித்தர்களும், மாமுனிகளும் பசுவின் உடலில் வசிக்கின்றனர் எனில், பசு எத்தகைய உத்தம தெய்வீகப் பிறவி என அறிக!
தினமும் பசுவைத் தொட்டுக் கும்பிட்டு வலம் வந்து வணங்குவது, தரித்திர நிலையை நீக்க வல்லது ஆகும். கோ தூளி நீராடல் என்பதாகப் பசுவின் கால் குளம்படி பட்ட மண் துகளை எடுத்து வந்து பூஜித்து, நீரில் இட்டு நீராடுதல் ஆகும். இதுவே பவித்ரமான கோதுளி ஸ்நானம் ஆகும். இவ்வாறு பசுவின் கால்குளம்படி பட்ட மண்ணை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து வீட்டில் வைத்திருந்தால், எத்தகைய காத்துக் கருப்பு தோஷங்களும் வராது காப்பதோடு தக்க தற்காப்புச் சக்திகளையும் தரும்.

திருத்தவத்துறை எனப்படும் லால்குடி, ஒரு யுகத்தில் கோசாலைப் பூஜைக்குப் பிரசித்தி பெற்றதாகும். இங்கு காராம் பசுக்கள் மிகுந்திருந்தன. காரணம், பண்டையக் கால காயத்ரீ நதிக் கரையில் இது அமைந்திருப்பதே! தற்போது இந்நதி சிதிலமடைந்து விட்டது. ஏதோ பெயருக்குக் கால்வாயாக உள்ளது.
இங்கு முற்காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பொலிந்தன. அரிசி, கோதுமை மற்றும் ஏனைய தானியங்களின் தவிடை இங்கு மக்கள் இலவசமாக அளித்த காலமும் பொலிந்தது.
அக்காலத்தில் தவிடை எவரும் விற்பது கிடையாது. வீட்டு வாசலில் தான, தர்மத்திற்காக எடுத்து வைத்து விடுவார்கள். தவிடைத் தானனமாக அளித்து, அதில் சிறிதை எடுத்துப் பானையில் வைத்தலால் அதிர்ஷ்டம் பெருகும். பணம் விருத்தி ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த கோ ஆசீர்வாதமும் ஆகும். இவ்வாறு தானமளித்தத் தவிட்டில் ஒரு பிடியை மீந்து மீண்டும் தவிட்டுப் பானையில் சேர்த்திட்டால் தவிட்டுப் பானையில் பொன் நிறையும் என்பது ஐதீகம்.
மகம் மற்றும் அவிட்ட நட்சத்திர நாளில் பசுக்களுக்காகத் தானமாக அளிப்பது வீட்டில் செல்வ கடாட்சத்திற்குப் பெரிதும் உதவும்.

ஆத்திரம் தணிக்கும் கற்பூரம்

தன்னுடைய தந்தைக்கும், தாய்க்கும் முறையாக சேவை செய்யவில்லையே, காலம் தவறிவிட்டதே என்று ஏங்குபவர்கள்,
தாய், தந்தையரைத் தவறாக நடத்தி, அவமானப்படுத்திப் பேசியவர்கள்,
பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, அந்தந்தத் தருணத்தில் ஆற்றாதவர்கள்,
பெற்றோர்களின் மனதைப் புண்படுத்தி அவர்களுடைய பேச்சை மீறித் திருமணம் செய்து கொண்டு, பலத்த அவதிக்கு ஆளாகி இருப்பவர்கள்,
இத்தகையோர் தக்க பரிகார வழிகளைப் பெறவும், பெற்றோர்கள் சாந்தமடையவும், அவர்களுடைய மனப் புண் ஆறவும், தாய் அல்லது தந்தை இறந்திருப்பின் அவர்கள் சாயைச் சரீரங்களில் இருந்து சபித்திடாமல் அவர்கள் ஆத்ம சாந்தம் பெறவும், பூர நட்சத்திர தின வழிபாடு மிகவும் உதவும்.

இத்தகைய நிலைகளில் வாடுவோர், வருந்துவோர் மாதந்தோறும் பூர நட்சத்திர நாளில், குறித்த சில வழிபாடுகளை ஆற்றி வர, வரத்தான் தலைமுறை, தலைமுறையாக முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகிய நிலைகளில் இருந்து மீள முடியும்.
பூர நட்சத்திர நாளில், பூர நட்சத்திரத் தலமான புதுக்கோட்டை அருகில் உள்ள திருவரங்குளம் சிவாலயத்தில் வழிபடுவதுடன்,
ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீகற்பூர சுந்தரேஸ்வரர், ஸ்ரீகற்பகாம்பிகை, ஸ்ரீகற்பகவல்லி போன்று கற்பக வகை நாமங்களைச் சூடி, இறைவனும், இறைவியும், தெய்வ மூர்த்திகளும் அருளும் தலங்களில் பச்சைக் கற்பூரக் காப்பிட்டு, குறைந்த பட்சம் பாதக் காப்பேனும் இட்டு வழிபட்டு வர வேண்டும்,
மேலும் பூர நட்சத்திர நாளில், கற்பக வல்லி, கற்பகம் என்ற வார்த்தைகளுடன் துவங்கும் இறைப் பாடல்களை ஓதியும், கற்பகம், கற்பூரவல்லி, கற்பகவல்லி  என்ற பெயரைக் கொண்ட ஏழைகளுக்கு உதவுகின்ற கைங்கர்யத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

ஐயர்மலை

பச்சைக் கற்பூரத்தால் காப்பு சார்த்தப் பெறும் திருவலஞ்சுழி, திருத்தங்கல் போன்ற தலங்களில் பச்சைக் கற்பூரம், சந்தனம், ஜவ்வாது, புனுகு அளிப்பதும் சிறப்புடையதாகும்.
மேலும் பச்சைக் கற்பூரத்தைப் பெருமாள் ஆலயத்திலும், கற்பூரம், கற்பூர ஆரத்திக்கான சாதனங்களைப் பல ஆலயங்களுக்கும் வழங்கி வந்திடில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு இடையே நிலவும் கடுமையான உறவுகளில் நல்ல மாற்றங்கள் வந்தமையும். தாய்மார்களின் மனச் சுமையையும் நன்கு தணிக்கும். கற்பூரம் ஆரத்திக்கென விசேஷமான மந்திரங்கள் பல உண்டு. பூர நட்சத்திர நாளில், இல்லத்தில் குறைந்தது ஆறு வேளைகளிலும் கற்பூர ஆரத்தி இட்டு, அனைத்து வகைக் கற்பூர ஆரத்தி மந்திரங்களையும் ஓதி வழிபடுதல் வேண்டும்.
சிறுமியர்களைக் கொண்டு ஆரத்தித் தட்டு எடுத்து, ஆரத்தித் தீர்த்தத்தை வாசற் கோலத்தின் நடுவில் ஊற்றிட வேண்டும். நல்தேவதைகளின் வரவுக்கும், அனுகிரகத்திற்கும் இது மிகவும் உதவும். வீட்டிற்கு மங்கள சக்திகளைத் தரும் ஆரத்தி எடுப்பதை திருமணம் மற்றும் நவராத்திரி போன்ற முக்கியமான பண்டிகை நாட்களில் மட்டுமே தற்போது செய்கிறார்கள். இது வாரந் தோறும் செய்ய வேண்டிய ஆரத்திப் பூஜையாகும். குறிப்பாக, பூர நட்சத்திர நாளில் கண்டிப்பாகச் செய்திடுதல் வேண்டும்.

திருத்தவத்துறை லால்குடி

பூர நட்சத்திர நாளிலாவது, இல்லம் முழுதும் பசுஞ் சாணத்தால் மெழுகிட வேண்டும். நகரங்களில் பசுஞ்சாணம் இட்டு மெழுகும் வழக்கமே முற்றிலும் மறைந்து விட்டது. செவ்வாய், வெள்ளி, துவாதசி, பூர நட்சத்திர நாட்களிலாவது இல்லத்தில் பசுஞ்சாணம் இட்டு மெழுகிப் பூஜிக்க வேண்டும்.
பல வகையான தோஷங்களை நீக்கும் வல்லமை பசுஞ் சாணத்திற்கு உண்டு. பசு நெய்யால் ஆலய மூலத்தான வாயிலை மெழுகும் பூஜை முறை சில ஆலயங்களில் நடைமுறையில் உள்ளது. கும்பகோணம் மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இப்பூஜை நடைபெறுகிறது. கருகாக்கும் நாயகி! குழந்தைப் பேற்றை அருளும் தேவி! பூர நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது விசேஷமானதாகும்.

பூரம் கூடும் வெள்ளியன்று ஆலயங்களிலும் வீட்டிலும் ஆறு வேளையும் ஆற்றும் ஆரத்தி, கற்பூர ஆரத்திக்கு சுக்ரபூதிப் பூரம் என்று பெயர். தரித்திர நிலையைப் போக்க வல்லது.
வியாழக் கிழமைகளில் மஹாபக்த விஜயம் போன்று மஹரிஷிகளின், மஹான்களின், சித்தர்களின் அனுபூதிகளை, வாழ்க்கைச் சரிதங்களைப் படியுங்கள். கோடானு கோடிச் சித்தர்கள், ஞானிகள், யோகியர், மஹரிஷிகள், மஹான்கள் உலா வரும் பழமையான பூமியே பாரதமும், குறிப்பாக இதில் தமிழ்நாடும் ஆகும்.
பூர நட்சத்திர தினத்தன்று மஹரிஷிகளின் சங்கமப் புஷ்ப விதானம் மலரும். இதற்கு பூரத் துறைப் பரிசம் என்று பெயர். பொதுவாக, குரு சக்திகள் மிகுந்த தலங்களை ஆலந்துறை, திருவாவடுதுறை, திருப்பெருந்துறை, குருவித்துறை (குருவின் துறை) என்று வழங்கப் பெறும். இத்தகைய துறைத் தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
பூரம் அன்று குருவித் துறை, படித்துறை போன்று துறை என முடியும் தலங்களிலும், அய்யர்மலை, குன்னக்குடி, நெடுங்குடி போன்ற படித் துறைத் தலங்களில் அனைத்துப் படிகளிலும் கற்பூரம் ஏற்றி வழிபடுதல் நன்று.
பூர நட்சத்திம் போன்ற கற்பூர சக்திகள் நிறைந்த நாளில், சாம்பிராணி தூபம் இடுதல் மிகவும் நன்று. சாம்பிராணிக்கான கரித் தணலை ஏற்றும் போது, மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றாதீர்கள், தேங்காய் நார், கற்பூரம், விசிறி வைத்து ஏற்றுதலே சிறந்ததாகும். விசேஷமான சாந்த குண பலன்களையும் அளிக்க வல்லதாகும். ஆத்திர குணத்தைத் தணிக்கும்.

பிள்ளைகளுக்கு என்ன
சொல்லிக் கொடுக்கலாம் ?

வீட்டில் சிறு பிள்ளைகளுக்குப் பொழுது போக்கிற்காக என்ன சொல்லித் தருகின்றீர்கள்? பொழுது என்பதாகிய பொன்னான காலமானது வெறுமனே கழித்துப் போக்குவதற்காக இல்லை என்றாலும், ஒவ்வொரு நிமிடத்தையும் நன்கு பண்படுத்திப் பயன்படுத்தும் அளவிலா, அனைவரும் அவ்வளவு ஆன்மீக ரீதியாக வாழ்கின்றார்கள்? நன்கு மனசாட்சிப் பூர்வமாக ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்!
எப்போதும் படி, படி என்றால் பிள்ளைகளுக்கும் போரடிக்கும்தானே! ஆனால், பெற்றோர்களே போரடிக்கிறது எனச் சொன்னால்,
* காலத்தின் அருமை புரியும் பக்குவம் கனியவில்லை,
* பெறுதற்கரிய மானுடப் பிறவியின் மகத்துவத்தை உணரவில்லை,
* பாவச் சுமைகளைத் தணித்து நல்வாழ்க்கையைப் பெறும் நாட்டப் பக்குவம் வரவில்லை எனப் பொருளாகும்.
பிள்ளைகளுக்கு ஆக்கப் பூர்வமான, ஆன்மப் பூர்வமான, அறிவுப் பூர்வமானப் பண்டைய விளையாட்டுக்களைச் சொல்லித் தாருங்கள்! தாயக் கட்டம், பல்லாங்குழி, ஐந்து கல் ஆட்டம், ஆடு, புலி போன்ற பழமையான மனன சக்தி, மனோ சக்தி விளையாட்டுக்கள் தாம் சிறப்புடையவை! இவ்வகையில்தான் மூளையை நன்கு (இறைப்) பகுத்தறிவுப் பூர்வமாகப் பயன்படுத்தும்படி பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அமைய வேண்டும்.

ஸ்ரீபாலாம்பிகை அருளும்
உய்யக்கொண்டான்மலை திருச்சி

ஒன்று முதல் 17 எண் வரையிலான வாய்ப்பாடுகள் அனைத்துப் பிள்ளைகளுக்கும் நன்கு மனப்பாடமாகத் தெரிந்தாக வேண்டும். இது வாழ்நாள் முழுதும், பல துறைகளிலும், குறிப்பாக, தேர்வுகளிலும், இன்டர்வியூக்களிலும், அலுவலகங்களிலும், பிற்கால வாழ்விலும் நன்கு பயனாகும். நினைவாற்றலை நன்கு முறையாக மேம்படுத்தும்.
பாண்டி, கோ கோ போன்ற விளையாட்டுகள், ஒற்றைக் கால் யோகம், இரட்டைக் கால் யோகம் போன்றவற்றின் வகை முறைகளாகும். பாண்டியாட்டம் என்பது ஒற்றைக் காலில் நெடு நேரம் நின்று, நடந்து, நிலைத்துப் பழகும் விளையாட்டு ஆதலின், கால் வீக்கம், இரத்த அழுத்தம், தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி நோய்கள் வராது தற்காத்துக் கொள்ள இது மிகவும் உதவும்.
ஐந்து கல் ஆட்டம் என்பதாகிய, வானில் சிறு கற்களைப் போட்டு, கீழிருந்து சிறு கற்களை உள்ளங்கைக்குள் வழித்து ஆடும் விளையாட்டால் கண்களுக்கும், கை நரம்புகளுக்கும் நல்ல பயிற்சிகள் உண்டாகும். நல்ல கண்பார்வையானது நெடுங்காலம் நீடிக்கும். துவாதசித் திதியானது, ஓடி விளையாடும் ஆட்டங்களுக்கு ஏற்புடைய ஆரோக்யத் திதி நாளாகும்.
இத்தகைய கை நாள விருத்தி ஆட்டங்கள், இயற்கையாகவே முழங்கை, தோள்களுக்கு நல்ல பயிற்சிகளை அளிப்பதுடன், கற்களின் சுழற்சியை ஒட்டிக் கண்கள் இயற்கையாகவே துரிதமாக நகன்று பயில்வதால், கிட்டப் பார்வை, தூரப் பார்வை ஏற்படாமலும் தற்காத்திடவும் உதவும்.
துவாதசித் திதிதோறும் பல குடும்பச் சிறுவர்களை ஒன்றாக உட்கார வைத்துப் பெற்றோர்கள் நிறையப் புராணக் கதைகளை, மஹாபக்த விஜய அனுபூதிகளை நிறையச் சொல்லித் தர வேண்டும். இரவில், வானில் கிரக அமைப்புகளையும், நட்சத்திர தரிசனங்களையும் அவர்களுக்குப் பெற்றுத் தந்து விளக்கிட வேண்டும்.
மூன்று வேளையும் சந்தியா வந்தனப் பூஜைகளும், அர்க்யப் பூஜைகளும் ஜாதி பேதமின்றி அனைவருக்கும் உரித்தானவையே ! மூன்று வேளைகளிலும் அனைவரும் ஸ்ரீகாயத்ரீ அர்க்யங்களை ஆற்றி வழிபட வேண்டும்.  
இவ்வாறாக, துவாதசித் திதியானது பிள்ளைகளுக்கு அருளும் அதியற்புதமான திதியாகவும் விளங்குவதால், துவாதசியில் பால ஆஞ்சநேயர், பாலதிரிபுர சுந்தரி, பாலகிருஷ்ணன், பாலாம்பிகை, பாலகணபதி, பாலசுப்ரமணியன் என பால வகை நாமம் பூண்ட சுவாமி ஆலயங்களில் கோ பூஜை ஆற்றி வழிபடுக!

யம பயம் மரண பயம்

தீர்த்தங்களை உருவாக்கும் தீர்த்த தேவதைகள், (கிருஷ்ண பட்சத்) தேய் பிறையில் தீர்த்தங்களில் மூலிகா தேவ திரவியங்களைக் கலந்து, புனித நதிகளை, புண்ணியத் தீர்த்தங்களை உருவாக்குகின்றன. புண்ணிய நதிகள் மற்றும் ஆலயத் தீர்த்தங்களில், நோய் நிவர்த்தி சக்திகள் நிறைந்த மூலிகைகளைச் சித்தர்கள் தீர்த்தங்களில் கலந்து பூஜிக்கும் திதியும் சதுர்த்தசித் திதியாகும்.
சதுர்த்தசி அன்று அளிக்கும் பித்ருத் தர்ப்பணத்திற்கு சகாய மார்கத் தர்ப்பணம் என்று பெயர். அதாவது, பழஞ் ஜன்மங்களில் திரண்டு, ஊழ் வினைகளில் ஒட்டி வரும் அதிபயங்கரத் துன்பங்களை, இந்த சகாய மார்கத் தர்ப்பண சக்தியால் தீர்த்துக் கொள்ள முடியும். அதிபயங்கரத் துன்பங்கள் எவை எவையோ?

ஸ்ரீயமமூர்த்தி திருகோடிக்கா

மாரடைப்பு, இருதய அறுவை சிகிச்சை, தினமுமே உடலில் சில பகுதிகளில் ஏற்படும் அதிபயங்கர வலிகள், அங்கம் சிதைதல், பலத்த அறுவை சிகிச்சையால் ஏற்படும் சொல்லொணாத் துன்பங்கள், தினமுமே என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனப் பகைமையின் ஊடே வாழ்தல், கடுமையான கோர்ட் வழக்குத் துன்பங்கள் போன்றவை வலுத்த அதிபயங்கரத் துன்பங்களாகும். இத்தகைய துன்பங்களை நாசம் செய்து, மனம், உடல், உள்ளத்திற்கு நல்வர நாளவளம் தருபவரே, ஸ்ரீதன்வந்த்ரீப் பெருமாள் மூர்த்தி ஆவார்
சதுர்த்தசி அன்று எம வந்தன, எமத் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றி,
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
என்ற ஸ்ரீதன்வந்த்ரீ சுலோகத்தை 1008 முறை ஓதி வழிபடுதல் விசேஷமானது.
சென்னை வேலூர் மார்கத்தில் வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 3 கி.மீ தொலைவில் கீழ்ப் புதுப்பேட்டைப் பகுதியில், நவீன பிரதிஷ்டையாக, ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி, ஊருதட்டுக் குந்தளம் என்ற பாவனையில் துடையில், அட்டைப் பூச்சி சகிதமாய்க் காட்சி அளிக்கின்றார். மிகவும் அபூர்வமான தோற்றம்.
இத்தலம் பண்டைய யுகங்களில் ஒளர்வர் மஹரிஷி தவம் புரிந்த மூலிகா மண்டலத் துறையாகும். எனவே, இங்கு நடைப் பிரதட்சிணமும், அங்கப் பிரதட்சிணமும் செய்வது விசேஷமானது. தர்ப்பண சக்திகள் நிறைந்த பூமி. சர்வ ஜனத் தர்ப்பண பூஜைகளை மூலிகா தர்பைகளுடன் தக்க அனுமதியுடன் இங்கு ஆற்றுவது விசேஷமானது.

கோவிலடி

இத்தலம் பண்டைய காலத்தில் ஒளர்வர் மஹரிஷியின் பர்ண சாலையுடன் திகழ்ந்து, ஆரோக்யா மூலிகா சுத்தி வளம் நிறைந்ததாகவும் விளங்கியது. இங்கு 27 நட்சத்திரங்களுக்குமான நட்சத்திரத் தலத் தாவரங்கள் பூஜிக்கப்படுகின்றன.
பண்டைய காலத்தில் ஊருதட்டு என்ற ஊர்ப் பெயருடன் சகஸ்ர (1008) நட்சத்திர மூலிகைச் செடிகள் வளங் கொழித்தத் தலம் இது. ஊரு என்றால் துடை. தட்டம் எனில் ஆரோக்யத் தகரத் தட்டு மந்திர (மூலிகா) சக்திகள் நிறைந்ததாகும். தட்டப் பாளம் என்ற மூலிகை சர்வ வியாதி நிவாரணி மூலிகை, காயகல்பத்தில் நன்கு பயனாவது. நித்திய ஹோமப் புகை, நித்திய மந்திர ஜபம், நித்திய அன்னதான சக்திகள், நித்தியப் பூஜை இவை நிகழும் பூமியில் வளர்வதே தட்டப் பாள காயகல்ப மூலிகை!
ஊருதட்டு பெயரில், மதுரை அருகே நிலக்கோட்டை அருகேயும் சிறப்பான பெருமாள் தலம் ஒன்றுள்ளது. இங்கு ஸ்ரீகதலி நரசிங்கப் பெருமாள் ஆலயத்திலும் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வது விசேஷமானதாகும். இவை யாவும் தன்வந்த்ரீ சக்தித் தலங்களாகும். ஊருதட்டு என்ற பெயரைக் கொண்ட பூமிகள், தட்டப் பாள மூலிகா சக்திகள் நிறைந்தவையாகும்.
தம் தாயின் தொடையிற் பிறந்த ஒளர்வர் மஹரிஷி, ஊருதட்டு எனப் பெயர் கொண்ட தலங்களில்தாம், அட்டைகள் நிறைந்த வனப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்திட, இவருடைய திருஉடலில் ஒட்டிய பல்லாயிரக் கணக்கான அட்டைகள், இவருடைய தபோ பலன்களை உறிஞ்சி நற்கதி அடைந்ததுடன், ஒளர்வர் கண்ட ஸ்ரீதன்வந்தீரி பெருமாளின் தரிசனத்தையும் பெற்றுய்ந்தன. எனவே, ஊருதட்டு என விளங்கும் பகுதிகளில், ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை எழுந்தருளப் பணணுவது உலக சமுதாயத்திற்கு மிகுந்த நன்மை பயப்பதாகும்..
மண்ணடி அப்பம் என்ற விசேஷமான மூலிகை மண் நிறைந்த பகுதி இது! மண் சட்டியில் வார்த்த அப்பம் பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியானதாகும். இதனால்தான் திருச்சி - திருக்காட்டுப்பள்ளி மார்கத்தில், கோவிலடியில் அப்பக்குடத்தானாகப் பெருமாள் பொலிகின்றார்.
யம பயத்திற்கும், மரண பயத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு. பெறுதற்கரிய மானுட வாழ்க்கையைச் செம்மையாக வாழாமல், வாழ்நாளை விரயம் செய்தவர்களுக்கு மரண பயம் ஏற்படும்.
செய்யக் கூடாத தவறுகளைச் செய்து, அதற்கான பரிகாரங்களைத் தேடி மனம் திருந்தி வாழ முயற்சிக்காது மறைத்து, மறைத்து வாழ்பவர்களுக்கு, யம பயம் ஏற்படும்.
யம பயம், மரண பயம் இந்த இரண்டும் தணிய வேண்டுமானால், காலை, மதியம், மாலை மூன்று சந்தியா நேரங்களிலும், யம வந்தன, யமத் தர்ப்பண பூஜையை ஆற்றி வருதல் நல்லது. யம லோகத்தில்தாம் அனைத்து உயிர்களும் சாயைச் சரீரத்தில் அடுத்தடுத்த பிறவிகளுக்கான, நிலைகளுக்கான பரிபாலனத்தை அடைகின்றன. ஜாதி, மத பேதமின்றி யாவரும் கடைபிடிக்க வல்ல, இந்த எளிமையான யம வந்தன, யம தர்ப்பண பூஜையைத் தக்கவர்களிடம் கேட்டுப் பயின்று தினமும் கடைபிடித்து வரவும். யமத் தர்ப்பண நாளில் யம மூர்த்தி, யம தேவதா மூர்த்திகள், யம மண்டல தேவதைகளுக்கு அர்க்யம் அளித்திடுக! தெற்கு திக்குப் பாலகராகவும் நின்று பூவுலகை யம மூர்த்தி காப்பதால், நாம் வாழும் பூமி நிலைத்து நிற்க, அவருடைய கருணை கடாட்சம் நிச்சயமாகத் தேவை அன்றோ!
எனவே, தர்ம மூர்த்தியாகவும். தெற்குத் திக்குப் பாலகராகவும் பிரகாசிக்கும் யம மூர்த்தியை அவதார மூர்த்தியாகப் போற்றி அர்க்யம் அளிக்கும் நன்னாளே எமத் தர்ப்பண நாள்!

திருமகள் பெற்ற தீபப் பிரகாசம்

கரிசலாங் கண்ணி, பொன்னாங்கண்ணி, விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெல்லித் தைலம், கற்பூரத் தைலம், பசு நெய், நீல பிருங்காதித் தைலம், வெட்டி வேர்த் தைலம், சந்தனத் தைலம் போன்று அனைத்து வகைத் தைலங்களையும், தீபத்திற்கான எணணெய் வகைளையும் கலந்து, அகல் விளக்குகள், திரிகள் சகிதம் ஏழைகளுக்கும் அளித்து, அனைவரும் ஆனந்தத்துடன் ஏற்றும் தீபப் பிரகாசம் அகிலமெங்கும் வானில் நிறையச் செய்ய நல்லதோர் இறைச் சாதனமாய்ப் பயன்படுக!
கேதார கௌரீ விரத நாளன்று காலை, மதியம், மாலையில் எட்டு அகல் விளக்கு தீபங்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து, வானத்தை நோக்கிக் காட்டி, பூமியைத் தாங்கும் அஷ்ட திக்குப் பாலக தேவர்களை நினைந்து,
தீபப் பிரகாசம், ஜோதிப் பிரகாசம், சிவப் பிரகாசம்,
அருட் பிரகாசம், க்ஷேமப் பிரகாசம், திவ்யப் பிரகாசம்,
அமுதப் பிரகாசம், ஆனந்தப் பிரகாசம், ஆதிமூலப் பிரகாசம்
முக்திப் பிரகாசம், மோட்சப் பிரகாசம் வாழிய வாழியவே!
என 12 முறை குடும்பத்தாருடன் சேர்ந்து ஓதி, தன்னையே ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வந்து, இதன் பலாபலன்கள் உலகெங்கும் ஜாதி, மத, ஜீவன்கள் பேதமின்றி யாவரையும் சென்றடைய ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் ஆசியை நாடி வேண்டி எண் முறை எட்டுத் திக்குகளிலும் சாஷ்டாங்கமாகப் பூமியில் வீழ்ந்து வணங்கிடுக!

ஸ்ரீவேணுபுஜாம்பிகை
பந்தணைநல்லூர்

பார்வதி தேவியே, பல கோடி யுகங்களாக, சிவ தரிசனம் பெற இயலாது தவித்து, கெளரீ தேவியாய் உறை பனியில் அருந்தவம் பூண்டு, பனி மலைகளால் தன் திருமேனியே முழுமையாக மூடப் பெற்றனள். இதன் பிறகே மஹேஸ்வரனே ஆண்டு கொண்டு வந்து தந்த அதியற்புத ஸ்ரீகேதாரநாத தரிசனத்தைப் பெற்றனள்.
21 சதுர் யுகங்கள் அன்னை தவம் பூண்டு கேதாரநாதராகச் சிவதரிசனம் பெற்றமையால், கேதாரநாதர் எனச் சிவபெருமான் பூண்ட தலவழிபாடு பன்னெடுங்காலத் தபோபலன்களைத் தருவதாகும்.
கேதார கெளரீ விரதத்தில், 21 திரி தீபங்கள், 21 வெற்றிலைகள், 21 பாக்குகள், 21 முழப் புஷ்பங்கள், அதிரசம், வடை போன்ற பிரசாதங்கள் அனைத்தும் 21 என்ற எண்ணிக்கையில் வருமாறு பூஜித்துப் படைத்து வழிபடுதல் வேண்டும்.
மூவேழு அகிலாதி முழு முதலாய்ப் பராசக்தி
பாவேழு பரிச்சமாய்ப் பந்தணையாள் பூம்பாதம்
கோவேழு குணத்தாராய்க் கொண்ட திருக்கேதாரன்
மாவேழு மான்மழுவே துணை!
(கோவேழு குணத்தார் - கேதார்நாத் செல்லும் முன் சிவகங்கை, ருத்ரகங்கை, குப்தகங்கை என ஏழு தல தரிசனங்கள்)
பாவேழு - ஆறங்கத் துதிகளுடன் ஆதாரத் துதிமறை
மாவேழு - அரிசி, கோதுமை, கம்பு போன்ற ஏழு தானிய மாவால் பிடித்த லிங்க பூஜைப் பலன்கள்
பந்தணையாள் - கேதார கெளரீ அவதாரத்திற்குப் பின் அம்பிகை பூண்ட அவதாரமே பந்தணை நல்லூர் அம்பிகை வடிவம்)
- என்று ஓதி, ஏழு வகைத் தானிய மாவால் பிடித்த ஏழு மாவு லிங்க வழிபாடு விசேஷமானதாகும். நற்காரியங்களுக்காகவும், வீடு, வாசல் போன்ற முறையான செலவுகளினாலும் ஏற்பட்ட கடன்கள் தீரவும், ருண ஹரத் தோத்திரங்களை ஓதி அமையும் ஏழு வகை மாவு லிங்க வழிபாடு மிகவும் உதவும்.
கேதார கெளரீக்கு முந்தைய அவதாரிகையே மனோன்மணி தேவி ஆதலின், இந்நாளில் மனோன்மணியாக அம்பிகை அருளும் தல வழிபாடு (உ-ம் உத்திரமேரூர், திருநாவலூர்) மிகவும் விசேஷமானது. மனோன்மணி வழிபாடு நல்ல மன நிம்மதியைத் தரும். பலவிதமான காரணங்களுக்காக மறைந்து வாழ்பவர்கள், உண்மைகளை மறைத்து வாழ்பவர்கள் முறையாக வாழ உதவிடுவதும் மனோன்மணி தேவி வழிபாடே!

ஸ்ரீமனோன்மணி அம்பாள் திருநாவலூர்

கேதார கெளரீ நோன்பு பூண்டு,
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரீ நாராயணீ
நமோஸ்துதே
என்று கெளரீ தேவியையும், நாராயணீ தேவியையும் இணைத்துப் போற்றி 1008 முறை ஓதுதல் வேண்டும்.
கெளரீ என்ற பெயரைப் பூண்டு தேவி அருளும் தலங்களிலும், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரும் அருளும் தலங்களிலும், குபேர மூர்த்தி ஆலயத்திலும் (காஞ்சீபுரம், ஊட்டத்தூர், இலஞ்சி, லால்குடி) வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
மேலும் கேதாரீஸ்வரர், கேதார்நாத், கெளரீ என்ற பெயருள்ள தேவ மூர்த்திகளை வழிபடுதல் சிறப்பானதாகும்.
லட்சுமி பூஜை என்பது லட்சுமி கடாட்சப் பொருட்களான தாமரை, வில்வம், பொன், நெல்லிக்காய், வெட்டி வேர், பசுநெய் போன்ற 12 லட்சுமி கடாட்சப் பொருட்களை ஒரு தாமரை இலையில், திருமகளின் படம் முன் வைத்து, முழு நெல்லிக் கனிகளால் அர்ச்சிப்பதாகும். பிறகு நெல்லிக் கனிகளை ஊறுகாய், பச்சடியாக்கி அன்னதானத்துடன் சேர்த்தளிக்கவும். பல இடங்களில் முடங்கிக் கிடக்கும் செல்வம் நற்காரியச் செலவிற்காகப் பயனாகிட இது உதவும்.

மன எரிச்சல்கள் மாயமாகும்

ஆலயங்களில் எட்டுத் திக்குகளிலும் பலி பீடம் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பலி பீடம் என்றால் வழக்கில் பிராணியைப் பலி இடுவது என்று பொருள் கொள்கின்றார்கள். ஆனால், ஆலயத்தில் அமைந்திருக்கும் பலி பீடங்கள் இவ்வகையானவை அல்ல. பஞ்ச பூத சமஷ்டி லோகத்தில் தவம் புரியும் பலி தேவதைகள் மனிதர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகிரகங்களைத் தர வல்லவை.
ஆலயக் கும்பாபிஷேகம் மற்றும் ஆலயத் திறப்பு முதல் கட்டப் பூஜைகளில் பலி தேவதா பூஜை மிகவும் பிரதானமானவையாக இருக்கும். கேரளாவிலும், வைணவத் தலங்களிலும் பலி பீட பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. எட்டுத் திக்குகளிலும், ஆலயங்களில் பலி பீடம் அமைவது சிறப்புடையது. வாரம் ஒரு முறையாவது பெருமாள் ஆலயங்களில் அர்த்த ஜாமப் பூஜையில் பலி பீடப் பூஜையைக் கண்டு தரிசியுங்கள். பிறரை நம்பி வாழ்கின்றவர்களுடைய மனச் சுமையைப் போக்கப் பலி பூஜையும், பலி பீட பூஜைத் தரிசனமும் நன்கு உதவும்.
 உலகின் அனைத்துப் பொருட்களும் பஞ்ச பூத சக்திகளால் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) ஆனவையே! மனித உடலும் இத்தகைத்தே! ஆனால், மனித குலம் பஞ்ச பூத சக்திகளுக்கான நன்றி வழிபாட்டை முறையாக ஆற்றுவதில்லை! இதனால்தான், பொது வழிபாடாக, உலக மனிதச் சமுதாயச் சார்பில், ஆலயங்களில் பலி பீட பூஜை, பஞ்ச பூதச் சிறப்பு வழிபாடாக இடம் பெறுகின்றது. ஆனால் கோயில்களில் கூட அனைத்து மந்திர, பிரயோகங்களுடன் பலி பீட பூஜை நிகழ்த்துவது தற்போது பெரிதும் மறைந்து வருகிறது.
பொதுவாக, ஆலயத்தில் கொடி மரத்தடியில் ஒரு பலி பீடம் அமைந்திருக்கும். இதுவே தலைமைப் பலி பீடம். மகாபலிச் சக்கரவர்த்தி, பலி பீட மந்திரங்களை பிரம்ம மூர்த்தியிடம் இருந்தே நேரிடையாகக் கேட்கப் பெறும் நல்வரங்களைப் பெற்றவர். எனவே, புதன் கிழமைகளில் மஹா பலிச் சக்கரவர்த்தி வழிபட்ட தலங்களில் (உலகளந்தப் பெருமாள் தலங்கள்) பலி பீட தரிசனம் விசேஷமானது. பலி பூஜையின் ஓரங்கமே பலி பீட பூஜை!
மனித உடலில் தொப்புளை நாபி கிரந்திப் பலி பீடமாகச் சித்தர்கள் உரைக்கின்றார்கள். எனவே, திருமாலின் நாபியில் தோன்றிய பிரம்மருக்கான வழிபாடும் பலி பூஜைகளில் ஒன்றாகும்.  பிரம்ம மூர்த்திக்கு வெண்தாமரை மலர் மாலை சார்த்தி வழிபடுதல் சிறப்பானதாகும். தொலைவில் வாழும் பிள்ளைகள், பெண்கள் பற்றிய மனக் கவலைகளைத் தணிக்க இது உதவும்.
சிவபெருமான் பிரம்ம மூர்த்தியின் கபால ஓட்டைத் தாங்கிப் பூவுலகில் பவனி வருகையில், கபால ஓட்டில் பலி பிட்சை ஏந்தியே, பிரம்ம கபாலத்திற்கு மோட்சம் தந்தார். திருவோடு ஏந்தியவர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் பிட்சை அளிப்பது விசேஷமானதாகும்.
பழங்களையும் பலியிட்டுப் பூஜிக்கும் முறைகள் தாந்த்ரீகத்தில் நிறைய உண்டு. இத்தகைய பலி பூஜைகள், எத்தகைய பலத்த தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லதாகும். ஆலயத்தில் பலி பீடத்தின் கீழ் மாக்கோலமிட்டுச் சந்தனம், மஞ்சள் இடுவது விசேஷமானது.

மப்பேடு

கேரளாவில், சில ஆலயங்களில் இருக்கும் பெரிய பலி பீடத்தின் மேல் வைக்கப் பெறும் அன்னக் கோள உருண்டைகளைப் பகுத்துப் பிரித்து வானத்தில் தெரிக்கும் போது, அவை கீழே விழுவதில்லை. காரணம், பலி தேவதைகள் அவற்றை நேரிடையாகப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பதால்!
ஆஞ்சநேயர் எதையுமே ஸ்ரீராமப் பிரசாதமாக மதித்துப் பிரார்த்தித்து உண்பார். வானர தீரராக அனுமார் விளங்குவதால், உணவேற்கும் முன், வானத்தில் சிறிது பிரசாதத்தைப் பலியாக இடுகையில், செம்பாலி எனும் மூத்த அதிதேவதை அதனைப் பெற்றுப் பலிராம், பலிராம், பலிராம் என ஓதி ஆசீர்வதித்துச் செல்லும்.
தினந்தோறும் ஆலயங்களில் பலி பீடங்களை வலம் வந்து வழிபடுதல் சிறப்புடையது. சென்னை அருகே மப்பேடு தலத்தில் உள்ள பலி பீடமே பிரபஞ்சத்தின் ஆதிமூல பீடாதிபதிப் பலி பீடமாகும். மூல நட்சத்திர தினத்தில் இதனை தரிசித்துப் பட்டு வஸ்திரங்கள் சார்த்திப் பூஜித்தல் ஸ்ரீஆஞ்சநேயரின் ஆசிகளையும், அனுகிரகத்தையும் பெற்றுத் தரும். ஏதேதோ காரணங்களால் பலவிதமான பல்திசைத் துன்பங்கள், மனதை அரித்து, அரித்து, நிம்மதி இல்லாது எதைக் கண்டாலும் எரிச்சலடையும் தன்மைகள் மாற இந்த வழிபாடு நன்கு உதவும்.

கண் நோய் தீர்க்கும் கண்ணாத்தாள்

நல்ல சுறுசுறுப்பான மூளை உள்ளவர்களைக் "கம்ப்யூடர் மூளை'' என்று சொல்வதுண்டு. மூன்றாம் பிறைச் சந்திரத் தரிசனத்தை முழுமையாகவே தரிசித்து வந்தால் நல்ல மன ஆற்றல் கொழிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல நினைவாற்றல் வரும்.
கம்ப்யூட்டர் துறைதான் கலியுக மனித வாழ்க்கையை ஆக்ரமித்து வருகின்றது. கம்ப்யூடரினால் கண், மனம் எனக் குறித்த சில அங்கங்கள் மிக, மிக கவனமாய், உன்னிப்பாய்ச் செயல்பட வேண்டி உள்ளது அல்லவா! அந்த அளவிற்கு அங்கவள சக்திகளுக்கான கூடுதல் சத்துணவை ஏற்றாக வேண்டும். இதற்கான ஆன்மீக உணவே மூன்றாம் பிறைத் தரிசனமாகும்.

ஸ்ரீஅனுராதாகிரமண சரஸ்வதி உடையார்கோவில்

எனவே, எப்போதும் கம்ப்யூடரிலேயே உழல்பவர்கள், மூன்றாம் பிறை நாளில் சற்று வெளி வந்து வானில் மூன்றாம் பிறை தெரியும் வரை முழுமையாகத் தரிசித்து, ஸ்ரீசுசரித சரஸ்வதி, ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி, ஸ்ரீசந்த்ர மெளீஸ்வர மூர்த்திகளை நன்கு மனதாரத் தியானிக்க வேண்டும். இதன் மூலம் கண்கள் மற்றும் மூளை நாளங்களுக்கு சாந்தத்தையும், ஆன்ம சக்தியையும் பெற்றுத் தர வேண்டும்.
கம்ப்யூடர் சில விதங்களில் மனித சமுதாயத்திற்கு உதவிகரமானதாக இருந்தாலும், பலவிதங்களில் தீமையும் பயக்கின்றது. இது கம்ப்யூடரின் குற்றமல்ல! இதனை ஆக்கிய மனித நெறிகளே இதற்குக் காரணமாகும். எனவே கம்ப்யூடரால் ஆவதும், அழிவதும் மனித குண குணாதிசயங்களால்தான் என அறிக! இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, கம்ப்யூடரின் அருகே சந்த்ர கலா துர்க்கைச் சக்கரத்தை வைத்து, சந்த்ர கலா துர்க்கைத் துதிகளையும் ஓதி வர வேண்டும். சந்த்ர கலா துர்க்கைச் சக்கரம் கிடைப்பது அரிதே!
மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் எந்த நட்சத்திரம் பரிபாலனம் கொள்கிறது என அறிந்து கொள்தல் மிகவும் முக்கியமானதாகும். மூன்றாம் பிறைத் தரிசன நாள் தோறும் சந்திர சேகர அஷ்டகத் துதிகளையும், அப்பய தீட்தரின் சந்த்ர கலா துர்க்கைத் துதிகளையும் ஓதி வருதல் வேண்டும்.

பதவியில் உருவாகும் அதிகாரத்தையும், பிறருடைய பதவி உயர்வைத் தட்டிப் பறித்துப் பதவி வெறியால் அக்கிரமங்கள் செய்து வருவோரும் பலத்தத் தீவினைகளுக்கு ஆளாவர். அவர்கள் கண்ணெதிரிலேயே சந்ததிகள் தீயொழுக்கத்தில் மிதப்பர். இவர்கள் தக்கப் பரிகாரம் வழிகளைப் பெற்றிட, கண்டிப்பாக மூன்றாம் பிறைச் சந்திர நாளில், தேவேகோட்டை - நாட்டரசங் கோட்டையில் உள்ள ஸ்ரீகண்ணாத்தாள் ஆலயத்தில் மூன்றாம் பிறைத் தரிசனத்தை முழுக்கவே குடும்பத்துடன் பெற்று, பால் வகைப் பொருட்களையும், தேனில் தோய்த்த அத்திப் பழங்களையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர வேண்டும்.

எதைக் காண வேண்டும் ?

நான்கு கரங்களுடன், ஆயுதங்களுடன் தெய்வ மூர்த்திகள் அருள்வது ஏனோ? எங்கும் நிறைந்தருளும் பரம்பொருளை உயத்து உணர்வதே (இறைப்) பகுத்தறிவு! அகங்காரம், ஆணவம், மாயை, கர்வம், பயனற்றப் புத்தகப் படிப்பு போன்றவற்றாலும், சுய நலத்தாலும், சுக போகங்களுக்கு அடிமையாவதாலும் நம்பிக்கை, நாணயம், நேர்மை, அறம், சத்தியம், தர்ம குணங்களைக் கலியுக மனிதன் இழந்து, ஆறறிவில் இருந்து கீழ்நிலைப்படுகின்றான். இதனால், அவனால், தானாகவே இறைமையை உணரும் பகுத்தறிவையும் இழக்கின்றான்.
இந்நிலையில், அன்பின் அம்சங்களை மாசுபடுத்திக் கொண்டு, தடுமாறும் மனித நிலைக்கு ஏற்ப, அவன் சிறிது சிறிதாகப் புனிதத்தைப் பெற்று பரிசுத்த அன்பினையே இறைமையாக உணரும் வண்ணம், இறைவனே, தன்னை உருவக, உருவப்படுத்திக் கொண்டு காட்சி அளிப்பதே நான்கு கரங்களோடு அபயம் தருவதாகவும், அரவணைப்பதாகவும், நல்வரம் தருவதாகவும், தீவினைகளை நீக்கத் துணை புரிபவராகவும் தக்க உருவத்தோடு காட்சி தருகின்ற அவதார உருவமாகும். எனவே இறை வடிவு பகுத்தறிவை இழந்து வாடும் மனிதனை ஆக்கப்படுத்திடவே! தாயின் உருவைக் கண்டு குழந்தை மனப் பாதுகாப்பு பெறுவது போன்றது இது!

ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் திருவலஞ்சுழி

அனைவரிடத்திலும் செலுத்தும் தூய்மையான அன்புதான் இறைவனிடம் பக்தியாகப் பரிமளிக்கும். இறைவனின் உண்மையான வடிவையும் காட்டும். இதுவே ஞானக் காதல். ஆனால் தற்காலத்தில் காதல் என்றால் தவறாக அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. பரிசுத்தமான அன்பில்தான், புனிதமான காதல் பிறக்கும். காதல் என்பது புனிதமான அன்பு!
தெய்வ மூர்த்திகள் ஏன் ஆயுதங்களைத் தாங்கிட வேண்டும்? அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை, தேங்காய் உடைத்தல், காய்கறிகளை நறுக்குதல் போன்ற நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்திப் பிறகு பத்திரமாக எடுத்து வைக்கின்றோம் அல்லவா? எனவே, ஒரு பொருளை எவ்வகையில் அறிவுப் பூர்வமாகப் பயன்படுத்திட வேண்டும் என்று அறிவு செறிய உணர்வித்து உதவுவதும் ஆயுதமாகும். கத்தி, பிளேடு, மண்வெட்டி போன்ற ஆயுதங்களை மனிதன் பயன்படுத்துகையில், எந்த ஒரு மனிதனிடமும் தானாகவே கூடுதல் கவனம் உண்டாகிறது அல்லவா!
சாதாரணமான கருவிகளுடன் பழகுகையில், கூடுதல் கவனமான ஆறறிவுடன், பகுத்தறிவுப் பூர்வமாக ஆயுதத்தைச் செயல்படுத்துகையில், தெய்வத்திடம் துலங்கும் ஆயுதமானது, வெறும் ஆயுதமாகவா இருக்கும்? தீய சக்திகளையும். வல்வினைகளையும் களைய வல்லன அல்லவா!
எனவே, தெய்வங்களிடம் துலங்கும் வில், வேல், சங்கு, சக்கரம், மழு போன்றவற்றை வெறும் ஆயுதமெனப் பொருள் கொள்ளலாகுமா? தெய்வீகப் பூர்வமாகச் செயல்படும் அதியற்புத சாதனங்கள் அல்லவா அவை யாவும்! அனைத்து உயிர்களையும் காக்கும் பரம்பொருள் வடிவங்களில் துலங்குபவை வெறும் ஆயுதங்கள்தாமா?

சங்கு, சக்கரம், மான், மழு போன்ற தெய்வீக சாதனங்கள் யாவும் சித்தர்கள், மகரிஷிகளின் வடிவுகளேயாகும். சித்தர்களும், மகரிஷிகளும், சத்குருமார்களால் இறையாணையாக, மக்களைச் செம்மைப்படுத்தப் பூவுலகிற்கு வருபவர்கள்தாமே! பின், எவ்வாறு தெய்வ மூர்த்திகளின் கரங்களில் உள்ளவை, வெறும் ஆயுதங்கள் என்ற கண்ணோடு பார்க்கக் கூடும்?
எனவே, தெய்வத்தை, தெய்வ வடிவைத் தரிசிக்கையில், கண்ணோட்டம் மிகவும் முக்கியமானதாகும். கண் ஓட்டம் எனில், கண்களால் பார்த்தவுடன் உள்மனதில் எழும் மன ஓட்டங்களாகும். ஏனெனில், பார்க்கக் கூடாத காட்சிகளைக் கண்களால் காணும் மனிதன், அதனால் உந்தப் பெற்று, முறையற்ற காம உணர்ச்சிகள் எழுந்தும், வேறு வகை குணங்களும் தோன்றியும் பெரும் பாவங்களைப் புரிகிறான். மனதால் தவறாக எண்ணுவதும் கூடப் பெரும் பாவமே!
மேலும், கண்களால் பார்த்து வருவதுதான் பகைமை, விரோதம், குரோதம், பொறாமை போன்றன யாவும், ஆலயத்தில் பாதாதி சிரசு தரிசனம் என்பதாக, இறை மூர்த்தியின் பாதத்திலிருந்து சிறிது சிறிதாக கண்களை உயர்த்தி, சிரசு, கிரீடம் வரை கண்களை மெதுவாகச் செலுத்தி, மூர்த்திகளைப் பரிபூரணமாகத் தரிசிக்க வேண்டும்.

ஸ்ரீஅஷ்டோத்திர சண்டிகேஸ்வரர் நகர்

கோயிலில், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னிதிகள் சற்று யோகப் பூர்வமாக, இடுங்கியவாறு, ஒருவர் மட்டுமே பக்கவாட்டில் சென்று தரிசிக்கும்படி இருக்கும். சென்று பார்ப்பது கஷ்டம், கோமுகம் அருகில் இருப்பதால் நாறும் என்று அசிரத்தையால் பலரும் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னிதி அருகேயே செல்வதில்லை.
இவ்வாறு யோகப் பிரமாணமான கோண அம்சங்களுடன் அமைந்துள்ள சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னிதிகளுக்குக் கஷ்டப்பட்டுச் சென்று, வளைந்து நின்று தரிசித்தால்தான், முப்பத்து முக்கோடி யோகக் கோணங்களுடன் தவத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியின் கண்ணொளி தரிசனம் கிடைக்கும்.
மேலும், இவ்வாறு தட்டுத் தடுமாறி, சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சன்னதி அருகே செல்லும் போதுதான், உடற் கோணங்களில் யோக சக்திகள் உண்டாகும். உங்களையும் அறியாமல் சில நின்ற நிலை யோகப் பயிற்சிகளையும் இங்கு இவ்வகையில் நீங்கள் செய்யலாகின்றீர்கள். இவைதாம் மனக் கோணல்களையும் எளிதில் அகற்றும்.
எனவே, ஆலயத்தில் அனைத்துப் பிரகாரங்களிலும், விமானங்களிலும், கோபுரங்களிலும் உள்ள அனைத்து மூர்த்திகளையும், கண்ணார, கண் நிறைய, கண் முழுவதும் நிறையுமாறு பல கோணங்களிலும் தரிசிக்க வேண்டும். மூலவரையும், அம்பிகையையும் வெகு வேகமாக தரிசித்து விட்டு ஓடி வந்து விடாதீர்கள்.
இவ்வாறாகவே தினமும் காணக் கூடாததைக் கண்டு கண் நாளங்களில், மனதில், உடலில், புத்தியில், உள்ளத்தில் நிறையும் மாசுள்ள எண்ணத் தேக்கங்களை இவ்வகையில்தான் நிதமுமே அனைத்து மூர்த்திகளையும் கண்கள் நிறைய முழுதும் தரிசித்து, சிறிது சிறிதாகத் தினமுமே தூய்மைப்படுத்தி வர வேண்டும்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

மேற்கண்ட வகையில் ஒரு அரை மணி நேரமாவது, காலையிலும், மாலையிலும் ஆலய சகல தேவா மூர்த்தி தரிசனத்திற்காக ஒதுக்கி வைத்துத் தரிசித்தால்தான், கண் நாளங்களும், தலை முதல் கால் பாதம் வரையில் உள்ள அனைத்து உடல் நாளங்களும் ஆக்கமும், ஊக்கமும் பெறும்.
கண்களைச் சுற்றி இருக்கும் கண் நாளங்களைத் தூய்மைப்படுத்தவே, ஆண், பெண் இரு பாலரும் கண்களுக்கு மையிட வேண்டும். இது கண் நாளங்களைச் செம்மைப்படுத்தி, தகாத எண்ணங்களைகத் தடுத்துக் காக்கும். ஆலயங்களுக்குக் கண் மை அளிப்பதிலும், ஏழைகளுக்கான கண் மை தானத்திலும் இத்தகைய நன்மை பயக்கும் தர்ம பலாபல சக்திகள் நிறைய உண்டு.
காமாக்ஷீ, மீனாக்ஷீ, விசாலாக்ஷீ போன்று அக்ஷி என்ற பெயர் கொண்டு வரும் அம்பிகைகள், இறையருளைக் கண் ஒளித் திரட்சிக் கிரணங்களாக அருள வல்லவர்கள். லோசனம் என்றால் கண் என்று பொருள். (அ)லோசன விரத நாளில், அக்காலத்தில் வீட்டிற்குள் மட்டும் பெரும்பாலும் நாள் முழுதும் கண்களை மூடி இருந்து, நல்லதை மட்டும் பார்த்து, விரதம் இருந்து, பின் பிறர் துணையுடன் ஆலயத்திற்குச் சென்று, விசாலாட்சி, காமாட்சி, மீனாட்சி மூர்த்திகளைத் தரிசிக்கும் விரத நாளாகவும் இந்நாள் பொலிகிறது.
கண்ணாத்தா, கண்ணம்மா, கண்ணாம்பாள், கண்ணன், கண்ணாயிரமுடையார், கண்ணாயிர மூர்த்தி போன்ற மூர்த்திகளை விரதம் இருந்து தரிசித்திடுக. வாழ்வில் பார்க்கக் கூடாததைப் பார்க்கும் நிலை வாராது காக்கும் விரதம். இதனால் வாழ்வில் கண்ணெதிரே தகாத சம்பவங்கள் நிகழாமலும். காணாமலும் தற்காத்துக் கொள்ள உதவும். இவ்வாறு வாழ்வில் பெரும் விபத்து போன்ற மனபீதிகளைத் தரும் காணக் கூடாத எதையேனும் பார்த்தவர்களின் மன பீதியும் அகலத் துணை புரியும். அலோசன விரத நாளில் மீனாட்சீ, காமாட்சீ, விசாலாட்சீ ஆகிய மூன்று மூர்த்திகளையும் சாட்சூஷோபநிஷத் மந்திரங்களை ஓதி ஒரே நாளில் தரிசித்தல் நன்று.
சென்னை அருகே மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் போன்று ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய மூன்று அம்பிகை தரிசன முறைகள் சில தலங்களில் உண்டு. இதனை அலோசன விரத நாளில் கடைபிடிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam